நிறுத்தல் குறியீடுகள்
January 31, 2025 2025-05-14 12:08நிறுத்தல் குறியீடுகள்
நிறுத்தல் குறியீடுகள்
காற்புள்ளி (,)
பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும். (எ.கா) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும். (எ.கா.) அன்புள்ள நண்பா,
வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும். (எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
மேற்கோள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும். (எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து,” நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும். (எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
அரைப்புள்ளி ( ; )
- ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும். (எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.
- உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும். (எ.கா.) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி(:)
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும். (எ.கா.) முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.
முற்றுப்புள்ளி ( . )
- சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும். (எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
- சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும். (எ.கா.) திரு. வி. க. மா. க. அ. ஊ. ஒ. ந. நி. பள்ளி
- பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும். (எ.கா.) நெ.து. சுந்தரவடிவேலு
வினாக்குறி (?)
வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும். (எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி (!)
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா.) தமிழின் இனிமைதான் என்னே! – வியப்பு
பாம்பு! பாம்பு! – அச்சம்
அந்தோ! இயற்கை அழிகிறதே! – அவலம்
ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.) ‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது `தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.
இரட்டை மேற்கோள்குறி (” “)
நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.) திரு. வி. க. மாணவர்களிடம்,” தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார்.
தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
விடை : பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
விடை : திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
விடை : தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.
கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
விடை : கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.
திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
விடை : திரு.வி.க. எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.
உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
விடை :-
‘நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். ‘எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்’ என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!
சேரர்களின் பட்டப் பெயர்
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலைய மான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
விடை:-
சேரர்களின் பட்டப் பெயர்களில், ‘கொல்லி வெற்பன்’ ‘மலைய மான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘கொல்லி வெற்பன்’ எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் “மலையமான்” எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்கஇலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.