சிந்து சமவெளி நாகரிகம்
January 30, 2025 2025-08-14 7:24சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்
- பழைய கற்காலம் – Palaeolithic age (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்)
- புதிய கற்காலம் – Neolithic age (கி.மு. 10,000 – 4,000 )
- செம்பு கற்காலம் – Chalcolithic age (கி.மு. 3,000 – 1,500 )
- இரும்புக் காலம் – Iron age (கி.மு. 1,500 – 600 )
நாகரிகம் என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான ‘சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் ‘நகரம்’ ஆகும்.
மெசபடோமியா நாகரிகம் 3500 -2000 கிமு (பொ.ஆ.மு)
சிந்துவெளி நாகரிகம் 3300 – 1900 கிமு (பொ.ஆ.மு)
எகிப்து நாகரிகம் 3100 – 1100 கிமு (பொ.ஆ.மு)
சீன நாகரிகம் 1700 -1122 கிமு (பொ.ஆ.மு)
மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள்.
ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்.
ஹரப்பா
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
” பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்றுச் சான்று ஆகும்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது 1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர். அங்கு மணல் மேடு ஒன்றைக் கண்டனர். அதில் தரமான சுட்ட நீண்ட செங்கற்களும், கட்டட இடிபாடுகளும் இருந்ததைக் கண்டனர். அந்தக் கட்டடச் சுவர்களின் நேர்த்தியான செங்கற்களை எடுத்துச் சென்று இரயில் பாதைக் கட்டமைப்புகளைச் செய்து கொண்டனர்.
கி.பி (பொ.ஆ) 1920இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்ச- தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.
1924 இந்தியத் ஆய்வுத்துறையின் தொல்பொருள் இயக்குநர் மார்ஷல் ஹரப்பாவிற்கும், மொகஞ்ச-தாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அவை இரண்டுமே ஒரு பெரிய நாகரிகத்தைச் சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.
ஹரப்பா நாகரிகம் மொகஞ்ச-தாரோவை விடப் பழமையானது.
மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலோகம் – செம்பு.
மெஹர்கர் – சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும். இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று. மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது. கி.மு (பொ.ஆ.மு) 7000-ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் அதற்கான காரணங்கள் :
*சிறப்பான நகரத் திட்டமிடல் * சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு * தூய்மைக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
* தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் * விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கானத் திடமான அடித்தளம்
தெருக்களும் வீடுகளும்
சட்டக வடிவமைப்பைக் தெருக்கள் கொண்டிருந்தன. தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன. சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளைக் கொண்டதாகவும் இருந்தன.
வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாகக் காணப்படுகின்றன. பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும் ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன. பொதுவாக வீடுகளில் ஜன்னல்கள் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன. வீடுகளின்முன் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன. சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான செங்கற்கள் சீரான அளவுகள் உடையதாகவே இருந்தன. கூரைகள் சமதளமாக இருந்தன.
அரண்மனைகளோ, வழிபாட்டுத்தலங்களோ இருந்ததைத் தீர்மானிக்கக் கூடிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
நகர அமைப்பு
சிந்துவெளிநகரங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, நகரின் வடபகுதி குறுகலாகவும் உயரமாகவும் இருந்தது. அந்நகரின் கிழக்குப்பகுதி விரிந்தும், சற்றுத்தாழ்வாகவும் அமைந்துள்ளது. வல்லுநர்களால் திட்டமிடப்பட்ட பின்னரே நகரங்கள் கட்டமைக்கப்பட்டன.
ஆட்சிமுறை
பொதுக் கழிவுநீர்த் திட்டம், பொதுக்குளம், பொதுமண்டபம், தெரு விளக்குகள், தெருக்களில் காணப்படும் குப்பைத்தொட்டிகள் போன்றவை அங்கு நகர நிருவாகம் சிறப்பாகச் செயல்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
கழிவு நீர் அமைப்பு
ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது. வடிகால்கள் செங்கற்களைக் கொண்டும் கல்தட்டைகளைக் கொண்டும் மூடப்பட்டிருந்தன.
வடிகால் கழிவு நீர் தேங்காமல் செல்ல வசதியாக லேசான மண்சரிவைக் கொண்டிருந்தது. கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்துவதற்கான துளைகளும் இடைவெளியில் சரியான அமைக்கப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து கழிவுநீர் பல தெருக்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலமாக முக்கிய வடிகால்களைச் சென்றடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.
பெருங்குளம் – மொகஞ்ச-தாரோ
*இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் கசியாத கட்டுமானத்துக்கான மிகப் பழமையான சான்று எனலாம்.
* இக்குளத்தின்சுவர்கள்சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக சுவரிலும், தளத்திலும் பல அடுக்குகள் இயற்கைத் தார் கொண்டு பூசப்பட்டிருந்தன.
*வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் உள்ளன.
*அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீர் இறைக்கப்பட்டு பெருங்குளத்தில் விடப்பட்டது. உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேறவும் வகை செய்யப்பட்டிருந்தது.
தானியக் களஞ்சியம் – ஹரப்பா
* தானியக் களஞ்சியம் செங்கற்களால் அடித்தளமிடப்பட்ட, பெரிய, உறுதியான கட்டட அமைப்பு.
* தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.
மாபெரும் கட்டடங்கள்
மொகஞ்ச-தாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு ஆகும். இது 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.
வணிகம் மற்றும் போக்குவரத்து
ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர்.
* தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவைகள் அவர்களால் பொருட்களின் பயன்படுத்தப்பட்டன. நீளத்தை அளவிட, அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினர்.
* அவர்கள் சக்கர வண்டிகளைப் பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத, திடமான சக்கரங்களைப் பயன்படுத்தினர்.
மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்துவெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளைக் குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளமை இதை உறுதிப்படுத்துகிறது.
- சுமேரியாவின் அக்காடியப் பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் – சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாக நாரம் சின் குறித்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
* போக்குவரத்திற்குக் காளைகளைப் பயன்படுத்தினர்.
*பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப் பட்டதைப் போன்று உருளை வடிவ முத்திரைகள் சிந்து வெளிப்பகுதியிலும் காணப்படுகின்றன. இது இந்த இரு பகுதிகளுக்கும் இடையில் வணிகம் நடைபெற்றதைக் காட்டுகிறது.
கப்பல் கட்டும் தளம் – லோத்தல்
தற்கால குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் மேற்கொண்ட கடல் வணிகத்தை உறுதிப்படுத்துகிறது. லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மொகஞ்ச-தாரோ-தலைவர்
அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை மொகஞ்ச-தாரோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது நெற்றியில் ஒரு தலைப்பட்டையுடனும் வலது கை மேல்பகுதியில் ஒரு சிறிய அணிகலனுடனும் காணப்படுகிறது.அதன் தலை முடியும், தாடியும் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்படுகிறது.
காதுகளின் கீழ் காணப்படும் இரு துளைகள், தலையில் அணியப்படும் அணிகலனைக் காதுவரை இணைக்க ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இடதுதோள் பூக்கள் மற்றும் வளையங்களின் வடிவமைப்பில் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலங்கியால் மூடப்பட்டுள்ளது. இது போன்ற வடிவமைப்பு அப்பகுதியில் உள்ள மக்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்பம்
சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளை உருவாக்கினர். குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. கட்டடத் தொழில், நிலம் தேறுதல், மனை அளவீடு, கால்கோளுதல், தரமான கட்டுமானப் பொருள்களைத் தேர்ந்தெடுத்தல், வடிவக் கணித அமைப்புப் பற்றி அறிதல் முதலிய பயன்பாட்டு அறிவியல் (Applied Science) தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன.
தொழில்
சிந்துவெளியில் பயிர்த்தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர், நெசவாளர், மண்பாண்டம் செய்வோர், உலோக வேலைசெய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள் காணப்பட்டனர்; விவசாயம் மக்களின் முக்கியத் தொழிலாகும்; கோதுமை, பார்லி போன்ற வற்றை விளைவித்தனர்; மிஞ்சிய தானியங்களைக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்.
உடைகள்
மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர். வேட்டி போன்றவற்றைக் கீழ் ஆடையாகவும், சால்வையை மேல் ஆடையாகவும் அணிந்தனர்.
அணிகலன்கள்
தங்கம், வெள்ளி, தந்தம், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை அணிகலன்கள் செய்யப் பயன்படுத்தினர். ஏழை மக்கள் கிளிஞ்சல், தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தனர். ஆண், பெண் இருபாலாரும் பற்பல அணிகலன்களை அணிந்தனர்.
கலைகள்
சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா (TERRACOTTA) எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர். பறவைகள், விலங்குகள், ஆண், பெண் உருவங்கள், எருதுகளால் இழுக்கப்படும் ஓட்டுபவருடன் கூடிய வண்டி, மண்பாண்டங்கள், குவளைகள் போன்ற பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிற்பம்
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை.
- தாடியுடன் காட்சிதரும் ஒருவரின் சுண்ணாம்புக்கல் சிலை முதலியன, அக்கால மக்களின் சிற்ப வேலைத்திறனுக்குச் சிறந்த சான்றுகளாகும்.
சமயம்
மொகஞ்சதாரோவில் கண்டு எடுக்கப்பட்ட பொருள்கள் அங்கு வாழ்ந்த மக்களின் சமயக் கோட்பாடுகளையும் சமயப்பற்றினையும் அறிவிக்கின்றன. பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம் முதலியவற்றையும் வணங்கினர். இறந்தவர்களைப் புதைக்கும்போது அச்சடலங்களுடன் உணவு, அணிகலன்களையும் சேர்த்துத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
நகரங்களின் அழிவிற்கான காரணங்கள்
- மரத்தால் ஆன பொருள்கள் காணப்பெறாமையால் அவை பெருந்தீயில் அழிந்திருக்கலாம்.
- உள்நாட்டுப் போரில் தோன்றிய கலகத்தின் விளைவாகவும் அவை அழிந்திருக்கலாம்.
- இயற்கைக் காரணங்களாலும், அடிக்கடி மாறும் தன்மையுள்ள சிந்து ஆற்றின் வெள்ளப் பெருக்கினாலும் அவை புதையுண்டிருக்கலாம்.
- ஆரியர்கள், இந்நகரங்களை அழித்து முன்னேறியிருக்கலாம்.
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்குவியல், அந்நகரம் அயலவரின் படை யெடுப்புக்கும் உள்ளாகி இருக்கலாம் எனச் சான்று பகர்கிறது.