தேவநேயப் பாவாணர்
December 11, 2024 2025-04-30 5:24தேவநேயப் பாவாணர்
தேவநேயப் பாவாணர்
பெற்றோர் : ஞானமுத்து – பரிபூரணம்
ஊர் : சங்கரன்கோவில்
கல்வி : பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
காலம் : 07.02. 1902- 15.01. 1981
சிறப்பு : செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்.
தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் எனக் கூறினார் – தேவநேயப் பாவாணர்.
உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் பாவாணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்கள்.
மன்னிப்பு உருதுச்சொல்; பொறுத்துக்கொள்க தமிழ் சொல் எனக் கூறியவர் – தேவநேயப் பாவாணர்.
உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்தல் வேண்டும்; உட்கார்ந்துகொண்டு உண்டு செல்வது நன்றாகாது எனக் கூறியவர் – தேவநேயப் பாவாணர்
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு எனக் கூறியவர் – தேவநேயப் பாவாணர்
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுதிகள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தார்; இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தேவநேயப் பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது.
இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையத்திற்கு அருகிலுள்ள முறம்பு என்னும் இடத்தில் பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் 05.01.1981அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார்.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்; தமிழ், தமிழர் நலம் காப்பதனையே உயிர்மூச்சாகக்கொண்டவர். உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவிய செம்மல் தேவநேயப் பாவாணர்.
நூல் வெளி
மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் “சொல்லாய்வுக் கட்டுரைகள்” நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.