திரு.வி.கல்யாண சுந்தரனார்
October 19, 2023 2025-01-11 13:56திரு.வி.கல்யாண சுந்தரனார்
திரு.வி.கல்யாண சுந்தரனார்
திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தானார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்; மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். சிறந்த மேடைப் பேச்சாளர்; தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர். இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
பணி : சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகவும், நவசக்தி, தேசபக்தன் முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
காலம் : 26.08.1883 – 17.09.1953
திரு. வி. க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்கள்
இளங்கோவடிகள், திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி
புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகள்
இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு; இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை; இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்; இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரமும், மணிமேகலையும்; இயற்கைத தவம் – சிந்தாமணி; இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்; இயற்கை அன்பு – பெரியபுராணம்; இயற்கை இறையுறையுள் – தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்.
பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி – திரு.வி.க
பொருள் : இசையை இயற்கையோடு இணைத்த பண்பாளனே! பெண்களுக்குத் தாய்மையால் பெருமை சேர்த்த பெருமைக்குரியவனே கொடைத்தன்மையை உயிரினங்களுக்குத் தந்த வள்ளல் தன்மை உடையவனே! உள்ளத்தில் உண்மையை வைத்த உறவுடையோனே! உன்னை வாழ்த்துகின்றேன்.
சொற்பொருள் : பண்-இசை; வண்மை – கொடைத்தன்மை; போற்றி – வாழ்த்துகிறேன்.
பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுவதே பொதுமை வேட்டல். தெய்வநிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.