குப்தர்கள்
May 21, 2025 2025-11-13 10:24குப்தர்கள்
குப்த அரச வம்சம் நிறுவப்படல்
குஷானப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடாலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு குப்தப் பேரரசு ஆகும்.
கி.பி. (பொ.ஆ.) 3-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குப்தப்பேரரசு ஸ்ரீகுப்தர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது. நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் ஸ்ரீகுப்தர்ருடையதே. இவருக்குப்பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முதலாம் சந்திரகுப்தர், முதலாம் சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர் போன்றோர்கள் இப்பேரரசின் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தனர்.
முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 319 – 335)
குப்தவம்சத்தின் முதலாவது முக்கிய மன்னராக முதலாம் சந்திரகுப்தர் (கி.பி.319-335) குறிப்பிடப்படுகிறார். இவரது ஆட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் குப்தயுகம் என்ற காலக் கணக்கீடு புகுத்தப்பட்டது.
முதலாம் சந்திரகுப்தர், புகழ்பெற்ற, வலிமை மிகுந்த ‘லிச்சாவி’ அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார். இக்குடும்பத்தின் ஆதரவோடு, வட இந்தியச் சிற்றரசுகள் பலவற்றை இவர் வெற்றிகொண்டு, ஒரு பேரரசின் முடியரசராகத் தன்னை முடி சூட்டிக்கொண்டார். சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை எனக் கருதப்படும் தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ‘லிச்சாவையா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்றாகும். அதனுடைய ஆட்சிப் பகுதி கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.
சமுத்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 335 – 380)
முதலாம் சந்திரகுப்தருக்குப்பின் பட்டத்திற்கு வந்த சமுத்திரகுப்தர் மகத்தான போர்த்தளபதியாவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார். தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார். பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
சமுத்திரகுப்தர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார். பதினோரு குடியரசுக் குழுக்களையும், தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.
கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி, ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.வங்காளத்திலிருந்து சிந்துநதி வரையிலும் இமயமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது
சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார். தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் அரசரால் நடத்தப்படும் வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார். அவர் தங்க நாணயங்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல; கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் ‘கவிராஜா’ எனும் பட்டம் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பௌத்த அரசன் சமுத்திரகுப்தரின் சமகாலத்தவராவார்.
அலகாபாத் கற்றூண் கல்வெட்டு
முதலாம் சந்திரகுப்தரின் மகனான சமுத்திரகுப்தர் குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் ஆவார். சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் 33 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாம் சமுத்திரகுப்தரின் போர் வெற்றிகள், படைத்திறன் ஆகியவை பற்றியும், குப்த பேரரசின் ஆட்சி எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்.
இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 380 – 415)
இரண்டாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரின் மகனாவார். அவர் விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார். அவர் சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும், குஜராத்தையும், உஜ்ஜயினி நகரைக் கைப்பற்றினார். தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார். குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இவருடைய ஆட்சியின்போது பாகியான் எனும் சீன பௌத்த அறிஞர் இந்தியா வந்தார். மிகச் சிறந்த அறிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் (நவரத்தினங்கள்) கலைஞர்களும் இவருடைய அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காளிதாசர் எனக் கூறப்படுகிறது.
பாஹியானின் குறிப்புகள்
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி பாஹியான் ஆவார். இவர் பெஷாவர், காசி, கயா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். இவர் இந்தியாவில் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். பாடலிபுத்திரத்தில் 3 ஆண்டுகளிருந்து சமஸ்கிருத மொழியையும், பௌத்த இலக்கியங்களையும் கற்றார்.
இவருடைய குறிப்புகள் இரண்டாம் சந்திரகுப்தரின் கால அரசியல், சமூக, பொருளாதார சமய நிலைகளைப் பற்றிக் கூறுகின்றன. பாகியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் செழிப்போடும் வாழ்ந்தனர்.
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள்
- காளிதாசர் – சமஸ்கிருதப் புலவர்
- ஹரிசேனர் – சமஸ்கிருதப் புலவர்
- அமர சிம்ஹர் – அகராதியியல் ஆசிரியர்
- தன்வந்திரி – மருத்துவர்
- காகபானகர் – சோதிடர்
- சன்கு – கட்டடக் கலை நிபுணர்
- வராகமிகிரர் – வானியல் அறிஞர்
- வராச்சி – இலக்கண ஆசிரியர், சமஸ்கிருதப் புலவர்
- விட்டல்பட்டர் – மாயவித்தைக்காரர் (Magician)
இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்: விக்கிரமாதித்யர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரம தேவராஜர், தேவ குப்தர், தேவஸ்ரீ
இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.
குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. அவர், அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்கள் குப்தப் பேரரசைத் தோற்கடித்தனர்.
மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான பாலாதித்யர் முதலாம் நரசிம்மகுப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார். இவர் பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவராவார். இவர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தார். ஆனால் மிகிரகுலர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மனவேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார். மிகிரகுலரைக் கைது செய்து சிறையில் அடைப்பதில் பாலாதித்யா வெற்றி பெற்றாலும் மிகிரகுலர் வஞ்சகமாகப் பாலாதித்யரை மகதத்திலிருந்து வெளியேற்றினார். பாலாதித்யருக்குப் பின்னர் மாபெரும் குப்தப் பேரரசு தேய்ந்து காணாமற்போனது. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணுகுப்தர் ஆவார்.
ஆட்சிமுறை
குப்தப் பேரரசர்கள் பரம பட்டாரகா, மகாராஜாதிராஜா, பரமேஸ்வரா, சாம்ராட் போன்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர். பேரரசருக்குக் கீழ் முதலமைச்சர், படைத்தலைவர் உள்ளடக்கிய அமைச்சரவையும் இருந்தது. இந்த அமைச்சர்கள் அரசனுக்கு ஆலோசனை வழங்கினர்.
குப்தர் காலத்தில் குமாரமாத்யர்கள் என்ற வருவாய்த்துறை உயரதிகாரிகள் பற்றியும் மகாசந்திவிக்ரஹா என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் பற்றியும் குப்தர் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நீதித்துறை மற்றும் ராணுவத்துறையில் பொறுப்பு வகித்த அமைச்சர்களை முறையே தண்டநாயகர், மகாதண்டநாயகர் என்ற பெயர்களால் குறிப்பிட்டதை அலகாபாத் கற்றூண் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. குப்தர்கள்கால குதிரைப்படைத்தலைவர், மகாஅஸ்வபதி என்றழைக்கப்பட்டார்
குப்தர்களின் ஆட்சி அமைப்பு
- குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
- அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.
- எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனும் கோட்பாடு
- குப்த அரசர்கள் அரசியல், நிர்வாகம், இராணுவம், நீதிவழங்கல் ஆகிய துறைகளில் பெருமளவிலான அதிகாரம் பெற்றுத் திகழ்ந்தனர். குப்த அரசர்களுக்கு அமைச்சர்கள் குழுவொன்று நிர்வாகத்தில். உதவி செய்தது. அக்குழு இளவரசர்களையும், உயர் அதிகாரிகளையும், கப்பம் கட்டும் சிற்றரசர்களையும் கொண்டிருந்தது.
- நாட்டின் அன்றாட நிர்வாகத்தைத் திறம்பட நடத்த, பெருமளவிலான அதிகாரிகள் குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்டனர். உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் ‘தண்ட நாயகர்’ மற்றும் ‘மகாதண்ட நாயகர்’ என அழைக்கப்பட்டனர். குப்தப் பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ எனும்
பெயரில் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றை ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர். பிராந்தியங்கள் ‘விஷ்யா’ எனும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. விஷ்யாபதிகள் எனும் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தை மேற்கொண்டனர். கிராம அளவில் கிராமிகா, கிராமதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர். - விரிந்து பரந்த குப்தப் பேரரசு, இராணுவ அமைப்பின் முக்கியப் பங்கினை உணர்த்துகிறது. முத்திரைகளிலும் கல்வெட்டுக்களிலும் இராணுவப் பதவிகளின் பெயர்கள் பாலாதிகிரிதா, (காலாட்படையின் தளபதி) மஹாபாலாதிகிரிதா (குதிரைப் படையின் தளபதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘தூதகா’ எனும் ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பார்க்கும் அமைப்பும் செயல்பட்டது.
சமூகமும் பொருளாதாரமும்
நிலம் மற்றும் விவசாயிகள்
காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது.
சமுத்திரகுப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், வருவாயின் உபரியே முதலீடு செய்யப்பட்டது. நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பலவேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
- சேத்ரா – வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
- கிலா – தரிசு நிலங்கள்
- அப்ரகதா – வனம் அல்லது காட்டு நிலங்கள்
- வஸ்தி – குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
- கபத சரகா – மேய்ச்சல் நிலங்கள்
வணிகமும், வர்த்தகமும்
குப்தர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகர்களில் இரண்டு வகையினர் இருந்தனர். ‘சிரேஸ்தி’
மற்றும் ‘சார்த்தவாகா’ என அவர்கள் அழைக்கப்பட்டனர்.
சிரேஸ்தி – சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.
சார்த்தவாகா – வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.
மிளகு, தங்கம், செம்பு, இரும்பு, குதிரைகள், யானைகள் ஆகியவை முக்கிய வணிகப் பொருட்களாகும். குப்தர்காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.
நாளந்தா பல்கலைக்கழகம்
- ” நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
- நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது. யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன.
- அப்பல்கலைக்கழகத்தில் யுவான் சுவாங் நாளந்தா பல்கலைக்கழகம் பௌத்த தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
- அந்த வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
- நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார்கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
- நாளந்தா யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்.
உலோகவியல்
குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும் உலோகத் தொழிலும் செழிப்புற்று விளங்கின.
உலோகத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத் தூணாகும். டெல்லியிலுள்ள
இவ்வொற்றை இரும்புத்தூண் இன்றளவும் துருப் பிடிக்காமல் உள்ளது.
குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள்:
இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, மணி வெண்கலம், மைக்கா,மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.
குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள்: நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை. சுல்தான் கஞ்ச் என்னும் இடத்திலுள்ள ஏழரை அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம். குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை அஜந்தா
குகை ஓவியங்களும், குவாலியர் பாக் குகையில் காணப்படும் ஓவியங்களும் ஆகும்.
குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார். குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை வழங்கின. குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன. குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன. குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது பேரரசினுடைய வளங்களின் வீழ்ச்சியைச்
சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.
இலக்கியம்
பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்தபோதிலும் குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலகமொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களின் கல்வெட்டுகள், அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளன. குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருத இலக்கணமும் வளர்ச்சி பெற்றது. அது பாணினி எழுதிய ‘அஷ்டதியாயி’, பதஞ்சலி எழுதிய ‘மகாபாஷ்யம்’ எனும் நூல்களை அடிப்படையாகக் கொண்டது. வங்காளத்தைச் சேர்ந்த சந்திரோகோமியா எனும் பௌத்த அறிஞர் ‘சந்திர வியாகரணம்’ என்ற இலக்கண நூலை எழுதினார். காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும். அவருடைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.
குப்தர்களின் ஆட்சிப் பிரிவுகள்
குப்தர்களின்பேரரசு தேசம் அல்லது புக்தி என்ற பெயர்களைக் கொண்ட மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலங்களை உபாரிகா என்ற ஆளுநர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் பேரரசரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உபாரிகா மற்ற அதிகாரிகளை நியமித்தார். உபாரிகா மாநில நிருவாகத்துடன் யானைப்படை, குதிரைப்படை வீரர்களையும் படைத்துறை நிருவாகத்தை மாநில அளவில் நிருவகித்தார்.
லோகபாலா என்ற அலுவலரைப் பற்றி ஈரன் என்ற கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் பஞ்ச மண்டலி என்ற குழுமத்தைப் பற்றிய குறிப்புகள் சாஞ்சிக் கல்வெட்டில் காணப்படுகின்றன.
மாநிலங்கள் விஷயம் என்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆட்சி செய்தவர்கள் விஷயபதிகள் எனப்பட்டனர். இவர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.
மாவட்டங்கள் பூமி, பதாகா, பீடா போன்ற பல்வேறு வித ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை ஆயுக்தகா, மகதரா போன்ற அதிகாரிகள் ஆட்சி செய்தனர். மகதராவின் கீழ் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு செயல்பட்டது.
மாவட்ட அளவிலிருந்து, ஆலோசனைக் குழு விஷயபதிகளுக்கு நிருவாக முறையில் ஆலோசனை கூறியது. இக்குழுவிற்கு அத்யக்ஷா என்று பெயர். கிராமப் பஞ்சாயத்துகளும் சிறப்புப் பெற்றுத் திகழ்ந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், மன்னரின் நேரடி நிருவாகத்தின் கீழ் செயல்பட்டன.
படை நிருவாகம்
குப்தர்கள் காலத்தில் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகிய படைகள் இருந்தன. மன்னரால் சிறப்பாக வழி நடத்தப்பட்ட இப்படை நிருவாகம் குப்தர்களின் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தது.
காலாட்படையின் தலைவர் பாலாதிகிருதியா என்றழைக்கப்பட்டார். குதிரைப்படைத் தலைவர் சேனாதிபதி என்றழைக்கப்பட்டார். ராணுவக் கிடங்குகளின் தலைமை அலுவலகம் ரணபந்தகா எனப்பட்டது.
மகாபிரதிஹாரா என்ற அரண்மனைக் காவலர்களும், கத்யதபகிதா என்ற அரச சமையலறைக் கண்காணிப்பாளரும் முக்கிய இடம் பெற்றனர். அமாத்யா, சச்சிவா போன்ற அலுவலர்கள் நிருவாக அதிகாரிகளாகப் பணியாற்றினர். ஒற்றர்களைக் கொண்ட உளவு அமைப்பு துடாகா என்றழைக்கப்பட்டது.
சமூக நிலை
குப்தர்கால சமூகநிலை சிறந்து விளங்கியது. குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக இருந்தன. வர்ணாஸ்ரமமுறை அடிப்படையிலான குப்தர்கள்கால சமூகத்தில், பல்வேறு தொழிற்பிரிவு மக்களும் வாழ்ந்தனர். உயர்குடியினர்கள் சமூகத்தில் அனைத்து உரிமைகளையும் பெற்றிருந்தனர். பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர், இவர்கள் கல்வியறிவு பெற்றுச் சமூகத்தில் சிறந்து விளங்கினர். ஆச்சார்யா எனப்பட்ட ஆசிரியர்களுக்குச் சமூகத்தில் உயர்ந்த மதிப்பிருந்தது. பெண்கள் காதணிகள், கழுத்தணிகள், வளையல்கள் போன்றவற்றை அணிந்தனர். தங்கம், வெள்ளி போன்றவற்றினாலான ஆபரணங்களுக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. போர்க்கைதிகள், கடனாளிகள், சூதாட்டத்தில் தோற்றவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
குப்தர்கள் கால பொருளாதார நிலை
குப்தர்கள் காலத்தில் வேளாண்மையே முக்கிய தொழிலாக விளங்கியது. நெல், கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் பயிரிடப்பட்டன. விளைச்சல் மற்றும் நிலத்தின் தன்மை அடிப்படையில் நிலம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டது. நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஜலநிர்கமா என்ற வடிகால்கள் மூலம் நீர்ப் பாசனப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. சுதர்சன ஏரி குப்தர்கள் கால நீர்ப்பாசனத்தில் முக்கிய இடம் பிடித்தது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு மக்களிடமிருந்து வரியாகப் பெறப்பட்டது. அவ்வரி பாகா எனப்பட்டது. கரா என்ற வரி, கிராமங்களில் வாழ்வோர் மீது விதிக்கப்பட்டது. ஹிரண்யா என்ற வரி, தங்க நாணயங்கள் வைத்திருப்போர் செலுத்தும் வரியாகும்.
குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய உலோகத் தொழில், சுரங்கத் தொழில் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இக்காலத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகளும் ராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகளும் கண்டறியப்பட்டன.
வணிகர்களுக்குள் வணிக், சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற மூன்று பிரிவினர் இருந்தனர். சார்த்தவாஹா இலாபம் வேண்டி ஊரெங்கும் வாணிகம் செய்தனர். வணிக், சிரேஷ்டி என்போர் உள்ளூர் வணிகர்களாவர்.
உஜ்ஜயினி, காசி, வைசாலி, கயா, பிரயாகை (அலகாபாத்) மதுரா ஆகிய இடங்கள் குப்தர்கள் கால முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்தன. கங்கை, கிருஷ்ணா, காவிரி, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் உள்நாட்டு நீர்வழி வாணிகத்திற்குப் பயன்பட்டன. கல்யாண், புரோச், காம்பே, தாமிரலிப்தி ஆகிய துறைமுகப் பகுதிகளிலிருந்து அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளோடு அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றது.
சமய நிலை
குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் முழுமையடைந்தது. சமண பௌத்த சமயங்களும் மக்களால் பின்பற்றப்பட்டன. தசாவதாரக் கதைகள் போன்றவற்றைக் கேட்டறிந்த மக்களுக்கு, இந்து சமயத்தின் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை கதைகளாகக் கூறப்பட்டன.
கங்கைச்சமவெளிப் பகுதிகளைப் பாஹியான் என்ற சீனப்பயணி, ‘பிராமணர்களின் பூமி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.குப்த மன்னர்கள் பெரும்பான்மை இந்துவாக இருந்தாலும் சமய சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்தனர்.
இந்து சமயத்தில் புதிய ஆன்மீக நம்பிக்கைகள் குப்தர்கள் காலத்தில் தோன்றின. மகாவிஷ்ணுவின் வாகனமாகக் கருடனையும் வணங்கினர். பாகவதம் என்ற பெயரில் மஹாவிஷ்ணு வழிபாடும் லட்சுமி வழிபாடும் புதிய சமயச் சடங்குகளுடன் வட இந்தியா முழுவதும் பரவின.
மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் கருத்துகள், மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன. மேலும், இராமாயணத்தின் நாயகனான ‘இராமனை’ மக்கள் கடவுளாக வழிபட்டனர். சிவ வழிபாடும் மக்களால் பின்பற்றப்பட்டது. வாகாடக, கடம்பவம்ச மன்னர்கள் சிவ வழிபாட்டைப் பெரிதும் பின்பற்றினர். பாசுபதம் என்ற சிவ வழிபாட்டுப் பிரிவு வட இந்தியாவில் பரவியது. பிரம்மன், சூரியன், கார்த்திகேயன், கணேசன், துர்க்கை, சரஸ்வதி போன்ற கடவுளரும் மக்களால் வழிபடப்பட்டனர். பசு, பாம்பு (நாகவழிபாடு) போன்ற விலங்குகளையும் மக்கள் வழிபட்டனர். கங்கை, யமுனை போன்ற நதிகளையும் புனிதமாகக் கருதி வழிபட்டனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்தி வழிபாடும், இந்திரன், வருணன், எமன் போன்ற கடவுளர் வழிபாடும் சிறப்புப்பெற்றிருந்தன. காசி, பிரயாகை போன்ற இடங்கள் புண்ணியத் தலங்களாகக் கருதப்பட்டன. புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் வழக்கம், மக்களிடையே பரவலாக இருந்தது.
குப்தர்கள் காலத்தில் இந்து சமயம் மெசபடோமியா பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா, போர்னியோ ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. குப்தர்கள் காலம் இந்தியச் செவ்வியல் கலைகளின் காலம் என்றழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளர்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.
பாலித்தீவு : குப்த பேரரசில் இந்துசமயம் இந்தியாவிலிருந்து பாலித்தீவிற்குப் பரவியது. இந்தியப்பண்பாடும் விழாக்களும் இன்றளவும் அங்குள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. கி.பி. (பொ.ஆ.) 7-ஆம் நூற்றாண்டில் இந்தியப்பண்பாடு சிறப்புற்று இருந்ததாகச் சீனப்பயணி இட்சிங், தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.
பௌத்த சமணசமயங்கள்
குப்தர்கள் காலத்தில், இந்து சமயம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் பௌத்தமும், சமணமும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குடன் திகழ்ந்தது. வசுபந்து என்ற பௌத்த சமய அறிஞரை முதலாம் சமுத்திரகுப்தர் ஆதரித்தார். புத்தகோசர் என்ற இலங்கை நாட்டுப் பௌத்தசமய அறிஞர், குப்தர்காலத்தில் புகழ்பெற்றிருந்தார். காஷ்மீர், காந்தாரம் போன்ற பகுதிகளில் இந்து சமயமும், பௌத்த சமயமும் செல்வாக்கு பெற்றிருந்தன. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களும் வட இந்தியாவில் ஸ்தூபிகளும் பௌத்த சமயத்தை மக்கள் பின்பற்றியதற்கான ஆதாரமாகத் திகழ்கின்றன.
சமண சமயம்
சமணசமயம் மதுரா, வல்லபி, உதயகிரி போன்ற இடங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது.
இலக்கியம்
குப்தர் காலத்தில் பல கவிஞர்கள் பல்வேறு வகையான இலக்கியங்களைப் படைத்து வடமொழியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
காளிதாசர் – சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்.
விசாகதத்தர் – முத்ரா ராக்ஷஸம், தேவி சந்திரகுப்தம்.
வாத்ஸ்யாயனர் – காமசூத்திரம்
வராகமிகிரர் – பிருகத் சம்கிதை
சந்திரர் – சந்திராச்சாரிய வியாக்கரணம்
அமரர் – அமரகோசம்
வாக்பட்டர் – அஷ்டாங்க சங்கிரக, அஷ்டாங்க கிருதய சம்ஹிதை (மருத்துவம்)
ஆரியபட்டர் – கணித நூல்கள், வானவியல்
சாமண்டகர் – நீதிசாஸ்திரம்
வீரசேனர் – வியாகரணம்
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
ஆரியபட்டர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞராவார். இவர் கணிதம், வானவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார். இவர் ஆரியபட்டீயம் என்ற நூலை எழுதினார். ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தைப் (0) பயன்படுத்தும் முறை இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கணிதத்தில் இயற்கணிதம் (Algebra), வர்க்கமூலம் போன்றவற்றை இவரே கண்டறிந்தார். சூரியனைப் பூமி வலம் வருகிறது என்றும், கோள்களின் சுழற்சியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
குப்தர் காலத்தில் வாழ்ந்த மற்றோர் அறிவியல் மேதை வராகமிகிரர் ஆவார். இவர் ‘பிருகத்சம்ஹிதை’ என்ற நூலை எழுதினார். இவர் விண்வெளி, கோள்கள், தாவரங்கள், நிலஅமைப்பு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அஸ்வசாஸ்திரத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சரகர் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார். இவர் சரகசம்ஹிதா என்ற மருத்துவ நூலை எழுதினார்.
தன்வந்திரி என்பவர் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஆயுர்வேத மருத்துவ மேதையாவார். இவர் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டடக்கலை
- தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
- விமானத்துடன் கூடிய (இரண்டாம் மாடி) தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
- வளைகோட்டுக் கோபுரம் (சிகரம்) கொண்ட சதுரக் கோயில்கள்
- செவ்வக வடிவிலான கோயில்கள்
- வட்ட வடிவக்கோயில்கள்
இக்கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டடக்கலைப் பாணியிலும் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியிலும் பின்னர் கட்டப்பட்டன.
தியோகர் என்ற இடத்தில் பஞ்சயாதன முறைப்படி மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையப்படுத்தித் தசாவதாரக் கோயில் கட்டப்பட்டது. மேலும், அங்கு சாந்தி நாதர் என்ற சமணத்துறவிக்கு கோயிலும், ஜபல்பூர் அருகில் திகாவா என்ற இடத்தில் மகாவிஷ்ணுவிற்குக் கோயிலும் கட்டப்பட்டன. பூமரா என்ற இடத்திலும், நச்சனக்குதாரோ என்ற இடத்திலும் நகரப் பாணியில் கோயில்கள் கட்டப்பட்டன. கான்பூர் அருகில் பிதார்கன் என்ற இடத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில், குப்தர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் நான்குவகை மண்டபங்கள் இடம்பெற்றிருந்தன. குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹுணர்களின் படையெடுப்பின்போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.
சிற்பக் கலை
மதுராவில் குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையில் கிரேக்கக்கலையின்சாயல் உள்ளது.சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது. சாரநாத் கலை பாணி இந்தியாவில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது கனிஷ்கர் காலத்தின் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது. விஷ்ணு, கார்த்திகேயர், துர்க்கை, நாகர் போன்ற கடவுளர்களுக்குச் சுடுமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள்
சிறப்பான வேலைப்பாடுடையனவாகும். உதயகிரி கோயிலிலுள்ள மகாவிஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பமும், தியோகர் கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்களும், பரத்பூர் கோயில்களிலுள்ள சிற்பங்களும் குப்தர் காலத்தில் சிறப்பு பெற்றவையாகும்.
சைவ, வைணவ (பாகவத) சமய நம்பிக்கைகளும் தத்துவங்களும் கோயில்களில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டன. பிதாரி என்ற இடத்திலுள்ள ஸ்கந்த குப்தரின் ஒற்றைக் கற்றூண் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுளரின் சிலைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் இவர்கள் காலத்தில் வடிக்கப்பட்டுள்ளன.
ஓவியக்கலை குப்தர்கள் காலத்தில் அஜந்தா, பாக்(குவாலியர் அருகில்) ஆகிய இடங்களில் ஓவியங்கள் அழகுற தீட்டப்பட்டன. அஜந்தாவிலுள்ள 16. 17-ஆவது குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றன.
போதிசத்துவர்களின் ஓவியங்களும் அழகிய பறவைகளின் ஓவியங்களும் சிறப்புப் பெற்றிருந்தன.
யுனெஸ்கோ(UNESCO) – 1983ஆம் ஆண்டில் அஜந்தா குகையை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
இசைக்கலை குப்த மன்னரான முதலாம் சமுத்திரகுப்தர் வீணைவாசிப்பது போன்று உருவம் பொறித்த நாணயங்கள் காணப்பட்டன. இதன்மூலம், இவர் இசைக்கலைக்கு ஆதரவு தந்தார் என்று அறியமுடிகிறது.
நாடகக்கலை
சாகுந்தலம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் ஆகியவை காளிதாசர் இயற்றிய நாடகங்களாகும். தேவிசந்திரகுப்தம், கௌமுகிமகோத்சவம் போன்ற நாடகங்களும் நடைபெற்றன. எனவே, செவ்வியல்கலைகளின் காலம் எனவும் போற்றப்படுகிறது.
இந்தியப்பண்பாட்டிற்குக் குப்தர்களின் கொடை
மத்திய அரசு நிருவாகத் துறைகள், மாநில அரசு நிருவாகத் துறைகள். மாவட்ட ஆட்சிமுறை, நகர மற்றும் கிராம நிருவாக சபைகள் போன்றவை இந்திய பண்பாட்டிற்குக் குப்தர்கள் வழங்கிய கொடைகளாகும்.
காளிதாசரின் சாகுந்தலம், இரகுவம்சம், விக்கிரமோர்வசியம், குமாரசம்பவம், மேகதூதம் மற்றும் பல இலக்கிய படைப்புகள் குப்தர்காலக் கொடையாகும்.
ஆரியபட்டரின் ‘கணிதநூல்’, வானவியல், வாக்பட்டரின் அஷ்டாங்க சங்கிரகம் (மருத்துவம்) வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தகம் (வானவியல்) சந்திரரின் சந்திராச்சாரிய வியாக்கரணம் (இலக்கணம்) மற்றும் அமரரின் நிகண்டு போன்ற நூல்கள் இந்தியப்பண்பாட்டு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்குக் குப்தர்கள் அளித்த கொடையாகும்.
இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் 18 புராணங்களும் தொகுக்கப்பட்டன; பஞ்சதந்திரக் கதைகள் இயற்றப்பட்டன. காளிதாசர், பாசர், விசாகதத்தர் போன்ற புகழ்பெற்ற வடமொழிப் புலவர்கள் பலர் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
சமஸ்கிருதமொழி ஆட்சி மொழி ஆயிற்று. விஷ்ணு, சிவன், துர்க்கை போன்ற இந்துக் கடவுளருக்குச் சிறுசிறு கோயில்கள் கட்டப்பட்டன. அஜந்தாவிலுள்ள சில பௌத்த குகைச்சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்தவை.
ஆர்யபட்டர், வராகமிகிரர் போன்ற புகழ் பெற்ற வானியல், கணித அறிஞர்களும், சரகர், சுசுருதர், தன் வந்திரி முதலிய மருத்துவ அறிஞர்களும் குப்தர் காலத்தவர்களே. 1500 ஆண்டுகளாய்த் துருப்பிடிக்காமல் இன்றும் பொலிவுடன் இருக்கும் மெகரெலி இரும்புத்தூண் குப்தர் காலத்ததாகும்.
குமாரகுப்தர் காலத்தில், பௌத்தர்களது புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஆனால், சமூகஅமைப்பில் சாதிமுறை மிகக் கடுமையாயிற்று. அசோகர் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த உயிர்ப்பலி, வேள்விகளுக்குப் புத்துயிர் அளிக்கப் பட்டது. சிவன் – சக்தி – விஷ்ணு – குமரன் (முருகன்) வழிபாடுகள் பெருகின. இந்துக் கடவுள்களுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. புஷ்யமித்திரர், ஹுணர் போன்ற அந்நியர் படை யெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
தொல்லியல் சான்றுகள்
குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள் சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு மெக்ராலி இரும்புத்தூண் கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைக் கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு. ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு கத்வா பாறைக் கல்வெட்டு மதுபான் செப்புப் பட்டயம், (பஞ்சாப்) சோனாபட் செப்புப் பட்டயம் நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு.
