வேளாண் முறைகள்
June 20, 2025 2025-07-01 7:15வேளாண் முறைகள்
நீர்ப்பாசனம்
வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால், வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
நீர்ப்பாசன ஆதாரங்கள் (அ) மூலங்கள்
- கால்வாய் பாசனம்
- கிணற்றுப் பாசனம்
- ஏரிப் பாசனம்
கால்வாய் பாசனம்
கால்வாய் பாசனம் இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர்ப்பாசன ஆதாரமாகும். தாழ்வான மற்றும் சமமான நிலப்பகுதி, பருமன் மிகுந்த வளமான மண், வற்றாத நீர் மூலங்கள் மற்றும் அதிக நீர்பிடிப்புக் கொண்ட பகுதிகளில் கால்வாய் பாசனம் முக்கிய ஆதாரமாக உள்ளது. கால்வாய்ப் பாசனத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
- வெள்ளப் பெருக்கு கால்வாய்
இவ்வகை கால்வாய்களில் ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் இன்றி தண்ணீர் கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது. இவ்வகை கால்வாய்கள் வெள்ளக் காலங்களில் தண்ணீரை திசை திருப்பப் பயன்படுவதோடு மழைக்காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.
- வற்றாத கால்வாய்
இவ்வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதலாகும். கால்வாய் பாசனத்தில் 60 சதவிகிதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன.
கிணற்றுப் பாசனம்
கிணறு என்பது புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியின் மேற்பரப்பிற்கு கொண்டுவருதல் ஆகும். இது நாட்டின் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பான ஆதாரமாக உள்ளது. மழைப்பொழிவு குறைவான பகுதிகளிலும் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாத பகுதிகளிலும் கிணற்றுப் பாசனம் அவசியமாகிறது. கிணறுகள் இரண்டு வகைப்படும் அவை:
- திறந்தவெளிக் கிணறுகள்
- ஆழ்துளைக் கிணறுகள்
திறந்த வெளிக் கிணறுகள்
நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகின்றது. இப்பாசனம் கங்கை சமவெளி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
ஆழ்த்துளைக் கிணறு
ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின் மிகை பகுதிகள் மற்றும் மென்பாறைகள் கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது.
ஏரிப்பாசனம்
ஏரி என்பது புவியின் மேற்பகுதியில் இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்வான நீர் தேங்கும் பகுதியாகும். பொதுவாக இவை ஆற்றின் குறுக்கே ஏற்படுத்தப்பட்டு ஏரியைச் சுற்றிலும் கரைகள் கட்டப்படுகின்றன. இங்கு நீரைச் சேகரித்து வேளாண்மை மற்றும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏரிப்பாசனம் இந்தியாவின் மிகப் பழமையான பாசன முறையாகும். இப்பாசனமுறை ஏரிகள் மற்றும் குளங்களையும் உள்ளடக்கியது. தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் சிறந்து விளங்க கீழ்க்கண்ட காரணிகள் முக்கியமானவைகளாகும்.
1) கடினமானப் பாறைகளும் சமமற்ற நிலத்தோற்றம் உள்ள பகுதிகளில் கால்வாய்கள், மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு கடினமாக உள்ளது.
2) இயற்கையாக உருவான பள்ளங்கள் நீர்தேக்கங்களாக பயன்படுகின்றன.
3) இப்பகுதியில் வற்றாத ஆறுகள் இல்லாமை.
4) நீர்புகாப் பாறைகளில் நீர் கசிவு ஏற்படாது.
5) குறைவான மக்கள் தொகைப் பரவலும் குறைவான வேளாண் நிலங்களும் உள்ளது.
நவீன நீர்ப்பாசன முறைகள்:
இந்தியாவில் பல நவீன நீர்ப்பாசன முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முதன்மையானவை, சொட்டு நீர்ப்பாசனம், வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மையத் தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகியனவாகும்.
சொட்டு நீர்ப்பாசனம்
இவ்வகை நீர்ப்பாசனம் இஸ்ரேல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் நீரானது குழாய்களில் உள்ள துவாரங்கள் வழியாக நீர் துளிகளாக பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் 70 சதவிகித நீர் சேமிக்கப்படுகிறது.
தெளிப்பு நீர்ப்பாசனம்
இது மிகவும் எளிமையான மற்றும் சுலபமான நீர்ப்பாசன வகையாகும். இம்முறையில் குழாயில் போடப்பட்டுள்ள நுண் துளைகள் வழியாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. இவ்வகை பாசனத்தை சமனற்ற நிலப்பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம்
இவ்வகை நீர்ப்பானத்தில் நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படுகிறது. 4 மீட்டர் உயரம் வரை உள்ள பயிர் வகைகளுக்கும் இவற்றின் மூலம் நீர் பாசனம் செய்யலாம். கரும்பு மற்றும் சோளப் பயிர்களுக்கும் பாசனம் உதவிகரமாக உள்ளது.
மையத் தெளிப்பு நீர்ப்பாசனம்
இவை வட்டச் சுழற்சி நீர்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றிற்கான உபகரணத்தின் மையப்பகுதியில் உள்ள கருவி சுழன்று அவற்றைச் சுற்றியுள்ள பயிர்களுக்கு நீர்ப் பாசனத்தை அளிக்கிறது.
வேளாண்மை
வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.
வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகள்
1) இயற்கைக் காரணிகள் : நிலத்தோற்றம், காலநிலை மற்றும் மண்
2) அமைப்பு சார் காரணிகள் : வேளாண் நிலத்தின் அளவு, நில உரிமை முறை மற்றும் நிலச்சீர்திருத்தங்கள்
3) உட்கட்டமைப்பு காரணிகள் : நீர்ப்பாசனம், மின்சாரம், போக்குவரத்து, வேளாண் கடன், சந்தை, காப்பீடு மற்றும் சேமிப்பு வசதிகள்,
4) தொழில்நுட்பக் காரணிகள் : அதிக விளைச்சல் தரக்கூடிய வீரிய விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயந்திரங்கள்.
பல்நோக்கு திட்டத்தின் பெயர் ஆறுகள் பயனடையும் மாநிலங்கள்
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் தாமோதர் மேற்கு வங்காளம், ஜார்கண்ட்
பக்ரா நங்கல் திட்டம் (உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணை) சட்லஜ் பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான்
ஹிராகுட் திட்டம் (உலகின் மிக நீளமான அணை) மகாநதி ஒடிசா
கோசி திட்டம் கோசி பீகார் மற்றும் நேபாளம்
துங்கபத்ரா திட்டம் துங்கபத்ரா ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா
தெகிரி அணை பாகீரதி உத்தரகாண்ட்
சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம் சம்பல் இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம்
நாகார்ஜுன சாகர் திட்டம் கிருஷ்ணா ஆந்திரப் பிரதேசம்
சர்தார் சரோவர் திட்டம் நர்மதை மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, இராஜஸ்தான்
இந்திரா காந்தி கால்வாய்த் திட்டம் சட்லஜ் இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா
மேட்டூர் அணை காவிரி தமிழ்நாடு
வேளாண்மையின் வகைகள்
அ) தன்னிறைவு வேளாண்மை
இந்தியாவில் கணிசமான அளவு விவசாயிகள் தன்னிறைவு வேளாண்மை முறையை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்பட்டு நிலத்தின் மொத்த விளைச்சலின் பெரும் பகுதி குடும்ப உறுப்பினர்களால் நுகரப்பட்டு மீதம் உள்ளவை அருகில் உள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, சணல் மற்றும் புகையிலை ஆகியவை சிறிய அளவில் பயிரிடப்படுகின்றன. பாரம்பரிய விவசாய முறையாதலால் குறைவான உற்பத்தியை அளிக்கிறது.
ஆ) இடப்பெயர்வு வேளாண்மை
இவ்வகை வேளாண்மை பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களை அகற்றி சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டு அல்லது மூன்றாண்டுகள் சாகுபடிக்குப் பிறகு, மண்ணின் வளம் குறைவதால் அவ்விடத்தைக் கைவிட்டு மக்கள் வேறொரு புதிய இடத்திற்குச் செல்வர். இவ்வாறாக இது தொடர்ச்சியாக நடைபெறும் சில உணவுபயிர்களும், காய்வகை பயிர்களும் மனித உழைப்பின் மூலம் பயிரிடப்படுகிறது. இவை ‘வெட்டுதல்’ மற்றும் ‘எரித்தல்’ வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.
இ) தீவிர வேளாண்மை
தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும். சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள்,களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.
ஈ) வறண்ட நில வேளாண்மை
நீர் பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் இவ்வகையான வேளாண்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் வறட்சியை தாங்கக் கூடியவை. பாசன வசதி உதவியுடன் பயிரிடப்படும் பயிர்களும் இவ்வேளாண்மையின் கீழ் பயிரிடப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் விளைச்சல் பொதுவாக குறைவாகவே இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் ஓர் ஆண்டிற்கு ஒரு பயிர் மட்டுமே பயிரிடப்படுகின்றது.
உ) கலப்பு வேளாண்மை
கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். விவசாயிகளின் பல தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.
ஊ) படிக்கட்டு முறை வேளாண்மை
இவ்வேளாண்மை முறையானது மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படுகிறது. இப்பகுதி நிலங்கள் இயற்கையாகவே சரிவு அமைப்பை கொண்டவை. மலைச்சரிவுப் பகுதிகள் சமப்படுத்தப்பட்டு நிலம் நிலையான வேளாண் பகுதிகள் போலவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சமமான நிலப்பகுதி குறைவாக இப்பகுதிகளில் உள்ளது. படிக்கட்டு நிலங்கள் சிறிய சமமான நிலப்பகுதிகளாக உருவாக்கப்படுகின்றன. மலைச் சரிவுகளில் உள்ள படிக்கட்டுமுறை அமைப்பு மண் அரிப்பை தடுக்கிறது.
இந்தியாவின் முக்கியப் பயிர்கள்
- உணவுப் பயிர்கள் – நெல், கோதுமை, மக்காச்சோளம், தினைப்பயிர்கள், பருப்பு இன்னும் பிற.
- வாணிபப் பயிர்கள் – கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள்
- தோட்டப்பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்
- தோட்டக்கலைப் பயிர்கள் – பழங்கள்,மலர்கள், மற்றும் காய்கறிகள்
உணவுப்பயிர்கள்
அதிக மக்கள் தொகை காரணமாக இந்திய வேளாண்மை பெரும்பாலும் உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நெல்
நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இது அயனமண்டலப் பயிராகும். 24°C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது. வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது. நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது.
- விதைத் தூவல் முறை
- ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை
- நாற்று நடுதல் முறை
அதிக விளைச்சல் தரும் விதைகள் (CR தான் 205, A.R. தான் 306, CRR 451) அதிகரித்ததன் காரணமாக பல பழமையான நெல் வகைகள் மறைந்து போயின. மேற்கு வங்காளம் (முதல் மாநிலம்), உத்தரப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் 2016ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளன.
கோதுமை:
நெற் பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும். நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 22 சதவிகிதமும், மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 34 சதவிகித பங்கையும் கோதுமை வகிக்கிறது. இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10-15°C வெப்பமும், முதிரும் பருவத்தில் 20- 25°C வெப்பநிலையும் தேவைப்படுகிறது. சுமார் 85 சதவிகிதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது. இதைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.
சோளம்:
நம் நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப்பயிர் சோளம் ஆகும். இது ஆப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்ட பயிராகும். இப்பயிர் வறட்சியான காலநிலையிலும் நன்கு வளரக் கூடியது. இத்தானியத்தில் கார்போ-ஹைட்ரேட், புரதச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பெரும்பாலான ஏழை மக்களுக்கு மலிவான உணவாக விளங்குகிறது. இது நாட்டின் பல பகுதிகளில் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கியப்பயிராகவும் இது விளங்குகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இவற்றின் முதன்மையான உற்பத்தியாளர்களாகும்.
கம்பு:
கம்பு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிராகும். இது ஏழை மக்களின் ஒரு முக்கிய உணவுப் பயிராகும். கம்பு பயிரின் தண்டுப்பகுதி கால்நடைகளுக்கு தீவனமாகவும் வீட்டுக்கு கூறை வேய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது வறண்ட பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. இந்தியாவில் இராஜஸ்தான் முதன்மை உற்பத்தியாளராகவும் அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக உற்பத்தியை தருபவைகளாகவும் உள்ளன.
வாற்கோதுமை (பார்லி):
பார்லி நம் நாட்டின் முக்கியமான தானியப் பயிர்களுள் ஒன்றாகும். இது ஏழைகளின் முக்கிய உணவாக மட்டும் இல்லாமல் பார்லி நீர், மதுபானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரண்டும் இவற்றின் முதன்மை உற்பத்தியாளர்கள் ஆகும்.
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகள் அவரை இனத்தைச் சார்ந்த பல பயிர்களை உள்ளடக்கியதும் தாவர புரதச்சத்து செறிந்ததும் ஆகும். இவை மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. இவை வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து மண் வளத்தை அதிகரிக்கின்றது. எனவே இப்பயிர்கள் பயிர்சுழற்சி பயிரிடல் முறையில் வழக்கமாக பயிரிடப்படுகிறது. உலகில் அதிக பருப்பு உற்பத்தியை செய்யும் நாடு இந்தியாவாகும்.
- வாணிபப்பயிர்கள்
வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வாணிபப்பயிர்கள் என அழைக்கிறோம். வாணிபப்பயிர்கள் கரும்பு, புகையிலை, இழைப்பயிர்கள் (பருத்தி, சணல் மற்றும் புளிச்சக்கீரை) மற்றும் எண்ணெய் வித்துக்களை உள்ளடக்கியதாகும்.
கரும்பு:
இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகும். இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது. இது நம் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை பிரிவாகும். சர்க்கரை உற்பத்தியை தவிர வெல்லம், நாட்டுச்சர்க்கரை, சாராய தொழிற்சாலைக்கான கரும்புச்சாறு மற்றும் காகித தொழிற்சாலைக்கு தேவையான கரும்பு சக்கைகளையும் அளிக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் நம் நாடு கியூபா மற்றும் பிரேசிலுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் முதன்மை உற்பத்தியாளார்களாகும். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாகும்.
பருத்தி:
இந்தியாவின் முக்கியமான வாணிபப் பயிராகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருள்களை அளிக்கிறது. பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி உற்பத்தியில் மற்றும் பரப்பளவில் 79% பங்களிப்பை வழங்குகின்றன.
சணல்:
சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிராகும். இது வண்டல் மண்ணில் நன்கு வளரும். இது சணல் தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது. கோணிப்பைகள், கம்பளங்கள், கயிறு, நூலிழைகள், போர்வைகள், துணிகள், தார்பாலின், திரைச்சீலைகள் போன்ற பொருள்கள் தயாரிக்க சணல் நார் பயன்படுத்தப்படுகிறது. சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்காள மாநிலம் முதலிடம் வகிக்கிறது. பீகார், அசாம் மற்றும் மேகாலயா சணல் பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.
எண்ணெய் வித்துக்கள்
இந்தியர்களின் உணவில் கொழுப்பு சத்தை அதிகம் அளிப்பது எண்ணெய் வித்துக்கள் ஆகும். நிலக்கடலை, கடுகு, எள், ஆளி விதை, சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி விதைகள், நைஜர் விதைகள் போன்றவை முக்கியமான எண்ணெய் வித்துக்கள் ஆகும். இவற்றின் எண்ணெய் மற்றும் பிண்ணாக்குகள், மசகு எண்ணெய், வார்னிஷ், மருந்துப் பொருள்கள், வாசனைப்பொருள்கள், மெழுகு, சோப்பு, உரம், கால்நடைத்தீவனம் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது.
- தோட்டப்பயிர்கள்:
தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது. இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளில் பயிரிடப்படுகிறது. தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும்.
தேயிலை:
தேயிலை அயன மண்டல மற்றும் உபஅயன மண்டல காலநிலைகளில் வளரும் ஒரு பசுமையான தாவரமாகும். தேயிலை பயிரிட அதிக தொழிலாளர்களும், மிதமான நிழலும், அதிக மழையளவும் தேவை. ஆனால் வேர்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு முக்கிய தேயிலை வகைகள்:
- பூகி (BOHEA) – பிறப்பிடம் சீனா
- அசாமிகா (ASSAMICA) – பிறப்பிடம் இந்தியா
இவ்விரண்டின்கலப்பின் மூலம் பலவீரியமுள்ள தேயிலை பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகத்தேயிலை உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் அசாம் ஆகும். தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் தேயிலை பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.
காபி:
இவை நிழல்களில் நன்றாக வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீ முதல் 1500 மீ உயரம் கொண்ட மலைச் சரிவுகளில் நன்றாக வளர்கிறது. காபியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை:
- அராபிகா – தரம் மிக்கதும், இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமாகும்.
- ரொபஸ்டா – தரம் குறைந்த வகை
உலக காபி உற்பத்தியில் இந்தியா 7வது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் காபி உற்பத்தியில் கர்நாடகம் முதன்மையான உற்பத்தியாளராக திகழ்கிறது. இம்மாநிலம் இந்திய உற்பத்தியில் 71%, உலக உற்பத்தியில் 2.5% அளிக்கிறது. (ஆதாரம்: இந்திய காபி வாரியம், 2018).
இரப்பர்:
1902ஆம் ஆண்டு கேரளாவில் முதன் முதலில் இரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது. வெப்ப ஈரப்பத அயனமண்டலகாலநிலைஇரப்பர் பயிரிட ஏற்றதாகும். (வெப்பநிலை 20°C க்கும் அதிகம், மழைப்பொழிவு 300 செ.மீக்கு மேல்) பெரும்பாலான இரப்பர் தோட்டங்கள் சிறு நில உடைமையாளர்களிடம் உள்ளன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் இரப்பர் உற்பத்தியில் முக்கியமான பகுதிகளாகும்.
நறுமணப் பயிர்கள்:
பழங்காலம் தொட்டே நறுமணப் பொருட்களுக்கு இந்தியா உலக புகழ் பெற்றதாகும். இந்நறுமணப்பொருள்கள் பெரும்பாலும் உணவிற்கு சுவையூட்டியாகவும், மருந்துப்பொருள்கள் மற்றும் சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மிளகு, மிளகாய், மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், பட்டை மற்றும் பாக்கு போன்ற நறுமணப் பொருள்கள் இந்தியாவில் பயிரிடப்படுகின்றன. கேரளா நறுமணப் பொருள்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மையான மாநிலம் ஆகும்.
- தோட்டக்கலை பயிர்கள்
தோட்டக் கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள் மற்றும் காய்வகைப் பயிர்களைக் குறிக்கிறது. உடல்நலத்திற்குத் தேவையான தாது சத்துகள், வைட்டமின்கள், நார்சத்துக்கள், பழங்கள் மற்றும் காய்வகைகள் அதிகம் உள்ளதால் இவை மனிதர்களின் அன்றாட உணவில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள்
சிறு மற்றும் குறு நில உடமை – இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் சிறு நில உடைமையாளர்கள் மற்றும் குறு நில உடமையாளர்கள் அதிகம் உள்ளனர்.
அதிக செலவின உள்ளீடுகள் – அதிக விலையின் காரணமாக நல்ல தரமான விதைகள் சிறு-குறு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது.
வளமற்ற மண் – இந்திய மண் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளம் கூட்டல் மற்றும் புதுப்பித்தல் செயல்பாடியின்றி வேளாண்மைக்கு உட்படுத்தபட்டிருப்பதால் மண்ணின் வளம் குன்றி அதன் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன பற்றாக்குறை – இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பகுதியே பாசன வசதியை பெற்றிருக்கின்றது. வேளாண்மை தொழில் நம்பத்தகுந்ததாக மாற நீர் பாசன வசதி உருவாக்கப்பட வேண்டும்.
இயந்திரமயமாக்க பற்றாக்குறை – நாட்டின் பல பகுதிகளில் வேளாண்மை பெரிய அளவில் இயந்திரமயமாக்கப்பட்டிருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களைக் கொண்டு எளிய மற்றும் பழமையான கருவிகள் மூலமே வேளாண்மை செய்யப்படுகிறது.
மண் அரிப்பு – காற்று மற்றும் நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் நிலப் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சந்தை – தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப் பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் விவசாயப் பொருள்களின் விலையில் அதிகமாக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
சேமிப்பு கிடங்கு வசதியில்லாமை – கிராமப்புற பகுதிகள் விவசாய சேமிப்பு கிடங்கு வசதியற்றோ அல்லது முழுமை பெறா நிலையிலோ காணப்படுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்தி பொருள்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து வசதியின்மை – இந்திய வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று மலிவான மற்றும் போதுமான போக்குவரத்து வசதியின்மையாகும்.
மூலதனப் பற்றாக்குறை – வேளாண்மை அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாகும். மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மூலதனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகள்
புரட்சிகள் உற்பத்திகள்
மஞ்சள் புரட்சி எண்ணெய் வித்துக்கள் (குறிப்பாக கடுகு மற்றும் சூரிய காந்தி)
நீலப் புரட்சி மீன்கள் உற்பத்தி
பழுப்புப் புரட்சி தோல், கோக்கோ, மரபுசாரா உற்பத்தி
தங்க நூலிழைப் புரட்சி சணல் உற்பத்தி
பொன் புரட்சி பழங்கள், தேன் மற்றும் தோட்டக்கலைப் பயிர்
சாம்பல் புரட்சி உரங்கள்
இளஞ்சிவப்புப் புரட்சி வெங்காயம், மருந்து பொருள்கள், இறால் உற்பத்தி
பசுமைப் புரட்சி உணவு தானியங்கள்
வெள்ளிப் புரட்சி முட்டை மற்றும் கோழிகள்
வெள்ளி இழைப் புரட்சி பருத்தி
சிவப்புப் புரட்சி இறைச்சி உற்பத்தி, தக்காளி உற்பத்தி
வட்டப் புரட்சி உருளைக்கிழங்கு
வெண்மைப் புரட்சி பால் உற்பத்தி
தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்கள்
பருவம் | விதைக்கும் காலம் | அறுவடை காலம் | முக்கிய பயிர்கள் |
சொர்ணவாரி (சித்திரைப் பட்டம்) | ஏப்ரல் – மே | ஆகஸ்டு – செப்டம்பர் | பருத்தி மற்றும் தினை வகைகள் |
சம்பா (ஆடிபட்டம்) | ஜூலை – ஆகஸ்டு | ஜனவரி – பிப்ரவரி | நெல் மற்றும் கரும்பு |
நவரை | நவம்பர் – டிசம்பர் | பிப்ரவரி – மார்ச் | பழங்கள், காய்கறிகள்,வெள்ளரி, தர்பூசணி |
இரண்டாவது பசுமைப்புரட்சி (இயற்கை வேளாண்மை அல்லது கரிம வேளாண்மை):
இயற்கை வேளாண்மையில் செயற்கை உரங்கள், பூச்சிகொல்லிகள், தாவர வளர்ச்சி சீராக்கிகள் (செயற்கை இரசாயனம்) கால்நடை தீவனக் கலப்புகள் பயன்படுத்துவதில்லை. இவ்வகை விவசாயம், பயிர்சுழற்சி, பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், விவசாயம் அல்லாத கரிம கழிவுகள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் ஆகியனவற்றை மண்வளப் பாதுகாப்பிற்கு நம்பியுள்ளனர். குறைவான விவசாயிகளே இம்முறையினைப் பின்பற்றுகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்:
மேட்டூர் அணை
காவிரி ஆறு சமவெளியில் நுழையும் இடத்திற்கு முன்னுள்ள மலையிடுக்குப் பகுதியில் மேட்டூர் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும். இது சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விளை நிலத்திற்கு நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது.
பவானி சாகர் அணை
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி சாகர் அணை, கோயம்புத்தூர் நகரிலிருந்து ஏறத்தாழ 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை நாட்டின் மண்-கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும்.
அமராவதி அணை
அமராவதி அணை, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டையில் இருந்து ஏறத்தாழ 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணை காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இவ்வணை நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அண்மையில் ஒரு சிறிய நீர் மின் நிலையமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை
கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை செங்கம் தாலுகாவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது சென்னகேசவ மலையின் நடுவே அமைந்துள்ளது. தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள் இதன்மூலம் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை 1895ஆம் ஆண்டு ஆங்கிலேய நிர்வாகத்தால் கட்டப்பட்டது. கேரளாவில், தேக்கடி மலையில் உருவாகும் பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வறட்சிக்குள்ளாகும் சில வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிப்பதற்காக இது கட்டப்பட்டது.
வைகை அணை
ஆண்டிப்பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 111 அடி உயரம் கொண்ட இவ்வணையில் 71 அடி உயரம் மட்டுமே நீரை சேமிக்க முடியும். இவ்வணை மதுரையிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் ஆண்டிப்பட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் திறக்கப்பட்டது.
மணிமுத்தாறு அணை
திருநெல்வேலி நகரிலிருந்து ஏறத்தாழ 47கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.
பாபநாசம் அணை
திருநெல்வேலியிலிருந்து 49கி.மீ தொலைவில் அமைந்துள்ள ‘கரையார் அணை’ என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலங்கள் இதன் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்
இது தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
பரப்பலாறு திட்டம் ஒட்டஞ்சத்திரம் அருகே அமைந்துள்ளது. இதன் நீர் கொள்ளளவுத் திறன் 167 மில்லியன் கன அடிகளாகும். பழனி தாலுகாவில் அமைந்துள்ள இவ்வணை மதுரையிலிருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.