வீரமாமுனிவர்
November 23, 2024 2025-05-08 10:36வீரமாமுனிவர்
வீரமாமுனிவர் (1680-1747)
இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி. இவர், தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார்; ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தாலும் தமிழ்மொழியின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமிழ்மொழிப் பற்றினால் “தைரியநாதர்” என முதலில் சூட்டிக்கொண்ட தம் பெயரைத் தனித்தமிழாக்கி “வீரமாமுனிவர்” எனச் சூட்டிக் கொண்டார். தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
இவர், தமிழில் முதன்முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார்; தேம்பாவணி என்னும் கிறித்தவக் காப்பியத்தை இயற்றினார்; தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்; தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலைப் படைத்தார்; கலம்பகம், அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை இயற்றினார்; பரமார்த்தகுரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
“தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது; தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” எனச் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர் வீரமாமுனிவர். ஆனால், நந்தமிழைக் கற்றுத் தமிழில் இலக்கண இலக்கியங்கள் இயற்றித் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றியுள்ளார்.
நகைசெய் தன்மையி னம்பெழீ இத் தாய்துகள்
பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற
முகைசெய் மேனி தழுவிமுத் திட்டலுங்
குகைசெய் யின்பெழக் கோலமிட் டொத்ததே. – வீரமாமுனிவர் , தேம்பாவணி
பொருள் : குழந்தை இயேசு புன்னகை பூத்தார். அதனைக்கண்ட தாய் மரியாளின் மனத்தில் மகிழ்ச்சி பொங்கி எழுந்தது. தீவினையைப் பகைத்த தன்நெஞ்சத்தில் ஆர்வமும் மகிழ்ச்சியும் கலந்து, பூப்போன்ற மேனியுடைய திருமகனை அணைத்து முத்தமிட்டாள். இக்காட்சி அன்பு மேலிடக் குகையொன்று குனிந்து கோலமிட்டது போலிருந்தது.
சொற்பொருள் : நகை- புன்னகை; முகை – மொட்டு; மேனி – உடல்.
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : வீரமாமுனிவர்
இயற்பெயர் : கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
பெற்றோர் : கொண்டல் போபெஸ்கி – எலிசபெத்
பிறந்தநாடு : இத்தாலி
அறிந்தமொழிகள் : இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமற்கிருதம்
சிறப்பு : முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை
இயற்றிய நூல்கள் : ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம், கித்தேரியம்மாள் அம்மானை.
காலம் : 08.11.1680 முதல் 04.02.1747 வரை.
நூல் குறிப்பு : தேம்பாவணி = தேம்பா + அணி = வாடாதமாலை; தேம்பாவணி = தேன் + பா + அணி = தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை. இந்நூல், இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக்கொண்டு பாடப்பட்டது. இந்நூல், கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இந்நூலில் மூன்று காண்டங்களும், முப்பத்தாறு படலங்களும் உள்ளன; பாடல்களின் எண்ணிக்கை மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து.
தேம்பாவணி நூல் குறிப்பு
-
தேம்பாவணி = தேம்பா + அணி.
-
தேம்பாவணி = தேன் + பா + அணி (தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)
-
இநூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று சிறப்பிப்பர்.
-
இந்நூலின் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன
-
கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
-
17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு
-
பெயர் – வீரமாமுனிவர்
-
இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
-
பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
-
பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
-
அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
-
தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
-
சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
-
காலம் – 1680-1747
இஸ்மத் சன்னியாசி எனப்படும் வீரமாமுனிவர்
-
வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
-
இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் மன்னர் வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
-
“இஸ்மத் சன்னியாசி” என்பது பாரசீக சொல்.
-
இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பொருள்.
வீரமாமுனிவர் படைத்த நூல்கள்
-
சதுரகராதி (தமிழின் முதல் அகராதியான)
-
தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
-
சிற்றிலகக்கியங்கள்
-
உரைநடை நூல்கள்
-
பரமார்த்தக் குரு கதைகள்
-
மொழிபெயர்ப்பு நூல்கள்
-
ஞானஉபதேசம்
-
திருக்காவலூர்க் கலம்பகம்
“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”
கருணையாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக்கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.
தேம்பாவணி
தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது. கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது. இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட து தேம்பாவணி. இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.
தேம்பாவணி – வீரமாமுனிவர்
முன்நிகழ்வு
கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார். கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர்
1. பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப் பூவோடு
அழுங்கணீர் பொழிந்தான் மீதே.
பாடலின் பொருள் :
கருணையன், தன் மலர் போன்ற கையைக் குவித்து, “பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” என்று கூறி, குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். இவ்வுலகில் செம்மையான அறங்களையெல்லாம் தன்னுள் பொதிந்து வைத்து, பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்.
சொல்லும் பொருளும் : சேக்கை – படுக்கை; யாக்கை – உடல்; பிணித்து – கட்டி; வாய்ந்த – பயனுள்ள;
2. வாய்மணி யாகக் கூறும்
வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்
தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்
தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ.
பாடலின் பொருள்
“என் தாய், தன் வாயாலே மணிபோலக் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணிமாலையென அசைந்து, அழகுற வாழ்ந்தேன். ஐயோ! இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப்போல, நானும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேனே!”
சொல்லும் பொருளும் : இளங்கூழ் – இளம்பயிர்; தயங்கி – அசைந்து; காய்ந்தேன் – வருந்தினேன்;
3. விரிந்தன கொம்பில் கொய்த
வீயென உள்ளம் வாட
எரிந்தன நுதிநச்சு அம்புண்டு
இரும்புழைப் புண்போல் நோகப்
பிரிந்தன புள்ளின் கானில்
பெரிதழுது இரங்கித் தேம்பச்
சரிந்தன அசும்பில் செல்லும்
தடவிலா தனித்தேன் அந்தோ!
பாடலின் பொருள்
“என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல வாடுகிறது. தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வருந்துவது போன்றது என் துயரம். துணையைப் பிரிந்த ஒரு பறவையைப்போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன்; சரிந்த வழுக்கு நிலத்திலே, தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்.”
சொல்லும் பொருளும் : கொம்பு – கிளை; புழை – துளை; கான் – காடு; தேம்ப – வாட; அசும்பு – நிலம்;
4. உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன்; மெய்தான்
விரும்பிய உணவு தேடச்
செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்; தாய்தன்
கைமுறை அறிந்தேன் தாயும்
கடிந்தெனைத் தனித்துப் போனாள்.
பாடலின் பொருள்
“நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்; நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்; உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்; காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்; என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!”
சொல்லும் பொருளும் : உய்முறை – வாழும் வழி; ஓர்ந்து – நினைத்து; கடிந்து – விலக்கி;
5. நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே.*
பாடலின் பொருள்
நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்ததுபோன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், இவ்வாறு புலம்பிக் கூறினான். அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள, மணம்வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள, பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.
சொல்லும் பொருளும் : உவமணி – மணமலர்; படலை – மாலை; துணர் – மலர்கள்;
இஸ்மத் சன்னியாசி -தூய துறவி
வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார். இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார். இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.