ஐரோப்பியர் வருகை
October 9, 2025 2025-10-13 6:08ஐரோப்பியர் வருகை
ஐரோப்பியர் வருகை
1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நாவாப்பை ஆங்கிலேயர் வெற்றிகொண்ட பிறகு அந்த ஆண்டை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம்.
ஐரோப்பியர் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டனர்.
இந்தியாவில் முதலாவதாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட ஐரோப்பியர் போர்த்துகீசியர்.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவிற்கு நேரடிக் கடல்வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா ஆவார்.
ஒரு நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் தங்களின் நடவடிக்கைகளைப் போர்த்துகீசியரின் செயல்திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைத்துக் கொண்டனர்.
இந்தியாவில் போர்த்துகீசியர்
வாஸ்கோடகாமா தனது முதல் பயணத்தில் மூன்று கப்பல்களில் 170 நபர்களோடு வந்தார். கள்ளிக்கோட்டை அரசர் சாமுத்ரியினுடைய (சாமரின்) நட்புணர்வு வாஸ்கோடகாமாவிற்கு மகிழ்ச்சியளித்தது.
1498 ஆகஸ்ட் 29ஆம் நாள் தன்னுடன் வந்தவர்களில் உயிரோடிருந்த ஐம்பத்தைந்து மாலுமிகளுடனும் மூன்றில் இரண்டு கப்பல்களில் இந்தியச் சரக்குகளுடனும் ஊர்திரும்பும் பயணத்தை மேற்கொண்டார்.
1502 அக்டோபர் 29 ஆம் நாள் 20 கப்பல்களுடன் வாஸ்கோடகாமா மீண்டும் கள்ளிக்கோட்டை வந்தார். அங்கிருந்து அதிக வசதிகளைக் கொண்ட கொச்சிக்குச் சென்றார். கொச்சி மற்றும் கள்ளிக்கோட்டையின் இந்து மன்னர்களிடையே நிலவிய பகைமையை அவர் தனது நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
போர்த்துகீசிய வணிகம் ஒருங்கிணைக்கப்படல்
ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்வதை நிறுத்திய போர்த்துகீசியர், இந்தியாவில் ஒரு ஆளுநரை அமர்த்த முடிவு செய்தனர். முதல் ஆளுநரான பிரான்ஸிஸ்கோ-டி-அல்மெய்டா நீலநீர்க் கொள்கை யைக் கடைபிடித்தார்.
இக்கொள்கையின் மூலம் அவர் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுப்படுத்தினார்.
சாமுத்ரியினுடைய கப்பற்படையையும் எகிப்திய சுல்தானின் கப்பற்படையையும் மூழ்கடித்தார். கொச்சி அரசருடன் நட்பு பூண்டு அவர் கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் ஏனைய இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்.
அல்மெய்டாவிற்குப் பின்னர் அல்புகர்க் (1509- 1515) பதவியேற்றார். இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே. பீஜப்பூரின் அரசர் யூசுப் அடில் கானைத் தோற்கடித்த இவர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார்.
கோவாவை முக்கிய வணிக மையமாக வளர்த்தெடுத்தார். அனைத்து மதம் சார்ந்த மக்களையும் கோவாவில் குடியேற ஊக்கப்படுத்தினார். ஐரோப்பியர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, போர்த்துகீசியர் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் குடியேறுவதை ஆதரித்தார்.
இந்தியாவிற்கும்- சீனாவிற்கும், மெக்காவிற்கும்-கெய்ரோவிற்கும் இடைப்பட்ட வணிகத் தடங்களின் மீது மேலாதிக்கம் செலுத்திவந்த முஸ்லீம் வணிகர்களைத் தோற்கடித்த அவர் மலாக்காவை (மலேசியாவில் உள்ளது) கைப்பற்றியதால் பேரரசு விரிவடைந்தது.
அராபியரைத் தாக்கி ஏடன் நகரைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றார். 1515இல் ஆர்மசு துறைமுகம் அவர் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது.
உடன்கட்டை (சதி) ஏறும் பழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை வலிமைப்படுத்துவதில் மேலும் இரண்டு ஆளுநர்கள் முக்கியப் பங்காற்றினர். அவர்கள் நினோ டா குன்கா, ஆன்டானியோ டி நொரன்கா ஆகியோராவர்.
டா குன்கா 1534இல் பசீனையும் 1537இல் டையூவையும் கைப்பற்றினார். 1559இல் டாமன் துறைமுகம் இமாத்-உல்-முல்க் என்பவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதே சமயத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கொழும்புவில் ஒரு கோட்டை கட்டியதைத் தொடர்ந்து இலங்கையின் மீதான போர்த்துகீசியரின் கட்டுப்பாடு அதிகமானது.
டி நொரன்காவின் காலத்தில்தான் (1571) முகலாய அரசர் அக்பர் குஜராத்திலுள்ள காம்பேவுக்கு வந்தார். போர்த்துகீசியருக்கும் முகலாயருக்கும் இடையிலான தொடர்பு உருவானது.
ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் பிலிப் 1580இல் போர்த்துக்கல் நாட்டைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டார்.
போர்த்துகீசியரை முதலில் இலங்கையில் தோற்கடித்த டச்சுக்காரர் பின்னர் மலபார் கடற்கரையிலிருந்த அவர்களின் கோட்டையையும் கைப்பற்றினர். இதனால் போர்த்துகீசியர் இந்தியாவில் தங்கள் குடியேற்றங்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் பிரேசிலின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
போர்த்துகீசிய வருகையின் தாக்கம்
இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றினர். இந்திய அரசர்கள் எப்போதும் பிரிந்திருந்தனர். அதை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
போரிடுவதில் ஐரோப்பியர் புதிய முறைகளைக் கைக்கொண்டனர். வெடிமருந்தும், வலிமை வாய்ந்த பீரங்கிப்படையும் முக்கியப் பங்கு வகித்தன.
போர்த்துகீசியரால் அராபியரின் வணிக முற்றுரிமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் உண்மையில் அது அவர்களுக்கு உதவவில்லை: மாறாக அது ஆங்கிலேயருக்குப் பயனளித்தது. ஆங்கிலேயர் கடற்கொள்ளையரை அழித்து கடற்பயணத்தைப்பாதுகாப்பானதாக ஆக்கினர்.
தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களைப் போர்த்துகீசியர் ஊக்குவித்ததன் விளைவாக ஒரு புதிய யூரேசிய இனக்குழு உருவானது. இவர்கள் பின்னாளில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலுமிருந்த போர்த்துகீசியரின் காலனிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சென்னை சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கியச் சான்றாக உள்ளது. போர்த்துகீசியர் கருப்பர் நகரம் (Black Town) என்று மயிலாப்பூரை அழைத்தனர் (ஆங்கிலேயர் கருப்பர் நகரம் என்று ஜார்ஜ் டவுனை அழைத்தனர்).
போர்த்துகீசியரின் குடியேற்றங்களுக்குப் பிறகு இயேசு சபையைச் சார்ந்த சமயப்பரப்பாளர்கள் இந்தியா வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்,
1. இராபர்டோ டி நொபிலி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் விரிவாக எழுதினார் இவர் தமிழ் உரைநடையின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
2. ஹென்ரிக்ஸ், போர்த்துகல் நாட்டு யூதரான இவர் தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
மீன்பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை, முத்துக்குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துகீசியருக்கும் கீழைக் கடற்கரையைச் சார்ந்த முஸ்லீம் குழுக்களுக்கும் இடையே 1530களில் மோதல்கள் நடந்தன. இதைப் பொறுத்தமட்டில், பரதவ மக்களின் ஒரு குழுவானது, ஆயுதம்பூண்ட முஸ்லீம் வணிகர்களின் தாக்குதல்களால் தாங்கள் பட்ட துயரங்களை கொச்சியிலிருந்த போர்த்துகீசிய அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டனர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட போர்த்துகீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களைக் கீழைக் கடற்கரைக்கு அனுப்ப, ஆயிரக்கணக்கான பரதவகுல மக்கள் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்திற்கு மதமாறினர்.
இதனைத் தொடர்ந்து இயேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்ஸிஸ் சேவியர் 1542இல் கோவா வந்தார். பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு சடங்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார்.
சோழமண்டலக் கடற்கரைக் கிராமங்களில் உயர் கோபுரங்களோடு உருவான தேவாலயங்களை இன்றும் காணலாம்.
கார்டஸ் (cartaz)என்ற பெயரில் போர்த்துகீசியர் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப்போவதாக பயமுறுத்துவர். கார்டஸ் முறையில் போர்த்துகீசியர் வணிகர்களிடமிருந்து பணம் பறித்தனர். கடற் கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக கூறிக்கொண்டனர். ஆனால் அதைப் போன்ற இடையூறுகளில் பலவற்றை செய்தவர்களும் போர்த்துகீசிய கடற்கொள்ளையரே.
டச்சுக்காரர்
அம்பாய்னா படுகொலை – 1623இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள், போர்த்துகீசியர், ஜப்பானியர் அடங்கிய இருபது பேர்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முகவர்கள் இந்தோனேசியாவிலுள்ள அம்பாய்னா என்னும் தீவில் சித்திரவதை செய்து கொன்றனர்.
ஜேன் ஹீயுன் வான் லின்சோடென் என்னும் நெதர்லாந்தைச் சேர்ந்த லிஸ்பனில் வாழ்ந்து வந்த வணிகர் டச்சுக்காரரின் முதல் பயணத்தை தென்கிழக்கு ஆசியாவை நோக்கி 1595 ஆம் ஆண்டு மேற்கொண்டார். கீழ்த் திசை நாடுகளோடு வணிகம் செய்வதற்காகப் பல நிறுவனங்கள் வணிகர்களாலும் தனிநபர்களாலும் நிறுவப்பட்டிருந்தன.
அரசு தலையிட்டு அவையனைத்தையும் ஒருங்கிணைத்து 1602இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கியது. புதிதாக உருவான இக்கம்பெனி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது.
டச்சுக்காரர் மலாக்காவை போர்த்துகீசிரியரிடமிருந்து 1641இல் கைப்பற்றினர். மேலும் 1658இல் இலங்கையைத் தங்கள் வசம் ஒப்படைக்கப் போர்த்துகீசியரைக் கட்டாயப்படுத்தினர். நறுமணத் தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் டச்சுக்காரர்
1502 முதல் பழவேற்காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர் டச்சுக்காரரால் அகற்றப்பட்டனர்.
பழவேற்காட்டில் டச்சுக்காரர் ஜெல்டிரியா என்னும் பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர்.
பழவேற்காடு, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப்பகுதியின் தலைமையிடமாயிற்று.
தங்கள் அதிகாரத்தை 1605இல் மசூலிப்பட்டினத்தில் நிறுவிய டச்சுக்காரர் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை 1610இல் நிறுவினர்.
நாகப்பட்டினம், புன்னைக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்), தேவனாம்பட்டினம் ஆகியவை டச்சுக்காரரின் ஏனைய கோட்டை மற்றும் காலனியாதிக்கப் பகுதிகளாகும்.
பழவேற்காட்டிலிருந்து மேலை நாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது, ஜாதிக்காய், ஜாதிபத்ரி, கிராம்பு ஆகியவையும் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன.
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வெடிமருந்து தொழிற்கூடம் ஒன்றை நிறுவினர்.
அடிமை வியாபாரத்தில் டச்சுக்காரர் ஈடுபட்டனர் அடிமைகளைப் பிடிப்பதற்காக டச்சுக்காரர் சென்னையில் தரகர்களை நியமித்தனர்.
பீஜப்பூர் சுல்தான் மேற்கொண்ட படையெடுப்பு தஞ்சாவூரின் வளமான வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தியதால் மேலும் பல மக்கள் அடிமைகளாயினர். இக்காலத்தில் (1646) ஏறத்தாழ 2118 அடிமைகள் பெரும்பாலும் அதிராமபட்டினம், தொண்டி, காயல்பட்டினம் போன்ற கடற்கரை ஓரமாக அமைந்திருந்த பகுதிகளைச் சார்ந்தவராக இருந்தனர். பஞ்சமும், வறட்சியும் போர்களும் அடிமை வணிகம் செழிக்க உதவின.
பிரெஞ்சுக்காரர்
போர்த்துகீசியராலும் டச்சுக்காரராலும் தூண்டப்பட்ட பிரெஞ்சுக்காரர் 1664இல் உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் தங்கள் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கினர்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக இருக்க, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசர் பதினான்காம் லூயியின் திட்டமாக அமைந்தது. அவருடைய நிதியமைச்சரான கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தார்.
பிரான்சின் முயற்சியானது அரசால் தொடங்கப்பட்ட முயற்சியாக இருந்ததால் பொதுமக்களின் ஆர்வத்தை அது ஈர்க்கத் தவறியது. மேலும் வரிவிதிப்பதற்கான மற்றொரு வழியென்றே அதை மக்கள் கருதினர்.
மடகாஸ்கர் வழியாகப் புதுச்சேரி
இந்தியாவிலிருந்த பிரெஞ்சு முகவரான பெர்பர், செப்டம்பர் 4, 1666இல் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்று தங்களின் முதல் நிறுவனத்தை டிசம்பர் 1668இல் டச்சுக்காரரின் எதிர்ப்பையும் மீறி சூரத்தில் அமைத்தார்.
ஓராண்டிற்குள் மசூலிபட்டினத்தில் மற்றுமொரு நிறுவனமும் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்பதை உணர்ந்த நிதியமைச்சர் கோல்பெர்ட், ஹேய் (ஜேக்கப் பிளான்குயிட் டி லா ஹேய், Jacob Blanquet de la Haye) என்பாரின் தலைமையில் கப்பற்படையொன்றை அனுப்பி வைத்தார்.
சாந்தோமிலிருந்தும் மயிலாப்பூரிலிருந்தும் டச்சுக்காரரை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்காரர் 1672இல் வெற்றி பெற்றனர். டச்சுக்காரர்களுக்கு எதிராகப் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் செர்கான் லோடியின் உதவியை பிரெஞ்சுக்காரர் நாடினர்.
பீஜப்பூரின் எதிரியான கோல்கொண்டா சுல்தானோடு, டச்சுக்காரர் நட்பு கொண்டனர்.
பிரெஞ்சுக்காரர் குடியேறுவதற்குப் பொருத்தமான இடமென புதுச்சேரியை செர்கான் லோடி வழங்கினார். 1673இல் புதுச்சேரி ஒரு சிறிய மீனவக் கிராமமாக இருந்தது.
மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார். இந்தியாவில் பிரெஞ்சுக் குடியேற்றங்களின் அதிகார மையமாக அதை உருவாக்கினார்.
புதுச்சேரியைத் தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரெஞ்சுக்காரர் மிகவும் சிரமப்பட்டனர்.
“நாங்கள் கடந்து சென்ற கிராமப்புறப்பகுதி (புதுச்சேரிக்கு வெளியேயுள்ள பகுதி) மிக நன்றாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது. மிக அழகாகவும் இருந்தது. அரிசி ஏராளமாகக் காணப்பட்டது. எங்கே நீர் இருந்ததோ அங்கே பருத்தி விளைவிக்கப்பட்டது.” புதுச்சேரி நிலப்பரப்பை குறித்து பிரான்ஸிஸ் மார்ட்டின் தனது நாட்குறிப்பில் எழுதியது.
தங்களின் முக்கியப் போட்டியாளரான டச்சுக்காரர்களை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்குப் போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் அவை வங்காளத்திலிருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஆகவே 1693இல் புதுச்சேரியை டச்சுக்காரர் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது.
புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 1697இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுகாரருக்குத் தரப்பட்டது. இருந்தபோதிலும் 1699இல்தான் அது பிரெஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1706இல் பிரான்ஸிஸ் மார்ட்டின் இயற்கை எய்தும்வரை அதன் ஆளுநராக இருந்தார்.
பிரெஞ்சுக்காரர் மேற்கொண்ட பெருமுயற்சியின் விளைவாக 1725இல் மாகியையும் 1739இல் காரைக்காலையும் பெற்றனர். வங்காளப் பகுதியில் காசிம் பஜார், சந்தன்நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவுபடுத்துவதில் பிரெஞ்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
பியரி பெனாய்ட் டூமாஸ் என்பவர் (1668- 1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார். இருந்தபோதிலும் தங்களைவிட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்துதல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர்.
டேனியர்
டென்மார்க் மற்றும் நார்வே (1813 வரை இரண்டும் இணைந்திருந்தது) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் தரங்கம்பாடி, மேற்கு வங்காளத்தில் செராம்பூர், நிக்கோபர் தீவுகள் ஆகியன டேனியர் வசம் இருந்த பகுதிகளாகும்.
1616 மார்ச் 17ஆம் நாள் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் ஒரு பட்டயத்தை வெளியிட்டதன் மூலம் டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கினார். டேனிய வணிகரிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை.
1618இல் கடற்படைத் தலைவர் ஒவி ஜெடி இலங்கைக்கு முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார். டேனியரால் இலங்கையோடு வணிக ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ள இயலவில்லை. ஏமாற்றத்தோடு திரும்புகிற வழியில் காரைக்காலுக்கு அருகே அவர்களின் முக்கியக் கப்பல் போர்த்துகீசியரால் மூழ்கடிக்கப்பட்டது.
சிக்கிக்கொண்ட பதிமூன்று மாலுமிகளும் அவர்களின் வணிக இயக்குநரான ராபர்ட் கிராப்பி என்பவரும் தஞ்சாவூர் நாயக்க அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார். 1620 நவம்பர் 20 ஆம் நாள் கையெழுத்தான அவ்வொப்பந்தத்தின்படி டேனியர்கள் தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த டென்மார்க் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை கலைக்க வேண்டுமென்றனர். ஆனால் அரசர் நான்காம் கிறிஸ்டியன் அதை எதிர்த்தார். 1648இல் அவரின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மகன் பிரடெரிக் இந்நிறுவனத்தைக் கலைத்தார்.
இரண்டாவது டேனிய கிழக்கிந்தியக் கம்பெனி 1696இல் தொடங்கப்பட்டது. டென்மார்க்கிற்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத் துவங்கியது. பல புதிய வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன. தஞ்சாவூர் நாயக்க அரசர் தரங்கம்பாடியைச் சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களைப் பரிசாக அளித்தார்.
பார்த்தலோமியஸ் சீகன்பால்கு, ஹென்ரிச் புலுட்சா ஆகிய இருவரும் 1706 செப்டம்பரில் தரங்கம்பாடி வந்தனர். அவர்கள் சமயப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
அவர்களின் பணிகளை உள்ளூர் டேனிய அதிகாரிகளும் இந்துக்களும் எதிர்த்தனர். உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்வதன் மூலம் சீகன்பால்கு கலகத்தைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சீகன்பால்கு ஓர் அச்சுக்கூடத்தை நிறுவினார். தமிழ்மொழி, இந்திய மதங்கள், பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார். 1715இல் அவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவரும் அவருடைய சகாக்களும் 1718இல் கட்டிய தேவாலயக் கட்டடமும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. உள்ளூர் மத குருமார்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு இறையியல் பயிற்சிப் பள்ளியையும் நிறுவினார்.
1719 பிப்ரவரி 23 ஆம் நாள் அவர் இயற்கை எய்திய போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, பழைய & புதிய ஏற்பாடு, தமிழில் சுருக்கமாக எழுதப்பட்ட பல ஏடுகள், இரண்டு தேவாலயங்கள், இறையியல் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றையும் புனித நீராட்டல் சடங்கை முடித்திருந்த 250 கிறித்தவர்களையும் விட்டுச் சென்றார்.
ஆங்கிலேயரின் வருகை
ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனம் இலண்டன் நகரின் லேடன்ஹால் வீதியைச் சேர்ந்த ஒரு வணிகக்குழு, கீழை நாடுகளுடனான பெரும் இலாபத்தை ஈட்டித்தரும் நறுமணப் பொருட்கள் வியாபாரத்தில் தாங்களும் பங்கு பெற அரசியார் முதலாம் எலிசபெத்திடமிருந்து பட்டயம் (உரிமை ஆணை) ஒன்றைப் பெற்றனர்.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பணம் படைத்த வணிகரையும், மேட்டுக்குடி மக்களையும் பங்குதாரர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் ஒரு ஆளுநராலும் 24 இயக்குநர்களைக் கொண்ட குழுவாலும் மேலாண்மை செய்யப்பட்டது.
1611இல் அரசர் முதலாம் ஜேம்ஸ், வில்லியம் ஹாக்கின்ஸ் மூலம் இந்தியாவுடன் இயல்பாக வணிகம் செய்யும் அனுமதியை முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் பெற்றார். ஆங்கிலேயர் சூரத்தில் சில வணிக உரிமைகளைப் பெற்றனர்.
குஜராத்தின் முகலாய ஆளுநரான இளவரசர் குர்ரம் ஆங்கிலேயருக்கு வணிக உரிமைகளை வழங்கினார். ஆனால் இப்பகுதிகளில் போர்த்துகீசியர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததால் ஆங்கிலேயரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.
1639இல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்து அதில் கோட்டைக் கட்டிக் கொள்ளும் அனுமதி வழங்கினார். கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழு முதன்முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே.
சென்னையில் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் மீது 1645ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார்.
1687இல் ஔரங்கசீப் கோல்கொண்டாவைக் கைப்பற்றிக் கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். ஆனால் ஆங்கிலேயருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன. குறுகிய காலத்திற்குள் மசூலிப்பட்டினத்திற்கு மாற்றாகக் கம்பெனியின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியின் தலைமையிடமாக சென்னை மாறியது.
அரசர் இரண்டாம் சார்லஸ் திருமணத்தின்போது மணக்கொடையாகப் பெற்ற பம்பாய் தீவு 1668இல் கம்பெனிக்கு வழங்கப்பட்டது.
1683 ஆம் ஆண்டுப் பட்டயம் கம்பெனிக்குப் படைகளை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது.
1652இல் சென்னை ஓர் மாகாணமாக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் (1655) இம்மாகாண அந்தஸ்து நீக்கப்பட்டது. மீண்டும் 1684இல் சென்னை மாகாண அந்தஸ்தைப் பெற்றது. 1688இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் (Aldermen) அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது. 1693இல் சென்னையைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களையும் 1702இல் மேலும் ஐந்து கிராமங்களையும் பெற்றது.
வங்காளம்
முகலாய அரசர் ஷாஜகானின் இரண்டாவது மகனும் வங்காளத்தின் ஆளுநருமான ஷா சுஜாவிடமிருந்து கம்பெனி சில வணிக உரிமைகளைப் பெற்றிருந்தது. ஆனால் அவ்வுரிமைகள் முகலாய அரசால் முறையாக உறுதி செய்யப்படவில்லை. 1608இல் வங்காளத்திலிருந்த ஆங்கிலேயர் வணிக உரிமைகளைப் பெற்றனர்.
ஆனால் ஆங்கிலேயரின் வணிக உரிமைகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டதால் கம்பெனி முகலாய அரசின் பிரதிநிதியாக வங்காளத்தை நிர்வகிக்கும் ஆட்சியாளருக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்தது.
1690இல் அமைதி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை நிறுவியது. இவ்விடமே பிற்காலத்தில் கல்கத்தாவாயிற்று. 1696இல் அங்கு கோட்டை கட்டப்பட்டது.
1698இல் சுதநுதி, காளிகட்டா, கோவிந்தப்பூர் ஆகிய கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையைக் கம்பெனி பெற்றது. இதற்குப் பதிலாக கம்பெனி ஆண்டுதோறும் ரூ.1,200 செலுத்தியது. கல்கத்தாவில் கட்டப்பட்ட வில்லியம் கோட்டை 1770இல் மாகாணத்தின் தலைமையிடமாயிற்று.
நாரிஸ் தூதுக்குழு
இங்கிலாந்து அரசர் மூன்றாம் வில்லியம் சர் வில்லியம் நாரிஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அவர் 1698இல் ஔரங்கசீப்பை சந்தித்தார். ஆங்கிலேயக் குடியேற்றங்கள் மீது ஆங்கிலேயரின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதும், ஏற்கனவே பெறப்பட்ட சிறப்பு உரிமைகளை உறுதிப்படுத்துவதும், வணிக உரிமைகளை மேலும் நீட்டிப்பதும் இச்சந்திப்பின் நோக்கங்களாக இருந்தன.
ஆனால் இவ்வேண்டுகோள் 1714-1717 ஆண்டுகளில் சுர்மன் என்பவரின் தலைமையின் கீழ்வந்த தூதுக்குழு முகலாயப் பேரரசர் பருக்சியாரைச் சந்தித்தபோதுதான் ஏற்கப்பட்டது. சுர்மன் வணிக உரிமைகள் தொடர்பான அரசரின் ஆணையை பருக்சியாரிடமிருந்து பெற்றார். இவ்வாணை குஜராத், ஹைதராபாத், வங்காளம் ஆகிய பகுதிகளின் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
கர்நாடகப் போர்கள்
ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு 1746-1763 பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர். வரலாற்று அறிஞர்கள் இப்போர்களை கர்நாடகப் போர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
முதல் கர்நாடகப் போர்: 1746-1748
ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார்.
மரிய தெரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தெரேசாவுக்கு எதிராகக் கைகோத்தது. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும் களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன.
போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர்மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் பார்னெட் என்பாரின் தலைமையிலான ஆங்கிலக் கப்பற்படை இந்தியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.
இதனிடையே துய்ப்ளே, பிரான்சின் தீவின் (isle of France) ஆளுநராக இருந்த லா போர்டோனாய் என்பவரைத் தொடர்பு கொண்டார். அவர் தனது எட்டு போர்க் கப்பல்களுடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தார்.
ஆங்கிலக் கப்பற்படைக்குத் தலைமையேற்ற பைடன் தனது நான்கு கப்பல்களோடு பிரெஞ்சுக் கப்பல்களை இடைமறித்தார். 1746 ஜூலை 6 ஆம் நாள் நடைபெற்ற இப்போரில் தோல்வியடைந்த பைடன் இங்கிலாந்திலிருந்து வரவேண்டிய கப்பல்களை எதிர்பார்த்து கல்கத்தாவிலுள்ள ஹுக்ளிக்குப் பின்வாங்கினார்.
சென்னையின் வீழ்ச்சி
வெற்றிபெற்ற பிரெஞ்சுக் கப்பற்படை பாதுகாப்பற்றிருந்த சென்னையை 1746 செப்டம்பர் 15ஆம் நாள் கைப்பற்றியது.
சென்னை ஆளுநர் மோர்ஸ் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் ஆற்காடு நவாப் அன்வாருதீனின் உதவியை நாடினார். அரசியல் விவேகத்துடன் செயல்பட்ட துய்ப்ளே சென்னையைக் கைப்பற்றி நவாப்பிடமே ஒப்படைக்கப்போவதாகக் கூறி அவரை சமாதானம் செய்தார். 1746 செப்டம்பர் 21இல் ஆங்கிலேயர் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி சென்னையைத் தன்வசம் ஒப்படைக்கும்படி அன்வாருதீன் கேட்டபோது துய்ப்ளே தட்டிக்கழித்தார்.
உடனடியாக நவாப் 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையை தனது மகன் மாபுஸ்கானின் தலைமையில் அனுப்பி வைத்தார்.
சாந்தோம், அடையாறு போர்கள்
நவாப்பின் படைகள் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி வளைத்தன. ஆனால் பிரெஞ்சுப் படைகள் அவற்றை சாந்தோம் வரை பின்னுக்குத் தள்ளின. இதனிடையே பிரெஞ்சுப் படைகளுக்கு கூடுதல் படைகள் வந்து சேர்ந்தன. பிரெஞ்சுப்படைகளின் முன்னேற்றத்தை அடையாறு ஆற்றங்கரையில் தடுத்து நிறுத்த மாபுஸ்கான் முயற்சி மேற்கொண்டார். ஆனால் பிரெஞ்சுப்படைகள் சிரமப்பட்டு நீரைக் கடந்து நவாப்பின் படைகளைத் தீவிரமாகத் தாக்கின. நவாப்பின் படைகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது.
இதன் பின்னர் துய்ப்ளே கடலூரிலிருந்த ஆங்கிலேயருக்குச் சொந்தமான புனித டேவிட் கோட்டையின் மீது கண் வைத்தார். ஆங்கிலேயர் நவாப்பின் உதவியோடு பிரெஞ்சுக்காரரிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
துய்ப்ளே மீண்டும் ஒரு அரசியல் விவேக விளையாட்டை விளையாடினார். அவர் நவாப்பிடம் ஒருவார காலத்திற்குப் புனித ஜார்ஜ் கோட்டையில் நவாப்பின் கொடியை பறக்கவிட்ட பின்னர் கோட்டையை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்துவிடுவதாக உறுதிமொழி அளித்தார். மேலும் பிரெஞ்சுக்காரர் நவாபுக்கு ரூ.40,000 மதிப்புள்ள பரிசுகளை வழங்கி ஆங்கிலேயருக்கு வழங்க இருந்த உதவிகளை திரும்பப் பெறச் செய்தனர்.
இதனிடையே ஆங்கிலப்படைகள் கடற்படைத் தலைவர் பாஸ்கோவென் தலைமையில் புதுச்சேரியைக் கைப்பற்ற மேற்கொண்ட இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் 1748இல் ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் ஐ லா சபேல் (Aix La Chapelle) உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இவ்வுடன்படிக்கையின்படி இந்தியாவில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் தங்கள் மோதல்களை முடித்துக்கொண்டனர்.
பிரெஞ்சுக்காரர் சென்னையை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தருவதென்றும் அதற்கு மாறாக வட அமெரிக்காவில் லூயிஸ்பர்க் என்ற இடத்தை பிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டாம் கர்நாடகப் போர்: 1749-1754
ஐரோப்பாவில் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே அமைதி நிலவியது. ஆனால் இந்தியாவில் இவ்விரு காலனி நாடுகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தூண்டிவிட்டனர்.
ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளில் ஏற்பட்ட வாரிசுரிமை போர்களில் பங்கெடுப்பதன் மூலம் துய்ப்ளே பிரான்சின் செல்வாக்கை மேம்படுத்த விரும்பினர்.
ஆம்பூர் போர் (1749) – ஹைதராபாத் நிஜாமிற்கு உரிமை கோரிய முசாபர் ஜங், கர்நாடக அரியணைக்கு உரிமைகோரிய சந்தா சாகிப் ஆகிய இருவரும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரெஞ்சுக் காலாட்படைகளின் உதவியோடு அன்வாருதீன் படைகளைத் தாக்கி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினர். போரில் அன்வாருதீன் கொல்லப்பட்டார். சந்தா சாகிப் நவாபாக ஆற்காட்டினுள் நுழைந்தார். இதே சமயத்தில் அன்வாருதீனின் மகனான முகமது அலி திருச்சிக்குத் தப்பிச் சென்றார்.
ஹைதரபாத்தின் நிஜாம் ஆசப்ஜா 1748இல் மரணமடைந்தார். அவருடைய பேரன் முசாபர் ஜங் அடுத்த நிஜாமாக ஆவதற்கு உரிமை கொண்டாடியதை துய்ப்ளே ஆதரித்தார்.
ஆற்காட்டில் முகமது அலிக்கு எதிராக சந்தா சாகிப்பை ஆதரித்தார். பிரெஞ்சுக்காரர், நிஜாம், கர்நாடக நவாப் ஆகியோரிடையே ஒரு முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது.
பெரும் மதிப்பு வாய்ந்த சென்னையை இழந்த ஆங்கிலேயருக்குப் புனித டேவிட் கோட்டை மட்டுமே இருந்தது. பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கை குறைப்பதற்காக ஆங்கிலேயர் ஹைதராபாத் அரியணைக்கு எதிர் போட்டியாளரான நாசிர் ஜங்கையும், கர்நாடகத்தில் 1749இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் அவ்வரியணைக்கு முகமது அலியையும் ஆதரித்தனர்.
ஆம்பூர் போரைத் தொடர்ந்து வெற்றி பெற்ற படைகள் தக்காணத்தில் நுழைந்தன. பிரெஞ்சுப்படைகளால் நாசிர் ஜங் கொல்லப்பட்டார். முசாபர் ஜங் 1750 டிசம்பரில் ஹைதராபாத்தின் நிஜாமாக ஆக்கப்பட்டார்.
பேரரசை நிறுவ வேண்டுமென்ற துய்ப்ளேயின் கனவு நனவாகலாம் என்ற நிலை சில காலமிருந்தது. நிஜாமிடமிருந்தும் ஆற்காடு நவாப்பிடமிருந்தும் துய்ப்ளே பெருமளவு பணத்தையும் நிலங்களையும் பெற்றார்.
முசாபர் ஜங் பிரெஞ்சுக்காரரின் பாதுகாப்பைக் கோரியபோது துய்ப்ளே பிரெஞ்சுத் தளபதி புஸ்ஸி அவருடன் அதிக எண்ணிக்கையில் பிரெஞ்சு வீரர்களையும் அனுப்பி வைத்தார். ஆனால் முசாபர் ஜங் நீண்ட நாட்கள் உயிரோடில்லை. நாசிர் ஜங்கை யார் கொன்றார்களோ அவர்களே முசாபர் ஜங்கையும் கொன்றனர். உடனடியாக புஸ்ஸி நாசிர் ஜங்கின் சகோதரனான சலபத் ஜங் என்பாரை அரியணை ஏற்றினார். சந்தா சாகிப் ஆங்கிலேயரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமது அலியைக் கைது செய்யவும் (அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் திருச்சிக்கு தப்பியோடியவர்) நிஜாம் மற்றும் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் திருச்சியைக் கைப்பற்ற முடிவு செய்தார்.
கிளைவும் இரண்டாவது கர்நாடகப் போரும்
சந்தா சாகிப்பின் உதவியோடு திருச்சியைக் கைப்பற்ற வேண்டுமென துய்ப்ளேயும் உறுதி பூண்டிருந்தார். சந்தா சாகிப்பின் படையோடு பிரெஞ்சுப் படையினர் 900 பேர் சேர்ந்தனர்.
முகமது அலி 5000 படைவீரர்களையும் தனக்கு உதவியாக 600க்கும் மிகாத ஆங்கில வீரர்களை மட்டும் கொண்டிருந்தார். ராபர்ட் கிளைவின் எண்ணம் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தது. பிரெஞ்சுக்காரரும் நவாப்பும் திருச்சி முற்றுகையில் தீவிரமாக இருக்கையில் ஆற்காட்டின் மீது திடீர் தாக்குதலைத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை ராபர்ட் கிளைவ் முன்வைத்தார்.
கிளைவ் 1752 ஆகஸ்ட் 26இல் புனித டேவிட் கோட்டையிலிருந்து 200 ஆங்கிலயே, 300 இந்திய வீரர்களுடன் புறப்பட்டார். எதிர்பார்த்தபடி சிறிய பகுதிகளைச் சேர்ந்த பல அரசர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றனர். மைசூர் மற்றும் தஞ்சாவூர் அரசர்கள் முகமது அலியை ஆதரித்தனர்.
சந்தா சாகிப் உடனடியாக 3000 வீரர்களைத் தனது மகன் ராஜா சாகிப்பின் தலைமையில் ஆற்காட்டுக்கு அனுப்பி வைத்தார். 1752 ஆகஸ்ட் 31இல் ஆற்காட்டைக் கைப்பற்றிய கிளைவ் ராஜாசாகிப்பின் 53 நாள் கோட்டை முற்றுகையையும் தாக்குப்பிடித்தார். ராஜாசாகிப்பிற்குப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர் உதவினர். ஆரணி போரில் ஆங்கிலேயரும் மராத்திய அரசர் முராரிராவும் தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பிரெஞ்சு மற்றும் ஆற்காட்டுப் படைகளை எதிர் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பல போர்களில், குறிப்பாக காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற போரில் சந்தா சாகிப் பிடிபட்டு கொல்லப்பட்டார். முகமது அலி எதிர்ப்பேதுமில்லாமல் கர்நாடகத்தின் அரசரானார்.
ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் எப்போரிலும் ஈடுபடாத நிலையில் இந்தியாவில் தங்கள் காலனிகள் போரில் ஈடுபடுவதைக் கண்டனம் செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் துய்ப்ளேயை திரும்ப அழைத்துக் கொண்டது.
1755இல் ஆங்கிலேயருடன் புதுச்சேரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இந்திய சுதேச அரசுகளிடையே ஏற்படும் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இவ்வுடன்படிக்கை, இந்தியாவில் இவ்விருவரும் சொந்தமாகக் கொண்டிருந்த பகுதிகளைத் தெளிவாக வரையறுத்தது. இந்நிலை சுமார் இருநூறு ஆண்டு காலம் இந்தியா விடுதலை பெறும் வரை நடைமுறையிலிருந்தது.
பிளாசிப் போர் (1757)
வங்காளத்தில் உள்நாட்டு வணிகத்தில் பங்கேற்பதற்காக வங்காள நவாப்புக்கு செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் வணிகக் குழு, முகலாய அரசு வழங்கிய வணிக உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியது.
இதைத் தவிர வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவுடன் பகை கொண்டிருந்த அவருடைய சகோதரியின் மகனுக்கு வணிகக்குழு அடைக்கலம் வழங்கியது. அவரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு நவாப் கேட்டபோது வணிகக்குழு மறுத்துவிட்டது. இதனால் நவாப் வில்லியம் கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேயரைச் சிறையில் அடைத்தார்.
இருட்டறைத் துயரம் (Black Hole Tragedy) வங்காள நவாப்பால் கைது செய்யப்பட்ட 146 ஐரோப்பியர் 18க்கு 15 அடி அளவுள்ள ஓர் அறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்களில் 23 பேர் மட்டுமே உயிர்பிழைக்க மற்றவர்கள் மூச்சுத்திணறி இறந்து போனதாகவும் பழி சொல்லப்பட்டது.
வில்லியம் கோட்டையைச் சேர்ந்த ஆங்கில அதிகாரிகளின் இடர்பாடுகளைக் களைவதற்காக வணிகக்குழு புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒரு வலுவான படைப்பிரிவை ராபர்ட் கிளைவ், வாட்சன் ஆகியோர் தலைமையில் அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்றப் போரே வரலாற்று அறிஞர்களால் பிளாசிப் போர் என அழைக்கப்படுகிறது.
பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழுவை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது. ஆங்கிலேயர் பெற்றிருந்த வணிக உரிமைகளை இது உறுதி செய்தது.
சிராஜ் உத்தௌலாவிற்குப் பதிலாக அவருக்குத் துரோகமிழைத்த மீர் ஜாபர் வங்காள நவாப் ஆக்கப்பட்டார். கல்கத்தாவின் மீதான வணிகக்குழுவின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது. தன்னுடைய படைகளைப் பராமரிப்பதற்காக வணிகக்குழுவிற்கு நிலம் வழங்கப்பட்டது. வணிகக்குழுவின் அதிகாரி (Resident) ஒருவரை தன்னுடைய அவையில் அமர்த்திக்கொள்ளவும் மீர்ஜாபர் ஒத்துக்கொண்டார். பின்னர் மீர்ஜாபருக்குப் பதிலாக மீர்காசிம் நவாப் ஆக்கப்பட்டார். இவர் தன் சுதந்திரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட முயற்சியை வணிகக்குழுவின் அதிகாரிகள் விரும்பவில்லை.
பக்சார் போர் (1764)
வங்காளத்திலிருந்து தப்பியோடிய மீர்காசிம் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாபான சூஜா உத்தௌலா ஆகியவர்களோடு கூட்டு சேர்ந்தார். தங்கள் உள் விவகாரங்களில் வணிகக்குழு தலையிடுவதால் அவர்களும் மனக்குறையோடு இருந்தனர். இம்மூவரும் வணிகக்குழுவுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்தனர்.
1764இல் பக்சார் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் இம்மூவரும் வீரத்துடன் போரிட்டனர். வணிகக்குழுவின் படைகள் சிறப்பு வாய்ந்ததாக இருந்தமையால் அவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
பக்சார் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி 1765இல் அலகாபாத் உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. ராபர்ட் கிளைவும் இரண்டாம் ஷாஆலமும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை) உரிமையைப் பெற்றது.
மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
மூன்றாம் கர்நாடகப் போர் (1756-63)
ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் வெடித்தவுடன், வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான சந்தன்நகரைக் கிளைவ் கைப்பற்றினார். இத்துடன் வங்காளத்தில் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கு முடிவுக்கு வந்தது.
பிரெஞ்சு அரசு கவுண்ட்-டி-லாலி என்பவரை இந்தியாவிலுள்ள பிரெஞ்சுப் படைகளுக்குத் தலைமைத் தளபதியாக அனுப்பி வைத்தது. ஆங்கிலேயர் வங்காளத்தில் தங்கள் கவனத்தைக் குவித்திருந்ததால் லாலி சிலநாள் முற்றுகைக்குப் பின்னர் உடனடியாக டேவிட் கோட்டையை கைப்பற்றினார்.
அடுத்து தஞ்சாவூர் முற்றுகையிடப்பட்டது. பிரெஞ்சுக்காரர் தஞ்சாவூர் அரசரிடமிருந்து பணம் எதிர்பார்த்தனர். ஆனால் அவரால் தரஇயலவில்லை.
புதுச்சேரியை ஆங்கிலப்படைகள் தாக்கும் ஆபத்து இருந்ததால் ஒரு பைசா லாபமில்லாமல் தஞ்சாவூர் முற்றுகை கைவிடப்பட்டது. ஒரு வேளை புதுச்சேரி தாக்கப்பட்டால் தனக்கு உதவியாக இருப்பதற்காக லாலி ஹைதராபாத்திலிருந்த புஸ்ஸியை அழைத்தார்.
இராஜமுந்திரியை 1758இலும் மசூலிபட்டினத்தை 1759இலும் பிரெஞ்சுக்காரர் இழந்தனர். ஹைதராபாத் நிஜாம் சலபத்ஜங் போரே செய்யாமல் ஆங்கிலேயரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரெஞ்சுக்காரருக்குத் தான் ஏற்கனவே வழங்கியிருந்த மசூலிபட்டினத்தையும் வடசர்க்கார் பகுதிகளையும் அவர் ஆங்கிலேயருக்கு மாற்றி வழங்கினார்.
புஸ்ஸி, லாலி ஆகியோரின் கூட்டுப்படை காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி, சென்னையைக் கைப்பற்ற விரைந்தது. ஆங்கிலேயர் வங்காளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்ததால் சென்னையில் 800 ஆங்கில வீரர்களையும் 2500 இந்திய வீரர்களையும் மட்டுமே கொண்டிருந்தனர்.
1758 டிசம்பர் 12ஆம் நாள் சென்னையை முற்றுகையிடத் தொடங்கிய பிரெஞ்சுக்காரரால் 1759 பிப்ரவரி வரை சிறிதும் கூட முன்னேற முடியவில்லை. இரண்டு பக்கங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் படைகளுக்குத் தேவையான பொருட்களின் வரத்து சுருங்கியதால் பிரெஞ்சுக்காரரால் முற்றுகையை நீட்டிக்க இயலவில்லை.
இதே சமயத்தில் சென்னையை விடுவிப்பதற்காக ஆங்கிலேய ஜெனரல் பொகாக் ஒரு கப்பற்படையோடு இந்தியா வந்தார். லாலி முற்றுகையைக் கைவிட்டுக் காஞ்சிபுரம் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளானார்.
வந்தவாசிப் போரும் புதுச்சேரியின் வீழ்ச்சியும்
பிரெஞ்சுப் படைகளை ஆற்காட்டில் விட்டுவிட்டு லாலி புதுச்சேரி திரும்பினார். வந்தவாசியை நோக்கிச் சென்ற ஆங்கிலப்படைகள் திடீரென காஞ்சிபுரத்தைத் தாக்கிக் கைப்பற்றின.
சர் அயர்கூட் என்பவரின் தலைமையில் புதிய ஆங்கிலபடைப்பிரிவும் வந்து சேர்ந்தது. இறுதியில் 1760 ஜனவரி மாதம் இறுதிப்போர் அயர் கூட், லாலி ஆகியோரிடையே வந்தவாசியில் நடைபெற்றது. புஸ்ஸி தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். லாலி புதுச்சேரிக்குப் பின் வாங்கினார். ஆனால்
புதுச்சேரி உடனடியாக முற்றுகையிடப்பட்டது.
இதே சமயத்தில் செஞ்சியைக் கைப்பற்றிய ஆங்கிலப்படைகள், புதுச்சேரியை முற்றுகையிட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைத்த லாலி தீரத்துடன் போராடினார். பல மாதங்கள் நீடித்த புதுச்சேரி முற்றுகை 1761 பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் முடிவுக்கு வந்து புதுச்சேரி வீழ்ந்தது.
லாலி கைது செய்யப்பட்டு பிரெஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். தன்னுடைய நாட்டில் லாலி விசாரணை செய்யப்பட்டு மரணதண்டனை
வழங்கப்பட்டது. அதே ஆண்டில் பிரெஞ்சு வணிகக்குழுவிற்குச் சொந்தமான மாகியையும் ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பிரெஞ்சுக்காரர்கள் அனைத்து இடங்களையும் இழந்தனர். ஏழாண்டுப் போரின் இறுதியில், 1763இல் பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது அனைத்துப் போர்களும் முடிவுக்கு வந்தன.
பாரிஸ் உடன்படிக்கையின்படி புதுச்சேரியும் சந்தன்நகரும் மீண்டும் பிரெஞ்சுக்காரருக்கு வழங்கப்பட்டது. எனவே பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் (யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பகுதிகள்), மாகி (கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்டம்), சந்தன்நகர் (வங்காளம்) ஆகிய பகுதிகளை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.
வணிக நிறுவனமாக இருந்த இங்கிலாந்து பெரும் நிலப்பரப்பை ஆளுகின்ற சக்தியாக மாறி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட காலனியாதிக்க நாடாக எழுச்சி பெற்றது.