Blog

ஆங்கிலேயர்‌ ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்

Class 59 இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌

ஆங்கிலேயர்‌ ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்

விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள்

ஃபராசி இயக்கம்

ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் 1818ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது. 1839இல் ஷரியத்துல்லா மறைந்த பிறகு இந்த கிளர்ச்சிக்கு அவரது மகன் டுடு மியான் தலைமை ஏற்றார். அவர் வரி செலுத்தவேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் நிலத்தையும் அனைத்து வளத்தையும் சரிசமமாக அனுபவிக்கவேண்டும் என்ற எளிய கொள்கையில் இந்த அறிவிப்பு பிரபலமடைந்தது. சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்திய டுடு மியான், ‘நிலம் கடவுளுக்குச் சொந்தமானது’ அறிவித்தார்.  எனவே வாடகை வசூலிப்பது அல்லது வரி விதிப்பது ஆகியன ஹாஜி ஷரியத்துல்லா இறைச்சட்டத்துக்கு எதிரானது என்றார். கிராம அமைப்புகளின்  கட்டமைப்பு  மூலமாக பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஒன்றுதிரட்டப்பட்டனர். 1862இல் டுடு மியான் மறைந்தபிறகு 1870களில் நோவா மியான் என்பவரால் இந்த இயக்கம் மீண்டும் உயிர்பெற்றது.

பரசத்தில் வஹாபி கிளர்ச்சி

வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டதாகும். வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 வாக்கில் தோன்றியது. வஹாபி போதனைகளால் பெரிதும் ஆழமாக ஈர்க்கப்பட்டவராக திகழ்ந்த இசுலாமிய மதபோதகர் டிடு மீர் என்பவர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமையேற்றார். ஜமீன்தாரி முறையால் குறிப்பாக ஒடுக்கப்பட்ட இசுலாமிய விவசாயிகள் மத்தியில் அவர் செல்வாக்குமிக்க நபராகத் திகழ்ந்தார்.

பழங்குடியினர் கிளர்ச்சி

கோல் கிளர்ச்சி (1831 – 1832)

கோல் (Kol) என்ற பழங்குடி இனத்தினர் பீகாரிலும் ஒரிசாவிலும் சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர். சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்குக் குத்தகைக்கு விட்டதே கோல்களின் கிளர்ச்சிக்கு உடனடிக்காரணமாகும்.

ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் 1831-32ஆம் ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி கோல் கிளர்ச்சியாகும். இது பிந்த்ராய் மற்றும் சிங்ராய் தலைமையில் நடந்தது.

சோட்டா நாக்பூர் பகுதியின் அரசர் வருவாய் வசூலிக்கும் பணியை வட்டிக்குப் பணம்கொடுப்போரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார். அதிக வட்டிக்கு கடன்கொடுத்தல் மற்றும் பழங்குடியினரைக் கட்டாயப்படுத்தி அவர்களின் பகுதிகளிலிருந்து வெளியேற்றுதல் போன்றவை கோல் இனத்தவரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

1831 டிசம்பர் 20ஆம் நாளில் சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா எழுநூறு கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. 1832 ஜனவரி 26க்குள் கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

வெளியாட்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்துதல், கொள்ளையடித்தல், கலவரம் செய்தல் ஆகிய வழிகளில் கோல்களின் தொடக்ககாலப் போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் அமைந்தன. அதனை அடுத்து வட்டிக்குப் பணம்கொடுப்போர் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேளங்களை முழங்கியும், அம்புகளை எய்தும் வெளியாட்களை வெளியேறச் செய்யும் எச்சரிக்கைகளை செய்தும் பல வகைகளில் பழங்குடியினத் தலைவர்கள் தங்கள் கிளர்ச்சி பற்றிய செய்தியைப் பரப்பினர்.

இவர்களின் கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிரான போருடன் முடிவுக்கு வந்தது. மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார். துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததற்காக அதிகாரிகள், இராணுவ வீரர்கள் ஆகியோருக்கு ஓராயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டது. கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19ஆம் நாள் சரணடைந்ததும், கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது. ஆங்கிலேய அரசு பெரிய அளவிலான வன்முறை மூலம் இந்தக் கிளர்ச்சியை அடக்கியது.

சாந்தலர்களின் கிளர்ச்சி(1855 – 1856)

பழங்குடிகளான சந்தால்கள் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு காட்டுப்பகுதிகளில் அங்கங்கே பரவியிருந்தபடி வாழ்ந்தார்கள். மஞ்சி என்றும் அவர்கள் அறியப்பட்டார்கள். தங்களின் தாய்மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள் ராஜ்மகல் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி, அதை டாமின்-இ-கோ (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள்.

பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும் வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டதால், சந்தால்கள் படிப்படியாகக் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். இத்துடன், உள்ளூர் காவல்துறையினராலும் அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள். இது அவர்கள் இழந்த பகுதியை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வைத்தது.

1855இல் சித்து மற்றும் கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்தவேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்.

1855 ஜூலையில் சந்தால்கள் ஜமீன்தார்களுக்கும் அரசாங்கத்துக்கும் விடுத்த இறுதி எச்சரிக்கை செவிமடுக்காமல் போனவுடன், ஆயிரக்கணக்கிலான சந்தால்கள் வில் மற்றும் விஷம் தடவிய அம்பு ஏந்திக்கொண்டு வெளிப்படையான கிளர்ச்சியைத் துவக்கினார்கள். தமது கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன்தார்கள், வட்டிக்கடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.ராஜ்மகால் மற்றும் பாகல்பூர் நோக்கி கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டப்போவதாக முழக்கமிட்டபடி பேரணியாகச் சென்றனர்

மகேஷ்பூர் போரில் மஞ்சிகளில் பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற உடையை அணிந்திருந்தார்கள். பின்னாட்களில் இது அதிகாரத்துக்கு உரிமைகோரும் அடையாளத்துக்கான ஆடை ஆனது. கிளர்ச்சியின் முதல் வாரத்தில் பத்து பேர் அடங்கிய ஒரு குழு மோங்கபர்ரா என்னும் கிராமத்தைத் தாக்கித் தீக்கிரையாக்கியது. கிளர்ச்சியாளர்களில் பெண்களும் இருந்தார்கள்.

தொடக்கத்தில் சித்தோ சந்தால்களின் தலைவராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கானு கிளர்ச்சியை நடத்தினார்.கிளர்ச்சியின் பிற்பகுதியில் விவசாயிகளும் சேர்ந்துகொண்டார்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். இதன் விளைவாக, கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேயர் தரப்பிலிருந்து மிருகத்தனமான நடவடிக்கைகள் தொடங்கின.

இராணுவம் குவிக்கப்பட்டு, சந்தால் கிராமங்கள் பழிக்குப் பழியாக ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கணக்கீட்டின்படி, கிளர்ச்சி இறுதியாக ஒடுக்கப்படும் முன்பு, 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையான கிளர்ச்சியாளர்களில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டார்கள் எனத் தெரிகிறது.

1855இல் சாந்தலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை உருவாக்கும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேறியது.

கருநீலச்சாய (இண்டிகோ) கிளர்ச்சி 1859-1860

ஐரோப்பியர்கள் இண்டிகோ பயிரிட இந்திய விவசாயிகளை பணியில் அமர்த்தினார்கள். பின்னர் அது சாயமாக தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அந்த சாயம் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. விவசாயிகள் இந்தப் பயிரை பயிரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆங்கிலேய முகவர்கள் பயிரிடுவோருக்கு நிலத்துக்கான வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிப்பதற்காக, ரொக்கப்பணத்தை முன்பணமாகக் கொடுத்து உதவினர். ஆனால் இந்த முன்பணம் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்படவேண்டும். உணவு தானியப் பயிர்களுக்குப் பதிலாக இண்டிகோ பயிரைப் பயிரிட விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர். பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு மிகக்குறைந்த விலையையே  விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர். இந்த குறைந்த தொகையைக் கொண்டு தாங்கள் வாங்கிய முன்பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் கடனில் மூழ்கினர். எனினும், லாபம் கிடைக்காத நிலையிலும், மீண்டும் இண்டிகோ பயிரை பயிரிடும் மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். விவசாயிகளால் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியவே இல்லை. தந்தை வாங்கிய கடன்கள் அவரது மகன் மீதும் சுமத்தப்பட்டன. இண்டிகோ கிளர்ச்சி 1859ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கிளர்ச்சி ஒரு வேலைநிறுத்த வடிவில் தொடங்கியது. வங்காளத்தின் நடியா மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிடப்போவதில்லை என மறுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் இண்டிகோ பயிரிடப்பட்ட வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. இந்தக் கிளர்ச்சி பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகள் இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றனர். குடங்கள் மற்றும் உலோகத்தட்டுக்களை ஆயுதங்களாக ஏந்தியபடி பெண்களும் ஆடவரோடு இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆங்கிலேயப் பண்ணை கொடுமைகள் குறித்து கல்கத்தாவில்  வாழ்ந்த அப்போதைய இந்திய பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். நீல் தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை தீனபந்து மித்ரா எழுதினார். இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்களிடையே இண்டிகோ விவசாயிகள் குறித்த பிரச்சனைகளை கவனத்தில் கொண்டுவர இந்த நாடகம் பயன்பட்டது. 1859-60இல் மேற்கொள்ளப்பட்ட இந்த இண்டிகோ புரட்சியின் மூலம் விவசாயிகள் பண்ணையார்களை வடக்கு வங்காளத்திலிருந்து வெளியேற்றினர்.

தக்காண கலவரங்கள் 1875

அதிக அளவிலான வரி விதிப்பு வேளாண்மையைப் பாதித்தது. பஞ்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்தன. 1875ஆம் ஆண்டு மே மாதத்தில் தக்காணத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன்முதலாக வெடித்ததாகப் பதிவாகியுள்ளது. பூனா மற்றும் அகமதுநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 30 கிராமங்களில் இதே போன்ற கலவரங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகியது. குஜராத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோரை குறிவைத்துதான் இந்த கலவரங்கள் பெரும்பாலும் அரங்கேறின. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் விவசாயிகள் நேரடியாக வருவாயைஅரசுக்கு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் புதிய சட்டப்படி எந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டதோ அந்த நிலத்தை எடுத்துக்கொண்டு ஏலம் விட்டு கடன் தொகையை எடுத்துக்கொள்ள கடன்வழங்கியோருக்கு அனுமதி கிடைத்திருந்தது. இதன் விளைவாக உழும் வர்க்கத்திடமிருந்து நிலம் உழாத வர்க்கத்திடம் கைமாறத் தொடங்கியது. கடன் என்னும் மாய வலையில் சிக்கிய விவசாயிகள்  நிலுவைத் தொகையைச் செலுத்த இயலாமல் பயிரிடுதலையும் விவசாயத்தையும் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முண்டா கிளர்ச்சி

பிர்சா முண்டா வழிநடத்திய முண்டாக்களின் கிளர்ச்சி (உல்குலன்) 1899-1900 காலகட்டத்தில் நடைபெற்றது. முண்டாக்கள் பீகார் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர். ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொதுநில உரிமை முறை அழிக்கப்பட்டது. முண்டாக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஜாகீர்தார்களும் திக்காடர்களும் (பெரும் விவசாயி) வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக்கொண்டனர்.

பிர்சா முண்டா குத்தகைக்குப் பயிரிடும் விவசாயிகளின் குடும்பத்தில் 1874இல் பிறந்தார். ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என அவர் தன்னை அழைத்துக்கொண்டார். பழங்குடிகளின் நிலங்களைப் பழங்குடி அல்லாதோர் ஆக்கிரமிப்பதை இவரது தலைமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள். முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார்.

பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார். சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள். சாயில் ரகப் படுகொலை பிர்சா ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.

ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள். இத்தனைக்குப் பிறகும் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்வதைக் காண முடிகிறது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார். அவருடைய பெயர் தொடர்ந்து அப்பகுதியின் மலைவாழ் மக்களை ஈர்ப்பதாக உள்ளது.

 

1857 பெருங்கிளர்ச்சி

1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கிலேய, இந்திய வரலாற்று அறிஞர்களிடையே பெரும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் இவ்வெழுச்சியை இராணுவக் கலகம் என்றும் இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறி சாதாரணமாகப் புறந்தள்ளுகின்றனர்.

வங்காளப் படையின் ஆங்கிலத் தளபதியான கர்னல் மல்லீசன் “The Making of the Bengal Army” வங்காளப்படையின் உருவாக்கம் எனும் சிறு ஏட்டில் “ஒரு இராணுவ வீரர்களின் கலகம், விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று குறிப்பிடுகிறார்.

வரலாற்றறிஞர் கீன் (Keen) இக்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைக்கிறார். டல்ஹௌசியின் இணைப்புக் கொள்கைகளாலும் சீர்திருத்த வேகத்தாலும் பாதிப்புக்குள்ளான இளவரசர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குமுறல்கள் என ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளை கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் தீப்பொறியை ஏற்படுத்திப் பற்றி எரியச் செய்தன.

எட்வர்டு ஜான் தாம்சன் இந்நிகழ்வை “பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என விளக்கியுள்ளார். 1909இல் வெளியான சாவர்கரின் The War of Indian Independence (இந்திய விடுதலைப் போர்) எனும் தனது நூலில் ஆங்கிலேயரால் இதுவரை வெறும் இராணுவப் புரட்சியே என்று வர்ணிக்கப்பட்ட இந்நிகழ்வு உண்மையில் அமெரிக்க சுதந்திரப் போரைப் போன்ற ஒரு விடுதலைப் போரே என வாதிடுகின்றனர். ஆங்கிலம் படித்த மத்தியதர மக்கள் இவ்வெழுச்சியில் எந்த ஒரு பங்கையும் வகிக்காவிட்டாலும் தேசிய வரலாற்றறிஞர்கள் இவ்வெழுச்சியை இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றே கூறுகின்றனர்.

பெருங்கிளர்ச்சிக்கான காரணங்கள் நாடுகளை ஆக்கிரமித்தல்

ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை

1840 மற்றும் 1850 களில் இரண்டு முக்கியக் கொள்கைகளின் மூலம் அதிக நிலப்பகுதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.

மேலாதிக்கக் கொள்கை: ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள். உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

வாரிசு இழப்புக்கொள்கை: அரசுக்கட்டிலில் அரியணை ஏற நேரடி ஆண்வாரிசு இல்லையெனில் அந்த ஆட்சியாளரது இறப்புக்குப்பின் அந்தப்பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும். சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக்கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.

டல்ஹௌசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் மூலமாக அவத்தையும் ஜான்சியையும் இணைத்ததும், கடைசி பேஷ்வாவின் தத்தெடுக்கப்பட்ட மகனான நானா சாகிபை அவமானகரமாக நடத்தியதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.

முறையான உரிமம் இல்லாமல், குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த இனாம் கமிஷனின் (1852) அறிக்கையின்படி 21,000க்கும் மேற்பட்ட தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர். மேலும் அவத்தில் அரச குடும்பத்தின் ஆதரவை நம்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களும், வாழ்விழந்தனர். இவ்வாறு டல்ஹௌசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.

பெருஞ்சுமையான நிலவருவாய் முறை

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகளில் இருந்ததைக் காட்டிலும் தற்போது நிலவரி மிக அதிகமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர்.

ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர். இதன்படி நிலத்தில் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதே அளவு வரி வசூலிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் துயரங்களுக்கு உள்ளாயினர்.

முஸ்லீம் உயர்குடியினரும் கற்றறிந்தோரும் ஒதுக்கப்படுதல்

முஸ்லீம்கள் பெரும்பாலும் அரசுப் பணிகளையே சார்ந்திருந்தனர். கம்பெனியின் ஆட்சிக்கு முன்னர் முந்தைய அரசுகளில் மதிப்புமிகுந்த பணிகளில் அவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். குதிரைப்படைத் தளபதிகளாகச் சிலர் உயர்ந்த ஊதியம் பெற்று வந்தனர்.

ஆனால் கம்பெனியின் ஆட்சியில் நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.

இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது

1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக்குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர். அதனை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்தனர். இத்தகைய ஆடைக் கட்டுப்பாடுகள் சிப்பாய்களை கிறித்தவ மதத்துக்கு மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் அஞ்சினார்கள்.

அதேபோன்று 1824ஆம் ஆண்டு கல்கத்தா அருகே பாரக்பூரில் சிப்பாய்கள் கடல்வழியாக பர்மா செல்ல மறுத்தனர். கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினார்கள். ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர். ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டது. அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டதோடு மூத்த படையினரால் இனக் குறியிடப்பட்டு அவமதிக்கப்பட்டார்கள்.

மத உணர்வுகள்

1856ஆம் ஆண்டு சட்டமானது வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது. சாதிப்பற்றை, கைவிட்டு அவர்கள் படைகளில் சேரவேண்டும். மேலும் சதிஒழிப்புச் சட்டம், விதவை மறுமணத்தை சட்டபூர்வமாக்கியது, பெண் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான சட்டம் ஆகியவை சமய நம்பிக்கைகளில் ஆங்கில அரசு தலையிடுவதாகக் கருதப்பட்டது.

1850இல் இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி சட்டம் (Lex Loci Act) கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மூதாதையரின் சொத்துக்களில் உரிய பங்கினைப் பெறும் உரிமையை அளித்தது. இது வைதீக இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

பெருங்கிளர்ச்சியின் போக்கு

இப்பெருங் கிளர்ச்சி கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இராணுவக் கலகமாகவே தொடங்கியது. புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது. பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம்  கொண்டனர். அவற்றை நிரப்பும் முன் அதை வாயால் கடிக்கவேண்டி இருந்தது (இந்துக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பசு புனிதம் வாய்ந்ததாகவும், முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடை செய்யப்பட்ட உணவாகவும் இருந்தது).

மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய இராணுவ மேலதிகாரியை சுட்டுக் கொன்றார். தொடர்ந்து அங்கு இராணுவக் கலகம் வெடித்தது. கைது செய்ய உத்தரவிட்டும் அவரது சக சிப்பாய்கள் மங்கள் பாண்டேவை கைது செய்ய மறுத்துவிட்டனர். மங்கள் பாண்டேயும் வேறு பலரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அதிகரித்து அதனையடுத்து வந்த நாட்களில் கீழ்ப்படிய மறுத்தல் போன்ற நிகழ்வுகள் அதிகரித்தன. அடுத்த மாதம் மீரட் நகரில் தோட்டாக்களைப் பெற வேண்டிய 90 வீரர்களில் ஐவர் மட்டுமே உத்தரவுக்கு அடிபணிந்தனர்.

மே மாதம் 10ஆம் நாளில் மூன்று ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் கிளர்ச்சியில் இறங்கி தங்கள் உயர் அதிகாரிகளைக் கொன்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களை விடுதலை செய்தனர். மறுநாள் தில்லியை அடைந்த அவர்கள் ஐரோப்பியர் பலரைக் கொன்று நகரைக் கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள் இரண்டாம் பகதூர்ஷாவை பேரரசராகப் பிரகடனம் செய்தனர்.

கலவரம், பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது ஆகியன அம்பாலா, லக்னோ, மீரட் ஆகிய இராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாயின.

ஜுன் மாதத்தில் கிளர்ச்சி ரோகில்கண்ட் பகுதிக்குப் பரவியது. ஒட்டுமொத்த கிராமப்புறமும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. கான் பகதூர் கான் தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டார். புந்தேல்கண்ட் பகுதியும் ஆற்றிடைப்பகுதி முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது.

ஜான்சியில் ஐரோப்பியர் கொல்லப்பட்டு 22 வயதான லட்சுமிபாய் அரியணை ஏற்றப்பட்டார் கான்பூரில் நானா சாகிப் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன.

கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச் செய்தது. நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபதி ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானா சாகிப்பைத் தோற்கடித்தார். ஆங்கில இராணுவ அதிகாரி நீல் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர். நவம்பர் மாத இறுதியில் தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றினார். ஆனால் அது விரைவில் காம்ப்பெல் என்பவரால் மீட்கப்பட்டது.

ஹென்றி லாரன்சால் பாதுகாக்கப்பட்ட லக்னோ ஆளுநர் மாளிகை கிளர்ச்சியாளர்களின் வசமானது. நானா சாகிப்பை ஹேவ்லக் தோற்கடித்த பின்னர்
லக்னோவைக் கைப்பற்ற விரைந்தார். ஆனால் அவர் திரும்ப நேர்ந்தது.

ஜூலை மாத இறுதியில் ஜான் லாரன்ஸால் தில்லிக்கு அனுப்பப்பட்ட ஜான் நிக்கல்சன் அதைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார். அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் சரணடைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிகளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர். ஆகவே அவர்கள் லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மஹாலோடு (நவாப் வஜித் அலியின் மனைவி) சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். பெரும்பாலான வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது இவர்களும் பாதிப்புக்குள்ளாயினர்.

நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு அவத் நாற்றங்காலாக இருந்தது. அவத்தை சேர்ந்த வீரர்கள் குறைந்த ஊதியம் குறித்தும் விடுமுறை பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகள் பற்றியும் புகார் செய்தனர். அவர்கள் அனைவரும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் பின் அணி திரண்டனர். ராஜா ஜெய்லால் சிங்கின் தலைமையில் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு லக்னோவைக் கைப்பற்றினர். ஹஸ்ரத் மஹால் தன் மகன் பிர்ஜிஸ் கத்ராவை அவத்தின் அரசராக அறிவித்தார். கான்பூரில் பழிதீர்த்துக் கொண்ட நீல் லக்னோவில் தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1858 மார்ச் மாதத்தில்தான் லக்னோவை ஆங்கிலேயரால் கைப்பற்ற முடிந்தது.

சென்னை மௌன்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. அதை அப்புறப்படுத்த காங்கிரஸ் சத்தியாக்கிரகம் செய்தது. ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை (1937-39) இச்சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.

ஹக் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார். இருந்தபோதிலும் லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருக்கு ஆதரவான குவாலியர் அரசர் சிந்தியா தப்பியோடினார். ரோஸ் தன்னுடைய படைகளோடு லட்சுமிபாயுடன் நேரடியாக மோதினார்.

லட்சுமிபாய் போரில் வீரமரணமடைந்தார். வியப்பூட்டும் வகையில் கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

குவாலியர் விரைவில் மீட்கப்பட்டது. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டு அமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.

இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857இல் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ரங்கூனுக்கு (மியான்மர்) நாடு கடத்தப்பட்டார். அங்கேயே அவர் நவம்பர் 1862 இல் தனது 87வது வயதில் மரணமடைந்தார். அவருடைய இறப்போடு முகலாய அரசவம்சம் முடிவுக்கு வந்தது.

பெருங்கிளர்ச்சியின் விளைவுகள்
விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை 1858

அலகாபாத்தில் 1858 நவம்பர் 1இல் அரசு தர்பார் கூட்டப்பட்டது. விக்டோரியா ராணி வெளியிட்ட  பேரறிக்கை தர்பார் மண்டபத்தில் கானிங் பிரபுவால்
வாசிக்கப்பட்டது. கானிங் பிரபு இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயுமாவார்.

இதன் பின்னர் இந்தியா ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும். பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு அரசு செயலருக்கு உதவி செய்யும். இதன்  விளைவாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒழிக்கப்பட்டன. ஆங்கிலேய முடியரசும் நாடாளுமன்றமும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வர். கிழக்கிந்தியக் கம்பெனியின் படை கலைக்கப்பட்டு இங்கிலாந்து அரசின் படைகளோடு இணைக்கப்படும்.

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பேரறிக்கை ஏற்றுக் கொண்டது. அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் மதிப்பதாகவும் உறுதியளித்தது. மேலும் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.

1853ஆம் ஆண்டு சட்டமன்றம் ஐரோப்பியர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருந்ததால் அவர்கள் இந்தியரின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருந்ததே இச்சிக்கலுக்கு காரணம் என்று கூறிய அறிக்கை 1861இல் அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் எனக் கூறியது.

வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் நாடிணைப்புக் கொள்கையும் கைவிடப்படும். ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைச் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

கல்வி, பொதுப்பணித் திட்டங்கள் (சாலைகள் இருப்புப்பாதை, தந்தி, நீர்ப்பாசனம்) ஆகியவை முடுக்கிவிடப்படும்.

 

மெக்காலே கல்வி முறை

இந்தியா போன்ற ஒரு பெரிய காலனி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்க்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்ற நபர்கள் தேவைப்பட்டனர். தேவைப்படும் அளவிற்கான பெருவாரியானப் படித்த நபர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இந்நோக்கத்தில்தான் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றியது.

இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர் டி.பி. மெக்காலே ஆவார். இதன் விளைவாகக் காலனிய நிர்வாகம், ஆங்கில நவீனக் கல்வியை வழங்கும் பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கிற்று. 1857இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.

இந்தியர்களில் படித்த வகுப்பினர் ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக இருப்பதோடு ஆங்கில அரசின் தூண்களாகவும் திகழ்வர் என காலனியரசு எதிர்பார்த்தது. ஆங்கிலேயர் தங்கள் நலனுக்காக கற்றறிந்த இந்திய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அதை பாபு வர்க்கமென ஏளனப்படுத்தினர். இருந்தபோதிலும் அந்த வர்க்கத்தினரே இந்தியாவின் புரட்சிகர, முற்போக்கானப் படித்த வர்க்கமாக மாறி நாட்டின் விடுதலைக்காக மக்களைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினர்.

T.B. மெக்காலே 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.

மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக T. B. மெக்காலே 1823இல் பொதுக்கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது. கல்வி தொடர்பாகவும், எம்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழிகாட்டுவது இக்குழுவின் பொறுப்பாகும். இவ்வமைப்புப் பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தது. கீழ்த்திசைக் குழுவானது கல்வி பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது. ஆங்கில மரபுக்குழு மேலைக் கல்வியானது ஆங்கில மொழி வழியில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது.

மெக்காலே ஆங்கில மரபுக்குழுவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார். 1835இல் அவர் தனது புகழ்பெற்ற “இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் (Minute on Indian Education)” எனும் குறிப்புகளை வெளியிட்டார். இக்குறிப்புகளில் ஆங்கில வழியில் மேற்கத்தியக் கல்வி கற்பிக்கப்படுவதற்கு ஆதரவாக வாதிட்டார். ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் விருப்பத்தில், கருத்தில், ஒழுக்க நெறிகளில், அறிவில் ஆங்கிலேயராய் இருக்கும் ஒரு மக்கள் பிரிவினரை இந்தியாவிற்குள்ளே உருவாக்க அவர் விரும்பியதே அவர் ஆங்கில மரபுக் குழுவை ஆதரித்ததன் காரணமாகும்.

சமூக, சமய சீர்திருத்தங்கள்

அரசியல் செயல்பாடுகளில் மக்களை ஈடுபடுத்தும் முன்னர் சமூகத்தை சீர்திருத்த வேண்டியதை ஆங்கிலக் கல்வியைக் கற்றறிந்தோர் உணர்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. ராஜா ராம்மோகன் ராயால் நிறுவப்பெற்ற பிரம்ம சமாஜம், டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் உருவாக்கிய பிரார்த்தனை சமாஜம், சையத் அகமது கானால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அலிகார் இயக்கம் ஆகிய சீர்திருத்த இயக்கங்கள்.

2. மீட்பு இயக்கங்களான ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம், தியோபந்த் இயக்கங்கள்.

3. புனேயில் ஜோதிபா பூலே, கேரளாவில் நாராயண குரு, அய்யன்காளி, தமிழ்நாட்டில் இராமலிங்க அடிகள், வைகுண்ட சுவாமிகள் பின்னர் அயோத்தி தாசர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட சமூக இயக்கங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சீர்திருத்தவாதிகள் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு கற்றறிந்த மேலை நாட்டினர் முன்வைத்த சவால்களைப் எதிர்கொண்டு பதில் கூறினர். இச்சீர்திருத்தவாதிகளால் தூண்டப்பட்ட மீள் சிந்தனையின் விளைவாகவே இந்திய தேசிய உணர்வு உதயமானது.

1828இல் ராஜா ராம்மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். அதனைத் தொடர்ந்து ஏனைய சமூகப் பண்பாட்டு அமைப்புகளான பிரார்த்தனை சமாஜம் (1867) ஆரிய சமாஜம் (1875) ஆகியவை நிறுவப்பெற்றன. ராயின் முன் முயற்சி கேசவ் சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளால் தொடரப்பட்டன. சதி ஒழிப்பு, குழந்தைத் திருமண ஒழிப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளின் மீது இச்சீர்திருத்தவாதிகள் அதிக அக்கறை செலுத்தினர். இஸ்லாமியரிடையே அலிகார் இயக்கம் இதே பணியை மேற்கொண்டது. காலப்போக்கில் அரசியல் தன்மை கொண்ட அமைப்புகளும் கழகங்களும் பிரிட்டிஷ் இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றி மக்களின் குறைகளைப் பற்றி பேசத்தொடங்கின.

இனப்பாகுபாடு

ஆங்கிலேயர் இனப்பாகுபாட்டுக் கொள்கையைப்பின்பற்றினர். அரசு உயர்பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர். இதன் விளைவாக இந்திய உயர் வகுப்பாரிடையே ஏற்பட்ட வெறுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிராக இந்தியர்கள் புரட்சி செய்ய இட்டுச் சென்றது. குடிமைப் பணிக்கானத் தேர்வுகள் அறிமுகமானபோது வயது வரம்பு இருபத்தொன்று என நிர்ணயம் செய்யப்பட்டது. அத்தேர்வுகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அத்தேர்வுகளை இந்தியர்கள் எழுதவிடாமல் தடுப்பதற்காக வயது வரம்பு பத்தொன்பதாகக் குறைக்கப்பட்டது. இதைப்போலவே குடிமைப்பணித் தேர்வுகளை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்த வேண்டுமென இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் நடவடிக்கைகள்

அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124A அடக்குமுறை ஒழுங்காற்றுச் சட்டமும், பத்திரிக்கைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டமும் (1878) எதிர்ப்புகளைத் தூண்டின.

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டதும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான உள்நாட்டுத் தீர்வை உயர்த்தப்பட்டதும் நாடு முழுவதும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது.

ரிப்பன் அரசப்பிரதிநிதியாக இருந்தபோது இல்பர்ட் மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
ஆனால் ஐரோப்பியர் எதிர்ப்பால் ஐரோப்பியரின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

பத்திரிகைகளின் பங்கு

இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும். அது தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு உதவியது. பத்திரிக்கைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின. ராஜா ராம்மோகன்ராயின் வங்க மொழிப்பத்திரிகையான சம்வத் கௌமுதி (1821) பாரசீக மொழிப் பத்திரிகையான மிராத்-உல்-அக்பர் ஆகியவை மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பொது விஷயங்களை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் முற்போக்காக பங்காற்றின. பின்னர், மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக எண்ணற்ற தேசிய, பிராந்திய மொழிப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. தேசிய உணர்வைப் பேணுவதில் அவை மிகப்பெருந் தொண்டாற்றின. அவைகளுள் அமிர்த பஜார் பத்திரிக்கா, தி பாம்பே கிரானிக்கல், தி ட்ரிப்யூன், தி இண்டியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன முக்கியமானவையாகும்.

இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல்

வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், மேக்ஸ் முல்லர் போன்ற கீழ்த்திசைவாதிகள் ஆய்வுகளை மேற்கொண்டு அராபிய, பாரசீக, சமஸ்கிருத மொழிகளிலிருந்த மத, வரலாற்று இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தனர். இந்தியாவின் மரபு, புலமை ஆகியவற்றின் செழுமையால் கவரப்பட்டப் பல தொடக்ககால தேசியவாதிகள் இந்தியாவின் பண்டையப் பெருமையை மீட்டெடுக்க ஆர்வத்துடன் வேண்டினர். “தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும். மேலும் உலகைத் தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும்” என அரவிந்தகோஷ் எழுதினார்.

இந்தியாவில் சங்கங்கள் உருவாதல்

சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association – MΝΑ)

1852 பிப்ரவரி 26இல் சென்னைவாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நிலவுடைமை வணிக வர்க்கத்தினரின் அமைப்பாகும்.

கம்பெனியின் நிர்வாகத்தில் வருவாய், கல்வி, நீதி ஆகியத் துறைகளில் தங்களுக்குள்ள குறைபாடுகளை இவர்கள் இவ்வமைப்பின் மூலம் எடுத்துரைத்தனர். சென்னையின் மிக முக்கிய வணிகரான கஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்தவர்.

இவ்வமைப்புத் தனது குறைகளை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் முன் வைத்தது. இங்கிலாந்துப் பாராளுமன்றம் இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி குறித்து விவாதித்து 1853இல் பட்டயச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இது நடைபெற்றது.

இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக் காட்டியது. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறை மீட்டெடுக்கப்பட வேண்டுமென இவ்வமைப்பு வற்புறுத்தியது.

நீதித்துறையானது தாமதமாக செயல்படுவதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் குறைபாடுகளுடையதாகவும் இருப்பதாக இம்மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகளின் நியமனத்தின்போது அவர்களின் நீதித்துறைசார் அறிவுத்திறனும் வட்டார மொழிகளில் அவர்களுக்குள்ளத் திறமையும் மதிப்பீடு செய்யப்படாததால் நீதித்துறையின் திறமை பாதிக்கப்படுவதை இம்மனு சுட்டிக்காட்டியது. மானிய உதவித்திட்டத்தின் கீழ் சமயப்பரப்பு நிறுவனங்களின் கல்விக் கூடங்களுக்கு அரசின் நிதி மடைமாற்றம் செய்யப்படுவதும் இம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

சென்னைவாசிகள் சங்கத்தின் மனு மார்ச் 1853இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தியச் சீர்திருத்தக் கழகத்தின் தலைவரான H.D. செய்மோர் அக்டோபர் 1853இல் சென்னை வந்தார். குண்டூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். இருந்தபோதிலும் 1853ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சித் தொடர அனுமதி வழங்கியது. இதனால் இவ்வமைப்பு இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட வேண்டுமென ஒரு போராட்டத்தை நடத்தியது.

இவ்வமைப்பு இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைக் கொண்ட பதினான்காயிரம் நபர்களால் கையெழுத்திடப்பட்ட தனது இரண்டாவது மனுவை ஆங்கிலப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இவ்வமைப்பின் ஆயுட்காலம் குறைவானதே. 1866இல் லட்சுமிநரசு இயற்கை எய்தினார். 1881இல் இவ்வமைப்பு இல்லாமல் போயிற்று. சீர்திருத்தங்கள் என்றளவில் இவ்வமைப்புப் பெருமளவில் சாதனைகள் செய்யாவிட்டாலும் இது இந்தியரின் கருத்தினை வெளியே சொல்ல மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியின் தொடக்கமாகும்.

சென்னை மகாஜன சங்கம் (Madras Mahajana Sabha – MMS)

சென்னைவாசிகள் சங்கம் செயலிழந்த பின்னர் சென்னை மாகாணத்தில் அதைப் போன்ற வேறு அமைப்பு இல்லாமல் போனது. கற்றறிந்த பல இந்தியர்கள் இந்நிலையைக் கவலையுடன் நோக்கினர். ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாய் மே, 1884இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப் பெற்றது. 1884 மே 16இல் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் சுப்ரமணியம், வீரராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியோராவர். இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப் பெற்றது. சென்னை மகாஜன சபையின் பிராந்திய மாநாடு நடைபெற்று முடிந்த பின்னர் அதன் தலைவர்கள் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை மகாஜன சபையை இந்திய தேசிய காங்கிரசோடு இணைத்தனர்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories