பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
January 2, 2025 2025-05-14 11:32பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
வழக்கு
நம் முன்னோர் எந்தெந்ச் சொற்கள் என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்கள் அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.
இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்.
இயல்பு வழக்கு
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிபபிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூனறு வகைப்படும்.
- இலக்கணமுடையது
- இலக்கணப்போலி
- மரூஉ
இலக்கணமுடையது
இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
(எ.கா.) நிலம், மரம், வான், எழுது
இலக்கணப்போலி
இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
(எ.கா.) புறநகர், கால்வாய், தசை , கடைக்கண்.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
மரூஉ
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.) தஞ்சாவூர் – தஞ்சை, திருநெல்வேலி – நெல்லை,
தகுதி வழக்கு
தகுதியற்ற சொற்களை தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழூஉக்குறி
இடக்கரடக்கல்
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
(எ.கா.)
- கால் கழுவி வந்தான்.
- குழந்தை வெளியே போய்விட்டது.
- ஒன்றுக்குப் போய் வந்தேன்.
மங்கலம்
மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
(எ.கா.)
- ஓலை – திருமுகம்
- கறுப்பு ஆடு – வெள்ளாடு
- விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
- சுடுகாடு – நன்காடு
குழூஉக்குறி
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
(எ.கா.)
- பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
- ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
1.முதற்போலி 2.இடைப்போலி 3.இறுதிப்போலி
முதற்போலி
ஒரு சொல்லின் முதலில் உள்ள எழுத்து மாற்றம் பெற்று அதே பொருளைத் தருவதை முதற்போலி என்பர். (எ.கா.) பசல் – பைசல்; மயல் – மையல்; மஞ்சு – மைஞ்சு; நாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை; நயம்ப உரை – ஞயம்பட உரை; ஔவையார் – அவ்வையார்; ஐயன் – அய்யன்;
இடைப்போலி
(எ.கா.) அகம் – அகன், நிலம் – நிலன், முகம்- முகன், பந்தல் – பந்தர், குலம் – குலன், அறம் – அறன், நலம் – நலன், சாம்பல் – சாம்பர், குடல் – குடர், சுவல் – சுவர்;
பேச்சு வழக்கு
“தம்பீ? எங்க நிக்கிறே?”
“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு… நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்
பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்…”
“சரிங்கண்ண.
எழுத்து வழக்கு
“தம்பி எங்கே நிற்கிறாய்?”
“நீங்கள் சொன்ன இடத்தில் தான் அண்ணா! எதிர்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது”
“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு, நான் விரைாக வந்து விடுகிறேன்”
“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாடகளாகிவிட்டன.”
“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூடிக்கொண்டு வருகிறேன்.”
“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா. அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்”
“இப்போது உயரமாக வளர்நது விட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”
“சரி அண்ணா!”