“யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்” என்று எழுந்தார் உ.வே.சாமிநாதர். பின்னாளில் அவரே அனைவராலும் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்டார். இத்தகைய மாணவரை உருவாக்கிய பெருமை அவர்தம் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரையே சாரும்.
அவர் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம். அவருடைய இயற்பெயர் வேங்கடசுப்புரத்தினம். அவருடைய ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர் சாமிநாதன். அதனால் அவர், உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன் என்பதன் சுருக்கமாகவே உ. வே. சா. என்று அழைக்கப்பட்டார்.
19. 02. 1855ஆம் ஆண்டு பிறந்த அவர், 28. 04. 1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

சிறப்புக் குறிப்புகள்
* உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
* உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
* நடுவணரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்
எட்டுத்தொகை – 8
பத்துப்பாட்டு – 10
சீவகசிந்தாமணி – 1
சிலப்பதிகாரம் – 1
மணிமேகலை – 1
புராணங்கள் – 12
உலா – 9
கோவை – 6
தூது – 6
வெண்பா நூல்கள் – 13
அந்தாதி – 3
பரணி – 2
மும்மணிக்கோவை – 2
இரட்டைமணிமாலை – 2
பிற பிரபந்தங்கள் – 4