பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
August 15, 2023 2025-02-26 5:33பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர் | அ.கல்யாணசுந்தரம் |
பெற்றோர் | அருணாச்சலனார் – விசாலாட்சி |
ஊர் | தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு |
காலம் | 13.04.1930 – 08.10.1959 |
துணைவியார் | கௌரவம்மாள் |
வாழ்க்கைக் குறிப்பு
- எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
- ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.
- இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர்.
- இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபாவில் இணைந்தார்.
- இவர் நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.
- தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் பரணிடப்பட்டது.
- மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் ஆவார்.
- பாரதிதாசனால் “எனது வலதுகை” என்று புகழப்பட்டவர் ஆவார்.
- உடுமலை நாராயணகவி இவரை “அவர் கோட்டை நான் பேட்டை” எனக் கூறியுள்ளார்.
- இவரை “நீ மீண்டும் தோன்றிய பாரதியடா” என ஜீவானந்தம் கூறியுள்ளார்.
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
பாடல்
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே! – நீ…
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே!
நாட்டின் – நெறிதவறி நடந்துவிடாதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது – பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது!
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிடவேணும் – நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்!
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்
பெற்றதாயின் புகழும், நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும். – நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்
இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
செய்யும் தொழிலே தெய்வம்
செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி – கொண்ட கடமைதான் நமக்குப் பதவி (செய்யும்…)
பயிரை வளர்த்தால் பலனாகும் – அது உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குல மானமுண்டு வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம் (செய்யும்…)
காயும் ஒருநாள் கனியாகும் – நம் கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும் – நம் கனவும் நினைவும் நிலையாகும் –
உடல் வாடினாலும் பசி மீறினாலும் – வழிமாறிடாமலே வாழ்ந்திடுவோம். (செய்யும்…) – பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்