Blog

குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்;

Class 65 இந்திய ஆட்சியியல்

குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்;

குடியுரிமை

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை இந்திய அரசியலமைப்பின் பகுதி II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.

குடியுரிமைச் சட்டம் (1955)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது.

இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் ஒன்பது முறை திருத்தப்பட்டுள்ளது.

குடியுரிமை பெறுதல்

குடியுரிமைச் சட்டம் 1955ன் படி ஒருவர் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்.

பிறப்பின் மூலம்: 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.

வம்சாவளி மூலம்: 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை (அவர் பிறந்த போது) இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர், வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்.

பதிவின் மூலம்: ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.

இயல்புரிமை மூலம்: ஒரு வெளிநாட்டவர், இந்திய அரசிற்கு, இயல்புரிமை கோரி விண்ணப்பிப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.

பிரதேச (நாடுகள்) இணைவின் மூலம்: பிற நாடுகள் / பகுதிகள் இந்தியாவுடன் இணையும் போது இந்திய அரசு அவ்வாறு இணையும் நாடுகளின் மக்களைத் தமது குடிமக்களாகக் கருதி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம்.

குடியுரிமையை இழத்தல்

குடியுரிமைச் சட்டம் 1955ன் படி, ஒருவர் தன் குடியுரிமையை, சட்டத்தின் மூலமாக பெறப்பட்டதாகவோ (அ) அரசியலமைப்பின் கீழ் முன்னுரிமையால் பெறப்பட்டதாகவோ இருக்கும்பட்சத்தில் பெற்ற குடியுரிமையைத் துறத்தல், முடிவுறச் செய்தல், இழத்தல் என்ற

பின்வரும் மூன்று வழிகளில் இழப்பார்.

  1. ஒரு குடிமகன் தாமாக முன்வந்து தனது குடியுரிமையை துறத்தல்.
  2. வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும்போது தாமாகவே இந்தியக் குடியுரிமை முடிவுக்கு வந்துவிடுதல்.
  3. இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன், மோசடி செய்து குடியுரிமை பெற்றவர், தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் (அ) உண்மைகளை மறைத்தவர் (அ) எதிரி நாட்டுடன் வாணிகம் செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் என்பதை நடுவண் அரசு கண்டறிந்து அவர் குற்றம் புரிந்தவர் என்று திருப்திப்படும் பட்சத்தில் நடுவண் அரசு, அவரது குடியுரிமையை இழக்கச் செய்யும்.

ஒற்றைக் குடியுரிமை

2015, பிப்ரவரி 27 அன்று மக்களவையில் குடியுரிமை சட்டம் 1955-ல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது.

பதிவு அல்லது இயல்புரிமை முறையில் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர் குறிப்பிட்ட தகுதிகளை நிறைவுசெய்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ அல்லது அரசுப்பணியில் 12 மாதங்கள் இருந்தாலோ ஒரு நபர் இந்தியக் குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்க முடியும். ஆனால், அசாதாரண சூழல் நிலவுமானால் இந்தத் தகுதிகளைத் தளர்த்திக்கொள்ளவும் இந்த சட்டம் வழி வகுக்கிறது.

வயது வந்தோர் வாக்குரிமை

‘ஒரு நபர், ஒரு வாக்குரிமை’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் 18 வயது நிறைவடைந்தோர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்கள்.

 

அடிப்படை உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள்அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.

முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.

1978ஆம் ஆண்டு, 44ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ‘இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது.

 

  1. சமத்துவ உரிமை

பிரிவு 14  – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

பிரிவு 15  – மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடைசெய்தல்.

பிரிவு 16  – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.

பிரிவு 17  – தீண்டாமையை ஒழித்தல்.

பிரிவு 18  – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.

 

2.சுதந்திர உரிமை

 

பிரிவு 19         – பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க                                                  உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.

பிரிவு 20         – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

பிரிவு 21         – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.

பிரிவு 21 A     – தொடக்கக்கல்வி பெறும் உரிமை.

பிரிவு 22          –  சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

 

3. சுரண்டலுக்கெதிரான உரிமை

பிரிவு 23       – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.

பிரிவு 24       – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

 

4.சமயச்சார்பு உரிமை

பிரிவு 25         – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.

பிரிவு 26         – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.

பிரிவு 27         – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.

பிரிவு 28         – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமலிருக்க உரிமை

 

5. கல்வி, கலாச்சார உரிமை

பிரிவு 29         – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.

பிரிவு 30         – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

 

6. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

பிரிவு 32         – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (சட்டப்பிரிவு – 32)

நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.

சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன. இது போன்ற ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் ‘அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறது.

டாக்டர். B.R அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்.

) ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus)

சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)

மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்

) தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)

ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.

) ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)

உயர்நீதிமன்றம், நியாயமான ஆவணங்களை பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.

) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto)

இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.

‘கல்வி உரிமை’

2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21A வின் கீழ் 6 முதல் 14 வயதுவரையான அனைத்துச் சிறார்களுக்கும் இலவச, கட்டாய தொடக்கக்கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்துள்ளது. இதை அமலாக்கும்வகையில் மாநிலங்கள் விதிகளை வகுத்துக்கொள்ளலாம்.

சிறார் இலவச கட்டாயக் கல்வி சட்டம், 2009, அரசமைப்பு உறுப்பு 21-அ கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம் இயற்றப்பட்டது. (Early Childhood Care and Education – ECCE)

அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.

மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம். குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அடிப்படைக் கடமைகள்

இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை முன்னாள் சோவியத் யூனியன் (USSR) [ரஷ்யா] அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்.

1976 ஆண்டு, அமைக்கப்பட்ட சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. அதன்படி 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றைச் சேர்த்தது. இவ்வாறு சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்களின் கடமைகள் என்றழைக்கப்பட்டன.

இந்தச் சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் பகுதி IV A என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்த்தது. இந்தப் புதிய பகுதி 51 A என்ற ஒரேயொரு பிரிவை மட்டும் கொண்டது. இது குடிமக்களின் 11 அடிப்படைக் கடமைகளை விளக்கும் குறிப்பிட்ட சட்டத் தொகுப்பாக உள்ளது.

அடிப்படைக் கடமைகளின் பட்டியல்

அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியலமைப்பு, அதன் கொள்கைகள், நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றை மதித்தல்.

ஆ) சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல்.

இ) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றைப் பேணிப் பாதுகாத்தல்,

ஈ) தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்.

உ) சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து, பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல்.

ஊ) நமது உயர்ந்த, பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்.

எ) காடுகள், ஏரிகள், ஆறுள், வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்.

ஏ) அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்.

ஐ) வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்.

ஒ) தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு, தேசத்தின் நிலையான, உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்.

ஓ) 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல். (86வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002இன் படி 51A (k) கீழ் 11வது அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயதுள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்).

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது.

சமதர்ம, காந்திய மற்றும் தாராள-அறிவுசார்ந்தவை என்று பிரிக்கப்பட்டுள்ளன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படைக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க விதிகளை அது கொண்டுள்ளது.

கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியாது. ஆனால் இவை ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை. சமுதாய நலனை மக்களுக்குத் தருவதே இதன் நோக்கமாகும்.

இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்‘ என டாக்டர். B.R. அம்பேத்கர் இதனை விவரிக்கிறார்.

அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை.

அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும்.

எந்த நீதிமன்றத்தாலும் சட்டத்தால் செயற்படுத்த கட்டாயப்படுத்த முடியாது

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories