ஆங்கிலேய அரசு உருவாக்கம்
October 13, 2025 2025-10-17 7:36ஆங்கிலேய அரசு உருவாக்கம்
ஆங்கிலேய அரசு உருவாக்கம்
1772 வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தலைவர் ஆளுநரே ஆவார் (வில்லியம் கோட்டையிலோ ஜார்ஜ் கோட்டையிலோ வீற்றிருப்பார்).
வில்லியம் கோட்டையில் ஆளுநராகப் பதவியிலிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒழுங்கு முறைச் சட்டத்தின் (1773) மூலமாக கவர்னர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டார். கவர்னர் ஜெனரல் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் மன்றத்தின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
1833 பட்டயச் சட்டம் மூலமாக அப்பதவி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்று நிலையேற்றம் பெற்றது. அப்பதவியும் இயக்குநர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, பதவி வகிப்பவர் இயக்குநர் மன்றத்திற்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டிய கடமையுமிருந்தது.
1857 பெருங்கிளர்ச்சிக்குப்பின் இந்திய அரசின் பொறுப்பைக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக்கொள்ள வகைசெய்த 1858இன் விக்டோரியாராணியாரின் பிரகடனம் முதன்முறையாக அரசப்பிரதிநிதி (வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரல்) என்ற சொற்றொடரைக் கையாண்டது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட முதல் வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக கானிங் நியமிக்கப்பட்டார்.
நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும்
ஒழுங்குமுறைச் சட்டம் 1773இன்படி கம்பெனி ஊழியர்களின் வரவுசெலவு கணக்கு பற்றி இயக்குநர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்குத் தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது. ஆளுநரும் தலைமைத் தளபதியும் இரு ஆலோசகர்களும் கொண்ட குழு, வருவாய் வாரியமாகச் செயல்பட்டு, வருவாய் குறித்து விவாதித்தது.
1784ஆம் ஆண்டின் பிட் இந்தியச் சட்டம், இராணுவ மற்றும் குடிமை அமைப்புகளை தனித்தனியாகப் பிரித்தது.
காரன்வாலிஸ் பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றி நிலப்பிரபுத்துவ முறையை உருவாக்க நினைத்தார். காரன்வாலிஸ் ஜமீன்தார் என்கிற இடைத்தரகர்களை உருவாக்கியதோடு பயிரிடுவோரைக் குத்தகை விவசாயிகளாக மாற்றியது. இயக்குநர் குழுவின் அறிவுரைப்படி 1793இல் வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் ஜமீன்தார்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு முறையே நிலையான நிலவரி முறையாக அறியப்படுகிறது.
‘சாசுவதம்’ என்பது நிலத்தை அளவிட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்வதாகும். இம்முறையின் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மாறி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கு மேலாக வசூலிக்கப்பட்ட அனைத்தையும் ஜமீன்தார்கள் கையகப்படுத்திக் கொண்டார்கள்.
கிராமக் குத்தகை முறையில், பழைய வரிவசூல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராமமும் மூன்று ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
மிராசுதார் முறை நிலவி வந்த மாவட்டங்களில் நிலவரி வசூலிக்கும் பொறுப்பு மிராசுதார்களிடம் கொடுக்கப்பட்டது. மிராசுதார்கள் இல்லாத பகுதிகளில் கிராமத்தலைவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இம்முறை மோசமான பருவநிலை, தானிய விலைக் குறைவு, குறைந்த கால குத்தகை முறை போன்ற காரணங்களால் தோல்வியடைந்தது.
போதிய விளைச்சல் இல்லாத போது மொத்த கிராமங்களும் வரி செலுத்த முடியாமல் புலம் பெயர்வது என்பது சாதாரணமாக நிகழ்ந்தது. அரசு, மாவட்ட ஆட்சியரின் துணையோடு அவ்வாறு புலம் பெயர்ந்தோரை மறுகுடியமர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
இரயத்துவாரி முறை
1814ஆம் ஆண்டு இயக்குநர் குழுவில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ என்பவரால் உருவாக்கப்பட்டது.
வேளாண் நிலத்தின் உரிமையாளரும், அதன் வரிகளை செலுத்துபவரும் என்ற பொருள் கொண்ட ‘ரைய்யா என்ற அரபு வார்த்தையின் ஆங்கில திரிபே ‘ரயத்’ (Ryot) ஆகும். ரயத் என்ற சொல்லிற்கு உழவர் என்று பொருள்.
எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொள்வதே இம்முறையாகும். நிலவரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் வசமே நிலமிருப்பது உறுதி செய்யப்பட்டது.
வரி செலுத்தாதோரை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவதோடு அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த கால்நடை, வீடு தனிப்பட்ட உடைமை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
அரசு, பயிர் செய்யப்பட்ட ஒவ்வொரு வயலிலிருந்தும் கிடைக்ககூடிய வருவாயைக் கணித்தது. தானிய விலை மாற்றம், சந்தைப்படுத்தும் வசதிகள், பாசன வசதி போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முப்பது ஆண்டுக்கு ஒருமுறை தீர்வு மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.
இரயத்துவாரி முறை நிலத்தில் தனியுடைமையை அறிமுகப்படுத்தியது. தனிப்பட்ட உடைமையாளர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் நிலத்தை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும், உரிமையை மாற்றிக் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் (1833) மகல்வாரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி நிலவருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.
தாமஸ் மன்றோ:
இவர் 1780 மதராஸ் வந்தடைந்தார். முதல் பன்னிரெண்டு வருடங்கள் அவர் ஒரு படை வீரராக மைசூர் போரில் பங்கேற்றார்.
அவர் பாரமஹால் பகுதியில் (சேலம் மாவட்டம்) 1792 முதல் 1799 வரையிலும், கனரா பகுதியில் 1799 முதல் 1800 வரையிலும் பணியிலிருந்தார். பிரித்தெடுக்கப்பட்ட மாவட்டங்களான கடப்பா, கர்னூல், சித்தூர், அனந்தபூர் ஆகியவற்றிற்கு ஆட்சியராக பணி புரிந்தார். இக்காலத்தில்தான் அவர் இரயத்துவாரி முறை பற்றி யோசிக்கலானார்.
அவர் 1820 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்று அதன் பின் ஏழு வருடங்கள் சேவையாற்றினார். அப்போது 1822 ஆம் ஆண்டில் இரயத்துவாரி முறையை செம்மையாக அறிமுகப்படுத்தி செயலூட்டினார்.
அவர் ஆளுநராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு கல்விக்கான செலவீனங்களை எதிர்காலத்திற்கான முதலீடாகவே கருதினார். அவர் நிர்வாகத்தில் இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றுவதை ஆதரித்தார்.
அவர் ஜூலை 1827 ஆம் ஆண்டு கர்னூலில் அமைந்துள்ள பட்டிக்கொண்டாவில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.மக்களிடையே பிரபலமாகியிருந்த ஆளுநரான அவரின் நினைவாக L160 நினைவிடங்கள் எழுப்பப்பட்டதோடு, குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து அவரது சிலை வடிவமைக்கப்பட்டு 1839 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.
துணைப்படைத் திட்டமும், வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும்
கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி (1798- 1805) பிரிட்டிஷ் ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு ஒரு முன்னோக்கிய கொள்கையை பின்பற்றினார். அவர் சிற்றரசுகளைப் போர் வெற்றியின் மூலமாக வசப்படுத்தவில்லை. அதற்கு மாறாக அரசர்களைப் பெயரளவிற்கு அங்கீகரித்து அவர்களுக்கு மானியம் வழங்கியதோடு மொத்த நிர்வாகத்தையும் தன் வசப்படுத்தினார்.
வெல்லெஸ்லி துணைப்படைத் திட்டத்தின் மூலம் ஹைதராபாத், மைசூர், லக்னோ, மராத்திய பேஷ்வா, போன்ஸ்லே (கோலாப்பூர்), சிந்தியா (குவாலியர்) போன்ற அரசுகளையும் அரசர்களையும் இதன் கீழ்க்கொண்டு வந்தார்.
துணைப்படைத் திட்டத்தின் கூறுகளாவன
(அ) கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப் படைகளை கலைத்து விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக (Resident) ஏற்க வேண்டும்.
(ஆ) பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும், அது முடியாதபோது மாகாணத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
(இ) பாதுகாப்புக்கு உட்பட்ட அரசர் பிற ஐரோப்பிய நாடுகளுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அதிலும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்பு இருக்கக்கூடாது.
(ஈ) பிரிட்டிஷார் அனுமதியில்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியிலமர்த்தக்கூடாது.
(உ) பிற இந்திய அரசுகளோடு கம்பெனியின் அனுமதியில்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது.
(ஊ) எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடக்கூடாது.
இவ்வாறு சுதேச அரசுகள் தங்கள் இறையாண்மையை இழந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் கம்பெனியை சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது. துணைப்படைத் திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஒட்டுமொத்தத் திறனையும் கூட்டியது.
அதன் உடனடி விளைவு என்பது சொந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தொழில் முறை போர் வீரர்கள் வேலை இழந்ததே ஆகும். அவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட வீரர்கள் கொள்ளையர்களாக மாறினார்கள். பிண்டாரிகளின் (கூட்டமாக சூறையாடுவோர்) எண்ணிக்கை துணைப்படைத் திட்டத்திற்கு பின் கணிசமாக உயர்ந்தது.
அரசர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கியபோதும், பாதுகாப்பிற்குள்ளிருந்த பல அரசுகளின் நிர்வாகம் திறம்பட இல்லை எனக் குற்றம் சுமத்தி அவற்றை இலகுவாக இணைப்பதும் நடந்தேறியது.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
இந்து சம்பிரதாயங்களின்படி, வாரிசில்லாத மன்னர் ஓர் ஆண் மகவைத் தத்தெடுக்க முடியும். அவ்வாறு தத்தெடுக்கப்பட்ட மகனுக்குச் சொத்தில் முழு உரிமையும் உண்டு.
இச்சூழலில் உச்ச அதிகாரத்திற்கு (இங்கிலாந்திற்கு) கட்டுப்பட்ட ஒரு சிற்றரசு அவ்வதிகாரத்தின் அனுமதி பெறாமல் தத்தெடுக்கப்பட்ட வாரிசுகள் அரியணை ஏறுவது டல்ஹௌசி அரசால் செல்லாதது என்று அறிவிக்கவும் வாய்ப்பிருந்தது.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும். சதாராவின் மன்னரான ஷாஜி இறந்த பின் (1848) அவரது தத்தெடுக்கப்பட்ட வாரிசை டல்ஹௌசி அங்கீகரிக்க மறுத்தார்.
ஜான்சியின் அரசர் கங்காதர்ராவ் நவம்பர் 1853இல் இறந்த மறுகணமே அவ்வரசு டல்ஹௌசியால் இணைக்கப்பட்டது. (விதவையான அவரது மனைவி இராணி லட்சுமிபாய் 1857 பெருங்கிளர்ச்சியின் போது பெரும் பங்காற்றினார்.)
குழந்தைகள் இல்லாமல் மூன்றாம் ரகுஜி போன்ஸ்லே 1853இல் மறைந்தார். நாக்பூர் உடனடியாகக் கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது.
மராத்தியர்களின் கடைசி பேஷ்வா 1851இல் காலமானார். அவர் முப்பத்து மூன்று வருடம் கம்பெனி கொடுத்த ஓய்வூதியத்தைப் பெற்றிருந்தார். ஆனால் டல்ஹௌசியோ அவரது வாரிசான நானா சாகிப்பிற்கு ஓய்வூதியம் கொடுக்க மறுத்தார்.
இவ்வாறாக வாரிசு உரிமை இழப்புக் கொள்கை நாடு பிடிக்கும் உத்தியாகச் செயல் வடிவம் பெற்றது. எனினும் பிரிட்டிஷ் முடியரசு இந்திய நாட்டின் பொறுப்பை ஏற்ற பின் இக்கொள்கை திரும்ப பெறப்பட்டது.
சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும்
பிளாசிப் போருக்குப்பின் (1757) கம்பெனி தன்னை விரிவுபடுத்தும் முகமாக இரட்டை ஆட்சி முறையை உருவாக்கியது. இம்முறையின் கீழ், மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக்கொண்டு அவரது பின்புலத்தில் கம்பெனி அதிகாரிகள் செயலாற்றினர். கொள்கையளவில் கம்பெனி, தன்னை திவானாக (வரி வசூலிக்கும் அதிகாரம்) மட்டும் சொல்லிக்கொண்டாலும் முழு அதிகாரமும் அதனிடமே குவிந்திருந்தது.
கிளைவால் உறுதியளிக்கப்பட்டிருந்த முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலமிற்கு செலுத்தவேண்டிய ஆண்டு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் மூலம் இவ்வதிகாரம் வலியுறுத்தப்பட்டது. கடித அளவிலான மரியாதையைக்கூடக் காரன்வாலிஸ் கொடுக்க மறுத்தார். வெல்லெஸ்லி மேலும் நெருக்கடியைக் கூட்டும் வண்ணமாக பிரிட்டிஷாருக்குச் சாதகமாகத் துணைப்படைத் திட்டத்தைக் கடைபிடித்தார். அதனை ஹைதராபாத், பூனா, மைசூர் போன்ற முக்கிய அரசுகளை ஏற்க வைத்தார்.
கவர்னர் ஜெனரலாக 1813ஆம் ஆண்டு பதவியேற்ற ஹேஸ்டிங்ஸ் (மொய்ரா) முகலாய முத்திரையைப் பரிவர்த்தனைகளில் தவிர்த்தார். ஹேஸ்டிங்ஸ் இந்திய அரசுகளை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பெனிக்கு இல்லை என்ற கொள்கை முடிவைப் பின்பற்றினார்.
துணைப்படைத் திட்டத்தின் கீழ் கம்பெனி ராணுவம் இந்திய ஆட்சியாளர்களை உள்நாட்டு கலகங்களிலிருந்தும், பிற பாதிப்புகளிலிருந்தும் காத்தது. ஹைதராபாத்தின் சில பகுதிகள் நிஜாமின் கட்டுபாட்டிலிருந்து விடுபட்ட அரேபியப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. பிரிட்டிஷ் படைப்பிரிவின் உதவியோடு அரேபிய வீரர்கள் பணிய வைக்கப்பட்டார்கள்.
மைசூர் அரசில் 1830ஆம் ஆண்டு நிதி நிர்வாக முறைகேட்டில் அரசர் ஈடுபட்டார் என்ற காரணத்தை முன்வைத்து ஏற்பட்ட கிளர்ச்சியை வெல்லெஸ்லியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கம்பெனி தலையிட்டு சரி செய்தது.
குவாலியரின் வாரிசு இளம் வயதினர் என்பதால் நிர்வாகம் கட்டுடைந்து, அரசவையில் கோஷ்டிகள் தோன்றி அவர்களுக்குள் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். இராணுவமோ கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு செயலிழந்து கிடந்தது. எல்லன்பரோ வலிமையான படைகளோடு வந்து சேர்ந்தார். அவரது படைகளை உள்ளூர் படைகள் எதிர்த்தன. மகாராஜ்பூர் போரில் உள்ளூர் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு 1843ஆம் ஆண்டில் படை பலத்தைக் குறைத்துக்கொள்வது உள்ளிட்ட நிபந்தனைகளோடு புதிய வழிமுறை மொழியப்பட்டது.
டல்ஹௌசியின் வாரிசு இழப்புக்கொள்கை பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுபாட்டிற்குள்ளிருந்த பகுதியை விரிவாக்கியது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த அரசுகளின் மீதான கம்பெனியின் அதிகாரம் ஓங்கியது.
குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்
நீதிபதியும், கிழக்கத்திய சிந்தனை மரபை ஏற்றவருமான வில்லியம் ஜோன்சின் உதவியினைப் பெற்று காரன்வாலிஸ் கம்பெனி நிர்வாகத்தைக் கட்டமைத்தார். குற்றம் நடப்பதைக் கண்டுபிடிக்கவும், தண்டனை வழங்கவும் ஒரு சீரிய முறையை அறிமுகப்படுத்தியதன் மூலமாக கிளைவ் உருவாக்கிய இரட்டை ஆட்சி முறையை முடிவு கொண்டு வந்தார்.
வரி வசூலிக்கும் பொறுப்பைப் பொது நிர்வாகத்திலிருந்தும், நீதித்துறையிலிருந்தும் பிரித்தார். ஆட்சியர்களை (Collectors) வரி வசூலிக்க மட்டுமே பணித்து, அவர்களை நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டன.
நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும் (சிவில் மற்றும் வருவாய் விவகாரங்களைக் கையாளும் ஒரு உயர் நீதிமன்றம்), சதர் நிஜாமத் அதாலத்தும் (குற்றவியல் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றமாகும்) திகழ்ந்தன.
குற்றவியல், குடிமையியல் நீதியில் உச்சபட்ச முறையீட்டு நீதிமன்றங்களான இவை கல்கத்தாவில் அமையப்பெற்று கவர்னர் ஜெனரல் உள்ளிட்ட குழுவினரால் வழிநடத்தப்பட்டன.
அவற்றின் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், மூர்ஷிதாபாத், பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. இந்நீதிமன்றங்கள் ஒவ்வொன்றினுக்கும் மூன்று ஐரோப்பிய நீதிபதிகளும், அவர்களுக்கு உதவி புரிய ஓர் இந்திய வல்லுனரும் நியமிக்கப்பட்டார்கள்.
இந்நீதிமன்றங்களின் கீழ் ஒரு ஐரோப்பிய நீதிபதியையும், அவருக்குத் துணையாகச் சில இந்தியர்களையும் உள்ளடக்கிய மாவட்ட மற்றும் நகர நீதிமன்றங்கள் இயங்கின. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருநகரிலும் ஓர் நீதிமன்றம் அமைந்தது. அவற்றின் கீழ் இந்திய நீதிபதிகளைக் கொண்ட முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கின.
சிவில் வழக்குகளில் இஸ்லாமியச் சட்டங்கள் பின்பற்றப்பட்டன. குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவரின் சமயப் பின்னணியினைப் பொறுத்து இந்து சட்டமும், இஸ்லாமிய சட்டமும் பின்பற்றப்பட்டன.
காரன்வாலிஸின் தலையாய பங்களிப்பானது குடிமைப் பணிகளின் சீர்திருத்தமே ஆகும். அவர் திறமை வாய்ந்தவர்களையும் நேர்மையானவர்களையும் பணியமர்த்த வழிவகை செய்தார். கம்பெனி அதிகாரிகளுக்குச் சொற்ப சம்பளத்தை வழங்கிவிட்டு அவர்களைத் தனியாக வியாபாரம் செய்ய அனுமதித்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திறமையின் அடிப்படையில் பணிவழங்கியபோதும், இந்தியர்கள் பணியாற்றத் தகுதியற்றவர்கள் என்று கருதியதால் அவர்களைப் பணிக்கு அமர்த்த மறுத்தார்.
ஒவ்வொரு மாவட்டமும் தானாக்களாகப் (காவல் வட்டம்) பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வகிக்கப்பட்ட தரோகா என்ற பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.
காரன்வாலிஸின் காவல் துறை நிர்வாக முறை பின்னர் மேலும் மெருகேற்றப்பட்டது. நீதியதிகாரத்திற்கும் வருவாய் அதிகாரத்திற்குமிடையேயான திடமான பிரிவு கைவிடப்பட்டது. ஆட்சியரே நீதி வழங்குபவராகவும் செயலாற்றத் துவங்கினார்.
குடிமை மற்றும் நீதி நிர்வாகத்தைப் பண்படுத்திய காரன்வாலிஸ் கம்பெனி ஊழியரின் கல்வியை மேம்படுத்த போதிய அக்கறை செலுத்தவில்லை.
வெல்லெஸ்லியோ அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இங்கிலாந்தின் தாராளவாதக் கல்வி முறையோடு இந்தியரின் மொழி, சட்டங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் குடிமைப் பணியாளர்கள் அறிந்திருத்தல் நன்று என அவர் கருதினார்.
கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் 1800இல் ஒரு கல்லூரி துவங்கப்பட்டது. கம்பெனியின் குடிமைப் பணியாளர்களுக்கு இங்கு மூன்று வருட காலப் பயிற்சி வழங்கப்பட்டது. பல ஐரோப்பியப் பேராசிரியர்களும் எண்பது இந்தியப் பண்டிதர்களும் இங்குப் பணிபுரிந்தனர். இதுவே வங்காளக் கிழக்கத்தியப் பள்ளியாக உருவெடுத்தது. கிழக்கிந்தியக் கல்லூரி 1806இல் இங்கிலாந்தில் துவக்கப்பட்டது.
எல்லிஸ் என்பவர் தூய ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை (1812) சென்னையில் உருவாக்கினார். இங்குதான் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் கருத்தாக்கம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.
கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி
காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை (1791) நிறுவினார். 1813ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டயச்சட்டத்தில் தெளிவான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்ற பின் கிறித்தவ சமயத் தொண்டாற்றுவோர் மூலமாகத் தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சியை ஊக்குவித்தார்.
கல்கத்தாவில் 1817ஆம் ஆண்டு ஆங்கில மொழியையும் மேற்கத்திய அறிவியலையும் ஆதரித்த இந்தியரின் எண்ணவோட்டத்தைப் பூர்த்தி செய்யும் விதமாகத் துவக்கப்பட்ட இந்து கல்லூரிக்கு அவரே புரவலரானார்.
1818ஆம் ஆண்டு வங்காள வாராந்திர இதழ் ‘சமாச்சார் தர்பன்’ துவங்கப்பட்டது. இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833ஆம் ஆண்டின்
பட்டயச்சட்டம் வலியுறுத்தியது.
ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Thuggee) (சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும், கொலை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள்) அழிக்கவும், சதி முறையை ஒழிக்கவும், கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கத் தலைப்பட்டார்.
கல்கத்தா மருத்துவக் கல்லூரியை 1835இல் துவங்கினார். இக்கல்லூரியின் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டார்கள். 1845இல் பம்பாயில் கிராண்ட் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. தாம்சன் பொறியியல் கல்லூரி 1847ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
பட்டயம் (charter) என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக்கொண்டு சகல அதிகாரங்களும், சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ, பல்கலைக்கழகத்தையோ, நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும்.
கிழக்கிந்தியக் கம்பெனி, மகாராணி எலிசபெத் 1600இல் வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக 1773ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது. பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853ஆம் ஆண்டின் பட்டயச்சட்டமே கடைசியானது ஆகும்.
மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார். அவர் கல்விக்குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை. மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்ததால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
டல்ஹௌசியும் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அவர் வடகிழக்கு மாகாணத்தின் துணை ஆளுநர் (1843-53) ஜேம்ஸ் தாமஸினால் உருவாக்கப்பட்ட
தாய்மொழிக் கல்விமுறைக்கு ஆதரவு கொடுத்தார்.
சார்லஸ் உட்டின் கல்வி அறிக்கை (1854) ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைப் பள்ளியையும், கல்லூரிப் படிப்பையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரைவாகும்.
பொதுக் கல்வித்துறை துவங்கப்பட்டு 1857இல் சென்னை பல்கலைக்கழகமும் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.
டல்ஹௌசி மெக்காலேயின் கொள்கையை மாற்றி, தாய் மொழியிலும் கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தார், அவர் சாதி சமயப்பாகுபாடு பார்க்காமல் தனியாரின் கல்விச்சேவையை ஆதரிக்கும் விதமாக கல்விச் சேவையில் ஈடுபட்ட தனியாருக்கும் மானியம் வழங்கினார்.
பாதுகாப்பு முயற்சிகளும் வளர்ச்சி நடவடிக்கைகளும்
பிண்டாரிப் போர்
பிண்டாரி கொள்ளைக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இருந்தனர். துணைப்படைத் திட்டத்தினால் வேலையிழந்த பல வீரர்கள் இக்கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்து கவலை கொள்ளும் அளவுக்குப் பெருகினர். பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர்ப் பிரகடனம் செய்தது. ஆனால் அது மராத்தியருக்கு எதிரானப் போராக உருப்பெற்றது.இப்போர்கள் பல்லாண்டுகள்(1811-1818) நடைபெற்றாலும் மொத்த மத்திய இந்தியாவையும் இறுதியில் பிரிட்டிஷார் வசம் கொண்டு சேர்த்தது.
தக்கர்களை அடக்குதல்
தக்கர்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக்கொண்டிருந்த கூட்டத்தினர் ஆவார். அப்பாவி வழிப்போக்கர்களை எதிர்பாராத தருணத்தில் தாக்கி காளியின் பெயரால் கொலை செய்து வந்தனர்.
தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு நீக்க பெண்டிங் ஒரு திட்டத்தை வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லீமேனை நியமித்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தக்கர்களின் குற்றங்கள் 1831 முதல் 1837 வரையான காலகட்டத்தில் நிரூபணமானது. ஐந்நூறு பேர் அரசு சாட்சிகளாக மாறினர்.
சதி ஒழிப்பு
விதவைகளை அவர்களது கணவர்களின் சிதையோடு சேர்த்து எரிக்கும் சதி முறையை ஒழிக்க முடிவெடுத்ததின் மூலம் வில்லியம் பெண்டிங் தன் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். பெண்டிங் (சதி ஒழிப்புச் சட்டம், 1829) ஒன்றை இயற்றி, அதன் மூலம் இப்பழக்கத்திற்கு ஒரு முடிவு கொண்டுவர முயன்றார்.
இராஜா ராம் மோகன் ராயின் பிரச்சாரங்களும் முயற்சியும் இந்த மனிதத்தன்மையற்ற முறை ஒழிய முக்கியக் காரணமாக இருந்தன.
இருப்புப்பாதையும், தபால்-தந்தி முறையும்
இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச் சமூகமே ஆகும்.
.
இருப்புப்பாதைப் போக்குவரத்தின் மூலமாக பொருளாதாரச் சாதகங்கள் ஏற்படும் என்று டல்ஹௌசி கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களிடம் வாதிட்டு அதை வலியுறுத்தினார். எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் முந்நூறு மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இருப்புப்பாதை 1853ஆம் ஆண்டு அமையவும், ஹௌராவுக்கும் ராணிகஞ்சிற்கும் இடையே 1854-55ஆம் ஆண்டுகளில் அமையவும் செய்தது. தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856ஆம் ஆண்டு இராயபுரத்திற்கும், ஆற்காட்டிற்கும் (வாலாஜா ரோடு) இடையே அமைக்கப்பட்டது. அவ்வாண்டில் திறந்து வைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் இராயபுரம் ரயில் நிலையமும் ஒன்றாகும்.
இந்தியாவில் 1854ஆம் ஆண்டு தந்திப் போக்குவரத்து தொடங்கியது. 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியின் போது அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.
லண்டனுக்கும், கல்கத்தாவிற்குமிடையே தொடர்பு கொள்ள பல நாட்கள் ஆன சூழல் மாறி இருபத்தியெட்டு நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழிசெய்தது.
ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமிடையே உள்ள தூரம் 1869ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாகக் குறைந்தது. 1870ஆம் ஆண்டிற்குள் இலண்டன் இந்தியா அலுவலகத்தில் அரசு செயலருடன் பிரிட்டிஷ் இந்திய அரசு திறன் கொண்ட தொடர்பு வைக்க முடிந்திருந்தது. இதன் பின் கர்சன் நீங்கலாக மற்ற கவர்னர் ஜெனரல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்த ‘வெள்ளை மாளிகையைத்” (Whitehall) தொடர்பு கொள்ளாமல் முடிவெடுக்கத் தயங்கினார்கள்.
நீர்ப்பாசன வசதி
ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின. பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கொள்ளிடத்தின் குறுக்கே 1836இல் அணையைக் கட்டினார்.
கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுபாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக வட இந்தியாவில் 1830இல் யமுனா கால்வாயும், 1857இல் கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த பணியும், 1856இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்துறைக் கால்வாய் (தோ ஆப்) தோண்டும் பணியும் பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளாகும்.
தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும்
பெண்டிங் எழுதுகிறார்: பல வகையிலும் இஸ்லாமியர் ஆட்சி நம்மை விஞ்சுகிறது; அவர்கள் படையெடுத்துச் சென்ற நாடுகளிலேயே குடியமர்ந்தார்கள்; அவர்கள் உள்ளூர் மக்களோடு மண உறவு கொண்டார்கள், அவர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் வழங்கினார்கள்; படையெடுத்தவர்களும், அடிபணிந்தவர்களும் ஒத்தக்கருத்தும், எண்ண ஓட்டமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். இதற்கு மாறாக நம்முடைய ஆட்சியோ நேர்எதிரானதாக உள்ளது விரோதப் போக்கு, சுயநலம், இரக்கமின்மை ஆகியவையே அதன் கூறுகள்.
காலனி அரசு நீர்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்புப்பாதை பதிப்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என்று ஆர்தர் காட்டன் பரிந்துரைத்ததை இங்கிலாந்தின் ஏகாதிபத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.
அபே டுபாய் என்ற பிரெஞ்சுக் கத்தோலிக்க சமயப் போதகர் தான் ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்கு முன் 1823ஆம் ஆண்டு இவ்வாறு கூறுகிறார். “கவலையும், இறப்பும் எங்கெங்கும் நிறைந்து சென்னை மாகாணத்திலுள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பசியால் செத்து மடிகிறார்கள்.”
“வணிக வரலாற்றில் இதற்கு சமமான ஒரு துயரம் நிகழ்ந்ததில்லை. பருத்தி நெசவாளர்களின் எலும்பு இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பரப்புகளை வெளுக்கச் செய்கின்றன” என்று கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் கூறுகிறார்.
பஞ்சங்களும், ஒப்பந்தக் கூலிகளும்
தலையிடா வணிகக்கொள்கை (Laissez Faire) என்பதைக் கடைபிடிப்பதாக 1833இல் காலனி அரசு எடுத்த முடிவைப் பஞ்சக் காலத்திலும் பலமாகப் பின்பற்றியது. பல ஆண்டுகளாக மேற்கத்தியக் கல்வி முறையில் கற்ற இந்திய இளைஞர்கள் பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவை வறுமையின் பிடியில் வைத்திருக்கிறது என்று வாதிட்டனர்.
ஒரிசாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் மூன்றில் ஒருவர் என்ற அளவில் மக்கள் பசியாலும் நோயாலும் செத்து மடிந்ததே அக்கூற்றுக்குச் சான்றாக விளங்கியது. இந்நிகழ்வே தாதாபாய் நௌரோஜியை தமது வாழ்க்கை முழுக்க இந்திய வறுமை பற்றிய ஆய்வை மேற்கொள்ள வைத்தது.
சென்னை மாகாணப் பெரும்பஞ்சம், 1876-78: இரு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பருவகாலம் பொய்த்ததால் சென்னை மாகாணத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரிஸ்ஸாவில் பின்பற்றியது போன்றே வைஸ்ராய் கைவிரிக்கும் போக்கை பின்பற்றினார். இதனால் மாகாணத்தில் முப்பத்தைந்து லட்சம் மக்கள் மடிந்தனர்.
மலைச் சரிவு நிலப் பயிரிடு முறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் இலங்கை, மொரீசியஸ், பிஜி, மலேயா, கரீபியன் தீவுகள், நேட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அதிகமான தொழிலாளர் தேவையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அடிமைகளே பயன்படுத்தப்பட்டார்கள்.
கம்பெனி அரசு 1843இல் இந்தியாவில் அடிமை முறையை ஒழித்த பின் ஒப்பந்தக் கூலிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னையின் ஆளுநர் 1815ஆம் ஆண்டு இலங்கையின் ஆளுநரிடமிருந்து காப்பித் தோட்டங்களில் பணி புரிய கூலித் தொழிலாளர்களைக் கேட்டு கடிதம் ஒன்றை பெற்றார். சென்னை ஆளுநர் அக்கடிதத்தை தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்ப, அவர் நிலைமையை ஆராய்ந்து அங்குள்ள மக்கள் நிலத்தோடு மிகுந்த பற்றுக்கொண்டவர்களாக விளங்குவதால் ஏதாவது ஊக்கமளிக்காவிட்டால் விஷயமில்லாமல் அவர்களை ஊரை விட்டுக் கிளப்புவது கடினம் என்று பதில் கொடுத்தார்.
ஆனால் அப்பகுதியை தாக்கிய இரு பெரும் பஞ்சங்கள் (1833 மற்றும் 1843 ஆம் ஆண்டுகளில்) அரசின் எந்தவித ஊக்கமோ, சலுகையோ இல்லாமல் அவர்களை இலங்கைக்குப் புலம் பெயர்த்து காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்த முறையின் கீழ் கூலித் தொழிலாளர்களாக பணியில் அமரக் கட்டாயப்படுத்தின. கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் (14,44,407) மக்கள் 1843- 1868 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையிலிருந்து இலங்கைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்றார்கள்.
செல்வச் சுரண்டல்
‘இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்’ (Poverty and UnBritish Rule in India) என்ற நூலில் ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை தாதாபாய் நௌரோஜி விளக்குகிறார்.
ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்தவர்கள் தாதாபாய் நௌரோஜி கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்குத் திரும்பச் சென்று விட்டார்கள். சந்தேகமில்லாமல் அவர்கள் மிகுந்த ரணங்களை ஏற்படுத்தினார்கள் என்றபோதும் செயலூக்கம் கொண்ட இந்தியா சிறிது காலத்தில் மீண்டெழுந்தது. அவ்வாறல்லாமல் படையெடுத்தோர் ஆட்சியாளர்களாக இந்த மண்ணில் குடியமர்ந்த போது அவர்கள் ஆட்சி முறை எவ்வாறு இருந்த போதும் இங்கிருந்து பொருட்கடத்தலோ, நன்னடத்தை சீர்கேடோ ஏற்படவில்லை. ஆங்கிலேய ஆட்சி இதிலிருந்து வேறுபடுகிறது.
பொதுப்பணத்தில் நடத்தப்பட்ட முதற்போர்கள் பெரும் கடன் சுமையை ஏற்படுத்தின என்பதோடு காயத்தை ஆறவிடாமல் உயிர் பாய்ச்சும் உதிரத்தை உறிஞ்சும் போக்கில் தொடர் சுரண்டலே நடைபெற்றது.பழைய ஆட்சியாளர்கள் கசாப்புக்காரர் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டினர். ஆனால் ஆங்கிலேயரோ விஞ்ஞான அறிவோடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கத்தியால் நேரடியாக இதயத்தை வெட்டினாலும், வடு தெரியாதவாறு நேர்த்தியைக் கையாளுவதோடு நாகரீகம், வளர்ச்சி போன்ற சொல்லாடல்களை பயன்படுத்திக் காயத்தை மறைக்கிறார்கள். நௌரோஜி தன் வாதத்தில் இந்தியாவிலிருந்து பெருந்தொகை உள்நாட்டின் செலவுக் கட்டணம் (Home Charges) என்ற வகையில் இங்கிலாந்து போய்ச் சேர்கிறது என்கிறார்.
உள்நாட்டு செலவுக் கட்டணம் கீழ்க்கண்ட கூறுகளை உள்ளடக்கியது.
கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம்
ஐரோப்பிய அதிகாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள், தோட்ட முதலாளிகள் போன்றோரின் சம்பளம், சேமிப்பு என்ற வகையில் இங்கிலாந்தில் வரவு வைக்கப்பட்டத் தொகை.
இராணுவத்திலிருந்தும், குடிமைப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்றோருக்குச் சேர வேண்டிய ஓய்வு ஊதியத் தொகை.
இலண்டனில் அமைந்திருந்த ‘இந்திய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் செயலருக்குமான வேண்டிய பெருஞ் சம்பளம்.
இந்தியாவில் நிகழ்ந்த போர்களுக்கான செலவுகள், போர் நடத்துவதற்காக வங்கியில் பெற்ற கடன்களுக்கான வட்டி மற்றும் இருப்புப்பாதை அமைக்க ஏற்பட்ட செலவுகள்.
இங்கிலாந்திற்கு இந்தியா 1837 கொடுக்க வேண்டிய கடன் 130 மில்லியன் பவுண்டுகளாகும். அது சிறிது காலத்தில் 220 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்த போது அதில் 18 சதவீதம் ஆப்கானிஸ்தானோடும், பர்மாவோடும் போர் நடத்திய வகையில் செலவு செய்ததாகக் சொல்லப்பட்டது.
ஒரு அரசு அறிக்கை 1908 ஆம் ஆண்டின் நிலவரத்தைக் குறிப்பிடும்போது இருப்புப்பாதை பதிக்கும் வகையில் மட்டும் இந்தியாவின் கடன் பாக்கி 177.5 மில்லியன் பவுண்டு என்றது.
இந்தியாவில் முதலீடுகள் தொய்வு நிலையை எட்டியபோது பிரிட்டிஷ் அரசு இங்கிலாந்தின் தனியாரிடமிருந்து முதலீடுகளை பெற்றுக்கொண்டது. இவ்வாறு பெறப்பட்ட முதலுக்கு உறுதியாக 5 சதவீத வட்டியை ஸ்டெர்லிங்கில் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த வகையில் மட்டுமே இந்தியாவிற்கு 220 மில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் இழப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் நடந்த செல்வவளக் கடத்தல் (Drain of Wealth) என்று இப்போக்கை வர்ணிக்கும் தாதாபாய் நௌரோஜி இவ்வளங்கள் இந்தியாவிலேயே தங்கியிருந்தால் இந்த நாடு செழித்திருக்கும். மேலும் கூறுகையில் அவர் கஜினி முகமதுவின் கொள்ளை பதினெட்டு முறையோடு நின்றுவிட, பிரிட்டிஷாரின் கொள்ளையோ முடிவில்லாமல் தொடர்கிறது என்றார்.
ஆர்.சி. தத் மதிப்பீட்டில் மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தின் கடைசிப் பத்து ஆண்டுகளில் (1891-1901) மொத்த வருவாயான 647 மில்லியன் பவுண்டுகளில், 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. இது மொத்த வருவாயில் 24 சதவீதம் என்று சொல்லப்படுகிறது.