தாராபாரதி
August 1, 2024 2025-03-08 12:33தாராபாரதி
ஆசிரியர் குறிப்பு : கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர்
விருது பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் முதலியன இவர்தம் நூல்களுள் சில. இவர் வாழ்ந்த காலம் 26.02.1947 முதல் 13.05.2000 வரை.
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!
தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்)
காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க
கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்
கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்)
கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்)
*புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்)
அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள்பசிதீர
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!*
-தாராபாரதி