வேலுநாச்சியார்
August 17, 2023
2025-03-08 12:46
வேலுநாச்சியார்
வேலுநாச்சியார்:
-
இராமநாத புரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.
-
வேலுநாச்சியாரின் காலம் 1730-1796
-
தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.
-
சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.
-
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
- ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சிமையின்மீது படையெடுத்தனர்.
-
காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.
-
திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே வீரமங்கை வேலுநாச்சியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அமைச்சர் தாண்டவராயர், தளபதிகளாகிய பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர்.
-
நமது வீரர்களுடன் ஐதர்அலியின் ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களும் சேர்ந்து விட்டனர். ஆகவே, நாளை சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் அல்லவா? ” என்று கேட்டார் பெரிய மருது. ”என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில். எனவே, நாம் முதலில் காளையார் கோவிலைக் கைப்பற்றுவோம். பிறகு சிவகங்கையை மீட்போம்” என்றார் வேலு நாச்சியார்.
-
அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். மறுநாள் காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர். காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடியது.
-
தங்களைக் காட்டிக் கொடுக்குமாறு உடையாள் என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்களாம். அவர் மறுத்ததால் கொன்றுவிட்டார்களாம். அவருக்கு நாம் உரிய முறையில் சிறப்புச் செய்ய வேண்டும்” என்றார் அமைச்சர் தாண்டவராயர். ”அவருக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பாடு செய்தார் வேலுநாச்சியார்.
-
விசயதசமிக்கு முதல் நாள் சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டது படை. படை மறுநாள் காலை சிவகங்கையை அடைந்தது. ”அரசியாரே! நான் நமது பெண்கள் படைப்பிரிவுடன் மாறுவேடத்தில் உள்ளே செல்கிறேன். உள்ளே சென்றதும் அங்குள்ள ஆயுதக் கிடங்குக்கு எப்படியாவது தீ வைத்து விடுகிறேன். தீ எரிவது தெரிந்ததும் நம் படை உள்ளே நுழையட்டும்” என்று கூறினார் குயிலி. ”அப்படியே ஆகட்டும்” என்றார் வேலு நாச்சியார்.
-
குயிலியும் பெண்கள் படையினரும் கோட்டைக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் கோட்டைக்குள் பெரும் கூச்சல் எழுந்தது. உள்ளே உயரமாகத் தீ எரிவது தெரிந்தது. ”நமது படை உள்ளே நுழையட்டும்” என்று ஆணையிட்டார் வேலுநாச்சியார். படை வீரர்கள் கோட்டைக்குள் பாய்ந்து சென்றனர். ஆங்கிலேயரின் படையுடன் கடுமையாகப் போரிட்டனர். இறுதியில் ஆங்கிலப்படை தோல்வியடைந்து கோட்டையைவிட்டு ஓடியது.
-
வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர்அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது.
-
வேலுநாச்சியார் சிவகங்கைய மீட்ட ஆண்டு 1780.
-
ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் – வேலு நாச்சியார்.