கல்வி
September 20, 2023 2025-01-27 6:22கல்வி
- கற்க கசடறக் கற்பவை கற்றபின் (7th Tamil)
நிற்க அதற்குத் தக.
விளக்கம்: நூல்களைக் குற்றமறக் கற்றல் வேண்டும். கற்றபடி நடத்தல் வேண்டும்.
சொற்பொருள் : கசடு – குற்றம்; நிற்க – கற்றவாறு நடக்க.
2. எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் (7th Tamil)
கண்என்ப வாழும் உயிர்க்கு. *****
விளக்கம்: எண்ணும் எழுத்தும் ஆகிய இவ்விரண்டும் மனிதர்களுக்கு இரு கண்கள் எனக் கூறுவர்.
சொற்பொருள் : எண் – எண்கள், கணக்கு; எழுத்து – இலக்கண இலக்கியங்கள் (வரிவடிவம்)
3. கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்உடையர் கல்லா தவர்.
விளக்கம்: கல்வி கற்றவர் கண் உடையவர்; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவர் ஆவர்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். *****
விளக்கம்: பொருள் : அறிவில் சிறந்த புலவர்களுடன் பேசிப் பழகும்போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவர்களை விட்டுப்பிரியும்போது, “இனி இவரை எப்பொழுது காண்போம்” என எண்ணிப் பிரிவதும் புலவரின் இயல்பாகும்.
சொற்பொருள் : உவப்ப – மகிழ; தலைக்கூடி – ஒன்றுசேர்ந்து.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
குடையரே கல்லா தவர்.
விளக்கம்: செல்வம் உடையவர்முன் ஏழை கவலைப்பட்டு இரந்து நிற்பதுபோலக் கற்றவர்முன் பணிந்து கற்பவரே உயர்ந்தவர்; பணிந்து கல்லாதவர் தாழ்ந்தவர்.
சொற்பொருள் : உடையார் – செல்வர்; இல்லார் – ஏழை; ஏக்கற்று – கவலைப்பட்டு; கடையர் – தாழ்ந்தவர்.
6. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் (7th Tamil)
கற்றனைத்து ஊறும் அறிவு. *****
விளக்கம்: மணற்பாங்கான இடத்தில் தோண்டத்தோண்ட நீர் சுரக்கும். அதுபோல, மக்கள் நூல்களைக் கற்கக்கற்க அவர்தம் அறிவு வளரும்.
சொற்பொருள் : தொட்டனைத்து – தோண்டும் அளவு; மாந்தர் – மக்கள்.
7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
விளக்கம்: கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாகும்; எந்த ஊரும் தன் ஊராகும். இதனை அறிந்தும் சிலர் சாகும்வரை கற்காமல் இருப்பது ஏன்?
சொற்பொருள் : சாந்துணையும் – சாகும்வரையிலும்.
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. *****
விளக்கம்: பொருள் : ஒரு பிறப்பில், தான் கற்றுக்கொள்ளும் நல்லறிவு, இனி எழும் பிறவிகளுக்கும் பாதுகாப்பைத் தரும்.
சொற்பொருள் : ஏமாப்பு – பாதுகாப்பு.
9. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
விளக்கம்: தாங்கள் இன்பம் அடையும் கல்வியால் உலகம் இன்பம் அடைவதனைக் கண்டு, கற்றவர் மேன்மேலும் கற்க விரும்புவர்.
சொற்பொருள் : காமுறுவர் – விரும்புவர்.
10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு (7th Tamil)
மாடல்ல மற்றை யவை. *****
விளக்கம்: ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியாகும். கல்வி தவிர, மற்றச் செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் ஆகமாட்டா.
சொற்பொருள் : விழுச்செல்வம் – சிறந்த செல்வம்; மாடு – செல்வம்.