Blog

சரக்கு மற்றும் சேவை வரி

Class 74 இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

சரக்கு மற்றும் சேவை வரி

“வரி” என்ற சொல் “வரிவிதிப்பு” என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.

வரி விதிப்பு என்பது அரசாங்கம் தனது செலவினங்களுக்காகப் பொது மக்களிடமும், பெரு நிறுவனங்களிடமும் வரிகளை விதித்து வருவாயை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும்.

அரசு கட்டமைப்பின் செயல்பாட்டிற்காக வரியின் மூலம் நிதி திரட்டுவது வரிவிதிப்பின் முக்கிய நோக்கமாகும்.

வரிவிதிப்பு முறை “நல அரசு” என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. வரிகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமேயாகும்.

பேராசிரியர் செலிக்மேன் கருத்துப்படி, “வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி” என வரையறை கூறுகிறார்.

இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.

  1. சமத்துவ விதி

வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.

  1. உறுதி விதி

ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.

  1. சிக்கன மற்றும் வசதி விதி

வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும். மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும், இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும் செலவை குறைக்கிறது.

  1. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி

அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது உற்பத்தித் திறன் வரியாகும். மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள். எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.

வரிகளின் வகைகள்

நேர்முக வரிகள்

நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர் மீது மாற்ற முடியாது. பேராசிரியர் ஜே.எஸ். மில்லின் கருத்துப்படி, நேர்முக வரி என்பது “யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்”. சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி

வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும். இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது. இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.

நிறுவனவரி

இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் மூலதன அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

சொத்து வரி (அ) செல்வ வரி

சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும். ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

மறைமுக வரிகள்

ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும். வரி விதிக்கப்பட்டவர் ஒருவர், வரி சுமையை சுமப்பவர் வேறு ஒருவராவார். ஆகையால், மறைமுகவரியில் வரியைச் செலுத்துபவர் வரி சுமையை சுமப்பவர் அல்லர்.

சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி

முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி

எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும். உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், பொருட்காட்சி, விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி

சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும். இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST – Goods and Service Tax)

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.

இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி” என்பதாகும்.

மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

1954ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)

மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்)

மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்)

மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)

நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

கருப்பு பணம் (Black Money)

கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.

வரி ஏய்ப்பு (Tax Evasion)

தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.

வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்

விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.

மறைக்கப்பட்ட பணம்.

கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

வரி ஏய்ப்பும், அபராதமும்

  1. ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலைத் தெரிந்தே செய்தால், அவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், கடுமையான குற்றச்சாட்டுகளை சந்திக்கவும் அதிக அளவு அபராதமும் செலுத்த நேரிடும்.
  1. பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
  1. வரிஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories