வாய்மை
September 25, 2023 2025-01-11 13:57வாய்மை
வாய்மை
- வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். *
விளக்கம்: வாய்மை எனப் போற்றப்படும் பண்பு எதுவெனில், அது மற்றவருக்கு எவ்வகையிலும் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.
- பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின். *
விளக்கம்: பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமாயின், பொய்யும் உண்மையாகக் கருதப்படும்.
சொற்பொருள் : புரை – குற்றம்; பயக்கும் – தரும்.
- தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். *
விளக்கம்: தன் நெஞ்சம் அறிந்து பொய் கூறக்கூடாது. கூறின், தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
சொற்பொருள் : சுடும் – வருத்தும்.
- உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
விளக்கம்: ஒருவன் தன் உள்ளம் அறிய பொய்யில்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான்.
- மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.
விளக்கம்: மனத்தொடு பொருந்திய வாய்மை பேசுபவன், தானம் தவம் செய்கிறவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாகக் கருதப்படுவான்.
- பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
விளக்கம்: பொய் பேசாமை ஒருவனுக்கு எல்லாப் புகழையும் தரும்; அஃது அவன் வருந்தாமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் தரும்.
சொற்பொருள் : அன்ன – அவை போல்வன; எய்யாமை – வருந்தாமை.
- பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
விளக்கம்: பொய் சொல்லாமை என்னும் அறத்தை இடைவிடாமல் கடைப்பிடித்தால், வேறு எந்த அறங்களையும் செய்யவேண்டியது இல்லை.
- புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். *
பொருள் : உடல் தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத்தூய்மை வாய்மையால் வெளிப்படும்.
சொற்பொருள் : அகம் – உள்ளம்; அமையும் – உண்டாகும்.
- எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. *
விளக்கம்: சான்றோர்க்குப் புறஇருளை நீக்கும் விளக்குகளைவிட, அகத்தின் இருளை நீக்கும் பொய்பேசாமையே உண்மையான விளக்காகும்.
- யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம்: யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள், எவ்வகையிலும் உண்மையைவிடச் சிறந்தவையாகச் சொல்லத்தக்கவை வேறில்லை.