வினா எழுத்துகள்
March 7, 2025 2025-05-13 12:49வினா எழுத்துகள்
வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் என்று பெயர்.
எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துக்கள் ஆகும். இந்த வினா எழுத்துக்கள் சில சொல்லின் முதலிலும், சில சொல்லின் இறுதியிலும் வரும்.
சில வினா எழுத்துகள் மொழி முதலிலும், சில வினா எழுத்துகள் மொழி இறுதியிலும், சில வினா எழுத்துகள் மொழி முதலிலும், இடையிலும் இடம்பெறுவதைக் காணலாம்.
மொழி முதல் |
எ,
யா
|
எப்படி?
யார்?
|
ஏ,
யா
|
மொழி இறுதி |
ஆ,
ஓ
|
அவனா?,
அவனோ?
|
அவன் + ஆ = னா,
அவன் + ஓ = னோ
|
மொழி முதலும், இறுதியும் |
ஏ
|
ஏன்?,
நீதானே?
|
ஏ,
நீதான் + ஏ = னே
|
எ, யா, முதலும் ஆ, ஓ. ஈற்றும் ஏ, இருவழியும் வினா ஆகும்மே.
என்று நன்னூல் நூற்பா – 67இல் பவணந்தி முனிவர் கூறுகிறார்.
வினாவைக் கீழ்க்காணும் இரு தன்மையில் பகுக்கின்றனர்.
1. | அகவினா |
2. | புறவினா |
1. அகவினா :
என்ன? எங்கு? யார்? ஏன்?
இச்சொற்களில் எ, ஏ, யா ஆகிய எழுத்துகள் வினாப் பொருளை வலியுறுத்தி வருகின்றன.
சொற்களில் உள்ள வினா எழுத்துகளான எ, ஏ, யா ஆகிய எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது.
எ + ன்ன, எ + ங்கு, யா + ர், ஏ + ன்
வினா எழுத்துகள் சொல்லுக்கு உள்ளேயே இருந்து வினாப் பொருளை உணர்த்துவதால் இது அகவினா எனப்படும். அகம் + வினா = அகவினா.
2. புறவினா :
அவனா? வருவானோ? எப்படி? எம்மரம்? அவளா? நின்றானா? தருவாளா?
இச்சொற்களில் எ, ஆ, ஓ ஆகிய எழுத்துகள் வினாப் பொருளை வலியுறுத்தி வருகின்றன.
சொற்களில் உள்ள வினா எழுத்துகளான எ, ஆ, ஓ ஆகிய எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
அவன் + ஆ (னா?) வருவான் + ஓ (னோ?) எ + படி (எப்படி?) எ + மரம் (எம்மரம்?) அவள் + ஆ (ளா?) நின்றான் + ஆ (னா?) தருவாள் + ஆ (ளா?)
வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து வினாப் பொருளை உணர்த்துவதால் இது புறவினா எனப்படும். புறம் + வினா = புறவினா.
வினா
தாம் எதிர்பார்க்கும் கருத்தைப் பெறுவதற்கு ஒருவரிடம் எவ்வாறு வினவ வேண்டும் என்பதை விளக்குவது வினாப்பகுதி. வினா ஆறு வகைப்படும்.
1. அறி வினா
தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்.
சான்று
மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்
2. அறியா வினா
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
சான்று
ஆசிரியரிடம், “இந்த கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்
3. ஐய வினா
தான் ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது
சான்று
“இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல் .
4. கொளல் வினா
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.
சான்று
“ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்
5. கொடை வினா
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது.
சான்று
“என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்.
6. ஏவல் வினா
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுதல்
சான்று
“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.
விடை
வினாக்களுக்குத் தக்கவாறு கூறப்படும் விடை எட்டு வகைப்படும்.
சுட்டு விடை
1. சுட்டிக் கூறும் விடை “கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல்
2. மறை விடை
மறுத்துக் கூறும் விடை “கடைக்கு போவாயா?” என்ற கேள்விக்குப் ‘போக மாட்டேன்’ என மறுத்துக் கூறல்
3. நேர் விடை
உடன்பட்டுக் கூறும் விடை “கடைக்கு போவாயா?” என்ற கேள்விக்குப் ‘போவேன்’ என்று உடன்பட்டுக் கூறல்.
4. ஏவல் விடை
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை. “இது செய்வாயா?” என்று வினவியபோது, ‘நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது
5. வினா எதிர் வினாதல் விடை
வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது. “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு, ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது
6. உற்றது உரைத்தல் விடை
வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல். “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்குக், ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது
7. உறுவது கூறல் விடை
வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல். “நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்குக், ‘கால் வலிக்கும்’ என்று உறுவதைக் கூறுவது
8. இனமொழி விடை
வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல். “உனக்கு கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது.
இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது ………… வினா. அதோ, அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது ………. விடை. (அறியா வினா, சுட்டு விடை)