பொறையுடைமை
September 25, 2023 2025-01-24 5:38பொறையுடைமை
1.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை (9th Tamil)
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. *****
விளக்கம்: நிலமானது, தன்னைத் தோண்டுபவரையும் தாங்குவதுபோல, நம்மை இழிவுபடுத்துவோரையும் நாம் பொறுத்துக்கொள்வதே சிறந்த பண்பு.
சொற்பொருள் : அகழ்வாரை – தோண்டுபவரை; இகழ்வார் – இழிவுபடுத்துவோர்; தலை – சிறந்த பண்பு.
இலக்கணக்குறிப்பு : பொறுத்தல் – தொழிற்பெயர்; அகழ்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்கள்
அணி: உவமை அணி
2.பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறுத்தல் அதனினும் நன்று.
விளக்கம்: ஒருவர் நமக்கு செய்யும் தீமையை பொறுத்துக் கொள்வதை விட மறந்து விடுவது நல்ல செயலாகும்.
சொற்பொருள் : பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்; இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை.
இலக்கணக்குறிப்பு : மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்கள்; நன்று – குறிப்பு வினைமுற்று.
3.இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம்: விருந்தினரை வரவேற்க முடியாத நிலை ஒருவனுக்கு வறுமையை விட மிகப் பெரிய வறுமை ஆகும். அதுபோல அறிவு
இல்லாதவர்கள் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக் கொள்வது வலிமையுள் சிறந்த வலிமையாகும்.
சொற்பொருள் : இன்மை – வறுமை; ஒரால் – தவிர்த்தல்; மடவார்- அறிவற்றார்.
இலக்கணக்குறிப்பு : விருந்து – பண்பாகு பெயர்; ஒரால், பொறை – தொழிற்பெயர்கள்.
அணி : எடுத்துக்காட்டு உவமையணி.
4.நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். *****
விளக்கம்: நற்குணங்கள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க பொறுமையை இழக்காமல் காத்து கொள்ள வேண்டும்.
சொற்பொருள் : நிறை – சால்பு.
இலக்கணக்குறிப்பு : நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்; போற்றி – வினையெச்சம்.
( இந்நாலு குறட்பாவும் பொறுமையின் சிறப்பினைக் கூறுகின்றன. )
5.ஒறுத்தாரை ஒன்றாக வையாரே, வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. *****
விளக்கம்: தீமை செய்தவரை பொறுத்துக் கொள்ளாது தண்டிப்பவரை மதிக்கமாட்டார்கள். ஆனால் அத்தீங்கை பொறுத்துக் கொள்பவரை பொன்னை
போல மதித்து போற்றுவர்.
சொற்பொருள் : ஒறுத்தாரை – தண்டித்தவரை; ஒன்றாக – ஒரு பொருட்டாக; பொதிந்து
வைப்பர் – (மனத்துள்) வைத்துக்கொள்வர்.
இலக்கணக்குறிப்பு : ஒறுத்தார் – வினையாலணையும் பெயர்; பொதிந்து – வினையெச்சம்.
6.ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ். *****
விளக்கம்: தீங்கு செய்தவரைப் பொறுத்து கொள்ளாது தண்டிப்பது அந்த ஒருநாள் மட்டுமே மகிழ்ச்சி தரும். அதை பொறுத்து கொண்டவர்களுக்கு
உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும்.
சொற்பொருள் : பொன்றும் துணையும் – உலகம் உள்ளவரை.
இலக்கணக்குறிப்பு : ஒறுத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்கள்.
7.திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து) (9th Tamil)
அறனல்ல செய்யாமை நன்று.
விளக்கம்: அறியாமையால் ஒருவர் செய்யும் தீமையை எண்ணி வருந்தித் தாமும் தீமை செய்யாது பொறுத்துக் கொள்வது சிறந்த பண்பாகும்.
சொற்பொருள் : திறனல்ல – செய்யத்தகாத; நோநொந்து – துன்பத்துக்கு வருந்தி.
இலக்கணக்குறிப்பு : தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை; செய்யினும் – இழிவுச்
சிறப்பும்மை; நொந்து – வினையெச்சம்; அறன், திறன் – ஈற்றுப்போலிகள்.
8.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் (9th Tamil)
தகுதியான் வென்று விடல். *****
விளக்கம்: மடமையால் தமக்கு தீமை செய்தவரை பொறுமையாக இருந்து வெற்றி கொள்ளல் வேண்டும்.
சொற்பொருள்: மிகுதியான்-மனச்செருக்கால்;மிக்கவை- தீமை; தகுதியான் – பொறுமையால்.
இலக்கணக்குறிப்பு : செய்தாரை – வினையாலணையும் பெயர்; விடல் – அல் ஈற்று வியங்கோள்
வினைமுற்று.
( இந்நாலு குறட்பாவும் பிறர் செய்த தீங்கினைப் பொறுத்துக்கொள்ளுதல்பற்றிக் கூறுகின்றன. )
9.துறுந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
விளக்கம்: கொடிய சொற்களை பேசுபவர்கள் முன் பொறுமையாக இருப்பது துறவிகளை விட மேலாகக் கருதுவர்.
சொற்பொருள் : துறந்தார்- பற்றினை விட்டவர்; இறந்தார் – வரம்பு கடந்தவர்; இன்னா – தீய; நோற்கிற்பவர் – பொறுப்பவர்.
இலக்கணக்குறிப்பு : இறந்தார், துறந்தார், நோற்கிற்பவர் – வினையாலணையும்பெயர்கள்; இன்னாச்சொல் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
10.உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
விளக்கம்: நோன்பு இருப்பவர்களை விடத் தம்மை இகழ்பவர்களை பொறுத்து கொள்பவர்களை மேலானவர்களாகக் கருதுவர்.
சொற்பொருள் : நோற்பார் – நோன்பு மேற்கொள்பவர்; இன்னாச்சொல் – தீய சொல்.
இலக்கணக்குறிப்பு : உண்ணாது – வினையெச்சம்.
( இவ்விரு குறட்பாவும் பிறரின் இழிச்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல் பற்றிக் கூறுகின்றன.)